Friday, July 3, 2015

ஜென் சித்தப்பு

"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "
கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

10 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம்

ஆகா அருமை
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த தியரியும் நன்றாகத் தான் இருக்கு...!

G.M Balasubramaniam said...

என் வாழ்க்கையை எட்டு எட்டாய்ப் பிரித்து அசைபோட்ட பதிவு இருக்கிறது.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

பசி வந்துவிட்டதால், தியரி புரிந்துவிட்டது என வைத்துக்கொள்வோம்.
புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையாக உள்ளது படித்து இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

முன்பே படித்து ரசித்திருந்தாலும் மீண்டுமொரு முறை படித்து ரசித்தேன்.

balaamagi said...

வணக்கம்,
இது தான் சரி
எட்டு ரொம்ப நேருக்கம்,
அருமையான பதிவு,
வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜென் சித்தப்புவின் தத்துவம் சிந்திக்க வைக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை நண்பரே!

Post a Comment