Sunday, May 10, 2015

தொடர் ஓட்டம்

எப்போது  பள்ளி ஆண்டு விழா
போட்டிகளைக் காண வந்தாலும்
தொடர் ஓட்டம் நடக்கும் போட்டியையே
காணவிழைவார் அப்பா
குறிப்பாக குச்சியைக் கைமாற்றி ஓடும்
அந்த " ரிலே " ஓட்டம்

அவரது அதீத ஆர்வத்தில்
ஏதோ காரணம் இருப்பதைப் புரிந்து
ஒருமுறை விளக்கம் கேட்டேன்

"இது எல்லா போட்டியையும் போல அல்ல
இந்த நால்வரும் சரியாக ஓட வேண்டும்
ஒருவர் பின் தங்கினாலும்   தோல்விதான்
குறிப்பாக அந்தக் குச்சி வீழாது ஓட வேண்டும்" என்றார்

'இதில் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது
எல்லா போட்டிகளையும் போல
இதற்கும் சில விதிகள் " என்றேன்

 "நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்
உன் தாத்தாதான்  எனக்கு விளக்கினார்
அந்தக் குச்சி என்பது
பாரம்பரிய குடும்பப் பெருமைக்கும்
செல்வச் சிறப்பிற்குமான ஒரு குறியீடு
நான் விரைவாக ஓடி
உன்னிடன் சேர்ப்பது போலவே
உன் வாரிசுகளிடமும் நீ சேர்க்கவேண்டும்
ஒருவன் தடுமாறினாலும் அதனைச் சீராக்க
நான்கு தலை முறை ஆகிவிடும் " என்றார்

நான் புரியாது விழித்தேன்
அவரே தொடர்ந்தார்

"இப்படியும் சொல்லலாம்
செல்வச் செழிப்பில்  வாழ்ந்தாலும்
முறையாக வளர்க்காத  உழைப்பாளியின்  மகன்
சோம்பேறி ஆகிப் போவான்
சோம்பேறிக்குப் பிறந்த பையன்
கடனாளி ஆகிப்போவான்
கடனாளிக்குப் பிறந்த மகன்
கடுமையான உழைப்பால்தான்
சராசரி நிலைக்கு வருவான்
சராசரியின் மகன்
கடினமான உழைப்பினால்தான்
மீண்டும் பழைய நிலையை  அடையக் கூடும்
அதற்கு முன்னூறு வருட்ங்கள் ஆகிப்போகும் " என்றார்

அப்போது சரியாகப் புரியவில்லை ஆயினும்
கால ஓட்டத்தில் புரியத் துவங்கியது

 நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்

11 comments:

ஸ்ரீராம். said...

அருமையான விளக்கம்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை. தொடரட்டும் பதிவுகள்.

மகிழ்நிறை said...

அட! தொடர் ஓட்டத்தில் இவ்ளோ இருக்கா!! அருமையாய் சொன்னீங்க சார்:)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர் ஓட்டம் என்ற சிறப்பான சிந்தனையை ஒவ்வொரு பெற்றோரும் கடைபிடித்து, குழந்தைகளுக்குச் சொல்லித்தரவேண்டிய ஒன்றாகும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விளக்கம்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு இப்போது தொடர் ஓட்டம் பார்க்க என் புதல்வனை அழைத்துப் போகிறேன்//

பரம்பரை ஓட்டம் தொய்வில்லாமல் தொடரட்டும். வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

நல்ல அறிவுரை... கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு இப்போது தொடர் ஓட்டம் பார்க்க என் புதல்வனை அழைத்துப் போகிறேன்//

பரம்பரை ஓட்டம் தொய்வில்லாமல் தொடரட்டும். வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

ரிலே ரேஸ் -ஐ குடும்ப ஓட்டத்துக்கு ஒப்பிட்டு எழுதியது வித்தியாசமான கண்ணோட்டம் வாழ்த்துக்கள்.

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு விளக்கம் நண்பரே! புதியதொரு கண்ணோட்டம்.....அருமை!

Post a Comment