Tuesday, July 14, 2015

விதைத்த ஒன்றே .. நூறாய்...ஆயிரமாய்

முன்பு
எதிர் வீட்டுக்காரரை
எப்போது நினைத்தாலும்
எரிச்சல் எரிச்சலாய் வரும்

என்றும் எப்போதும்
பாராட்டித் தொலைப்பதற்கென்றே
அவரைச் சுற்றி
ஒரு பெருங் கூட்டம் காத்துக் கிடக்கும்

கடந்து செல்வோரைக்
கவரும்படியாகவும்
கைகளுக்கு எட்டும் படியாகவும்
உடலை  மிகச் சாய்த்து வைத்திருந்தும்
எவரும் என்னைத்
தட்டி கொடுத்துச் செல்வதே இல்லை

எரிச்சல் எல்லை கடந்து போக
தடுக்கும் தன்மானத்தையும் புறந்தள்ளி
காரணம்  எதுவாய் இருக்குமென்று
அவரையே கேட்டும் தொலைத்தேன்

"நீ யாரையாவது என்றாவது
பாராட்டியிருக்கிறாயா " என்றார்

"நினவு தெரிந்து இல்லை " என்றேன்

"பாராட்டிப் பார் புரியும் " என்றார்

எரிசலுடன்
சில நாள் உடனிருப்போரைப்
பாராட்டித் தொலைத்தேன்

விளையாட்டாக
சில நாள் எதிர் வருவோரை
 பாராட்டி வைத்தேன்

பாராட்டைத் தொடரத் தொடர
என்னுள் ஏதோ ஒரு மாற்றம்

அதுவரை
எதிர்படுவோரின்
குற்றம் குறைகளை  மட்டுமே
காணப்பழகிய  கண்கள்
மெல்ல மெல்ல
அவர்களிடம்
நிறைவுகளை  மட்டுமே
காணத் துவங்க


பாராட்டுப் பெறுவோரின்
மகிழ்வும்
மனந்திறந்த
 நன்றி அறிவிப்பும்
என்னுள் என்னவோ செய்து போக

இப்போதெல்லாம்
நான் எவ்வித பாராட்டுக்கும்
ஏங்கி நிற்பதே இல்லை

பெறுதலை விட
கொடுப்பதில் உள்ள சுகம்
புரியப் புரிய

பாராட்டத் தக்கவர்களையெல்லாம்
மனந்திறந்து
பாராட்டிக்கொண்டே செல்கிறேன்

இப்போது

எனக்குப் பின்னும்
என்னைப் பாராட்டுவதற்கென்றெ
ஒரு பெருங்கூட்டம்
வரிசை போட்டுக் காத்திருக்கிறது

8 comments:

ஸ்ரீராம். said...

பாஸிட்டிவ் தாட் என்றாலும்.. எதையோ ஒன்றைமறைமுகமாகச் சொல்கிறதோ!

:)))

vimalanperali said...

தட்டிக்கொடுக்க தனி மனம் வேணும்தான்.

தி.தமிழ் இளங்கோ said...

இதயம் பேசுகிறது. தமிழ்மணத்தில் பாராட்டுவோர் பாராட்டைப் பெறுகின்றனர். வாழ்த்துக்கள் அய்யா!

த.ம.3

திண்டுக்கல் தனபாலன் said...

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் - பாராட்டும் குணம்... அதற்குள் மற்ற அனைத்து குணங்களும் அடங்கும்...

பாராட்டுங்க... பாராட்டப்படுவீங்க...

Unknown said...

#எனக்குப் பின்னும்
என்னைப் பாராட்டுவதற்கென்றெ
ஒரு பெருங்கூட்டம்
வரிசை போட்டுக் காத்திருக்கிறது#
பதிவர்கள் நமக்கு மிகவும் பொருத்தமான வாக்கியம் :)

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! நட்பு பாராட்டினால் நட்பு பெருகும்! விரோதம் பாராட்டினால் விரோதம் பெருகும்! எதுவும் நம் கையில்தான் இருக்கிறது!

சென்னை பித்தன் said...

//பெறுதலை விட
கொடுப்பதில் உள்ள சுகம்
புரியப் புரிய//
சூத்திரத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள்

Thulasidharan V Thillaiakathu said...

குற்றம் குறைகளை மட்டுமே
காணப்பழகிய கண்கள்
மெல்ல மெல்ல
அவர்களிடம்
நிறைவுகளை மட்டுமே
காணத் துவங்க//

ஆம் இப்படிச் செய்தால், நிறைய உறவுகள் வளரும்...நம் மனதுதான் காரணம்...

Post a Comment