Thursday, February 20, 2020

இழந்த உறவுகள்..






பின்னிப் பிணைந்து
தொடருகிற உறவுகளைவிட
விலகிய
அறுந்த
பகையாகிப்போன
உறவுகளே
அன்றாடம் மனதில்
நிலைத்திருக்கிறது

தவறு அவர்களுடையதே ஆயினும்
சகித்திருக்கலாம்
பொறுத்திருக்கலாம்
எனும்படியாகவும்...

தவறு நம்முடையதாயின்
வருத்தம் தெரிவித்து இருக்கலாம்
மன்னிப்புக் கோரி இருக்கலாம்
எனும்படியாகவும்...

அதன் காரணமாகவே
இனியேனும்
தொடர்கிற உறவுகளில்
எதையும் தவறியும்
இழந்து விடக்கூடாதெனும்
உறுதி கொள்ளும்படியாகவும்..

இழந்த உறவுகளின்
அருமைகளே
பெருமைகளே
நினைவுகளே
எப்போதும் வழிகாட்டிப் போகிறது

அதன் காரணமாகவே
இப்போதெல்லாம்
இருக்கிற உறவுகளை விட
இழந்த உறவுகளே
எப்போதும் மனதில்
நீங்காது நிலைத்திருக்கிறது

6 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான ஆழமான கருத்தை கொண்ட கவிதை.

/தவறு அவர்களுடையதே ஆயினும்
சகித்திருக்கலாம்
பொறுத்திருக்கலாம்
எனும்படியாகவும்...

தவறு நம்முடையதாயின்
வருத்தம் தெரிவித்து இருக்கலாம்
மன்னிப்புக் கோரி இருக்கலாம்
எனும்படியாகவும்.../

ஆம்... உண்மைதான்.. உணர்கிறோம். ஆனால் காலங்கடந்து உணர்கிறோம். அதனால் இழந்த உறவுகள் மறுபடியும் சகஜமாக சேர்ந்து உடன் வராதா என்ற மனச்சுமையோடு மீண்டும் அந்த உறவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒருவித மனப்பான்மையோடு.... நினைவினில் நிறுத்தியபடி... அழகாக கவிதையை முடித்திருக்கிறீர்கள். .. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மனோ சாமிநாதன் said...

ஏனெனில் பிரிந்த உறவுகள் தானே வலியைக்கொடுக்கின்றன! மகிழ்வின் வலிமையை விடவும் வலியின் வலிமை அதிகம்.
எந்த உறவுகளையும் இழந்து விடக்கூடாது என்று சொல்லும் அருமையான கவிதை!

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் ஐயா...

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வது உண்மை.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு. பாராட்டுகள் ஐயா.

Post a Comment