Thursday, July 18, 2013

வாலி நீ வாழீ

நாளும்
பூமாலைத் தொடுத்து
தெய்வத்தின் திருமார்பில்
சூடிக் களித்தலே
வாழ்வெனக் கொண்டவனின்
பூதவுடலுக்கு
பூமாலைச் சூட நேர்வது அவலமே

நாளும்
பாமாலைச் சூடி
தமிழன்னை திருப்பாதம்
படைத்துக் களித்தலே
வாழ்வெனக் கொண்டவனே
உன்மறைவுக்கு
இரங்கற்பா பாட நேர்ந்ததும் அவலமே

என்றும்
மரபுக் கவிதையின் சந்த அழகையும்
வசன கவிதையின் இறுக்கத்தையும்
ஒன்றாக இணைத்துத் தந்த உன் கவித்துவம்
அனைவருக்கும் உவப்பாய் இருந்ததைப் போலவே

பழுத்த
ஆன்மீக வாதியாய் பகுத்தறிவு மேடைகளிலும்
பகுத்தறிவாளனாய் ஆன்மீகத் தளங்களிலும்
வேஷங்களின்றி ராஜ நடைபோட்டு நீ திரிந்ததும்
அனைவருக்கும் ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது

கோரிக்கையாக அன்று நீ எழுதிய ஒரு பாடல்
பட்டிதொட்டியெல்லாம்
நாடு நகரமெல்லாம்
காலக்கணக்கற்று
ஆண்டவன் செவிகளைத் துளைக்க
இரண்டாவது முறையாகத்
தோற்க நேர்ந்தமைக்காக
 எமனவன் இன்று
பழிதீர்த்துக் கொண்டுள்ளான் பாவி

கல்லுக்குள் ஈரம்போல்
எருமை உயிர்  மரணம் பாசக்கயிறு என
எந்த நாளும் கடுமையாய்த் திரிந்து
மரத்துப் போன அவன் மனது
உன் இயைபுத் தொடையின் அழகிலும்
சிந்தனைச் செறிவின் உயர்விலும் மயங்கிட
அவசரப்பட்டு விட்டான் மடையன்

ஆயினும்
மெய்யென்று  மேனியை
யார் சொன்னது எனச் சாடிய உனக்கு
புகழுடலே மெய்யெனப் புரியாதா இருக்கும் ?

கவியால்
தமிழோடு தமிழாகக் கலந்து
காலம் கடக்கும் உனக்கு
மரணமில்லை என்பது தெரியாதா இருக்கும் ?

வாலி நீ வாழீ

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// தமிழோடு தமிழாகக் கலந்து காலம் கடக்கும் உனக்கு மரணமில்லை... ///

ஆழ்ந்த இரங்கல்கள்...

சசிகலா said...

கவியால்
தமிழோடு தமிழாகக் கலந்து
காலம் கடக்கும் உனக்கு
மரணமில்லை...
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா. என்றும் மரணமில்லை அவருக்கு எல்லோர் உள்ளத்திலும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்றென்றம் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

அம்பாளடியாள் said...

என்றும் எமது நினைவில் கலந்திருக்கும்
கவியின்பத் தேனுக்குக் காலனும் அடிமைதான்
கலக்கம் ஏனோ !! எமது கண்ணீர் அஞ்சலியும்
இங்கே உரித்தாகட்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி
ஐயா .

ராஜி said...

இறந்தும் இறவாமல் என்றென்றும் நம்மோடுதான் இருக்க போகிறார் அவர் எழுதிய பாடல் வடிவில்!!

Anonymous said...

கண்ணதாசனுக்கு அடுத்தாக எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் வாலி.ஆழ்ந்த இரங்கல்கள்

சக்தி கல்வி மையம் said...

ஆழ்ந்த இரங்கல்கள்

ramkaran said...

வாலியின் ஆன்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோமாக !

cheena (சீனா) said...

அன்பின் ரமணி - நல்லதொரு இரங்கல் கவிதை - அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

”தளிர் சுரேஷ்” said...

இரங்கற்பா சிறப்பு! அருமையான கவிஞரை காலம் அழைத்துக் கொண்டது! ஆழ்ந்த இரங்கல்கள்!

மாதேவி said...

அஞ்சலிகள்.

கவியால் தமிழோடு தமிழாகக் கலந்து என்றும் வாழ்வார்..

தி.தமிழ் இளங்கோ said...

பகுத்தறிவாளனாய் ஆன்மீகத் தளங்களிலும்
வேஷங்களின்றி ராஜ நடைபோட்டு நீ திரிந்ததும்
அனைவருக்கும் ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது //

கவிஞரைப் பற்றி கவிஞர் ரமணியின் வரிகள்!
கவிஞர் வாலிக்கு தாங்கள் செய்த கவிதாஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன்! அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்!

G.M Balasubramaniam said...

பாவேந்தன் உடலம் வீழ்ந்தது. ஊரெல்லாம் அவன் புகழ் சிலகாலம் ஒலிக்கும். பின் அவன் மறக்கப்பட்டு விடுவான்.என்பது நியதி ஆனாலும் அவனது பாடல்கள் என்றென்றும் ஒலிக்கும். பாடல்களைக் கேட்கும் தோறும் அவன் நினைவு வரும் . அவனை மறக்க முடியாது.அவன் நினைவில் .....

இளமதி said...

மனந்தொட்ட நல்ல இரங்கற்பா ஐயா!

உங்களுடன் நானும் கண்ணீர் அஞ்சலியோடு...

கவியாழி said...

ஆன்மீக வாதியாய் பகுத்தறிவு மேடைகளிலும்
பகுத்தறிவாளனாய்//எல்லாமுமாய் மனிதனாய் இருந்தார்

வெங்கட் நாகராஜ் said...

//கவியால்
தமிழோடு தமிழாகக் கலந்து
காலம் கடக்கும் உனக்கு
மரணமில்லை //


சிறப்பான அஞ்சலி....

என்றும் அவர் பாடல்கள் மூலம் நம்மிடையே இருப்பார் என்பது நிச்சயம்.

Unknown said...

மனம் விட்டு நீங்கா பாடல்கள் தந்தவன்,
வாழியவே நம் நினைவுகளில்..!

vimalanperali said...

பாஇப்புகளுக்கு என்றுமே மரணம் இல்லை.வாலி நம்முடன்தான் இருக்கிறார் இன்னும்,ஆழ்ந்த இறங்கற்பா/அனுதாபங்கள் அன்னாரின் குடும்பத்திற்கு/

ADHI VENKAT said...

அவர் எழுதிய வரிகள் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

கீதமஞ்சரி said...

ஆழ்ந்த அவதானிப்போடு கவிஞரைப் பற்றி எழுதப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும் நெஞ்சின் ஆழம் பாய்கின்றன. கவிஞரைச் சிறப்பிக்கும் கவியிரங்கல் அருமை.

Unknown said...

கவிஞர் வாலிக்கு அழகான பாமாலை....... இந்த கவிதை அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி, ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்த்து அவரை கவுரவ படுத்தி விட்டீர்கள். கண்கள் கலங்குகிறது எனக்கு.

கோமதி அரசு said...

கவியால்
தமிழோடு தமிழாகக் கலந்து
காலம் கடக்கும் உனக்கு
மரணமில்லை என்பது தெரியாதா இருக்கும் ?

வாலி நீ வாழீ//

வாலிக்கு அழகான இரங்கல் கவிதை.
வாலி என்றும் வாழ்வார் உண்மை.

Post a Comment