Tuesday, September 27, 2022

தெரிந்து தெளிவோம்..

 


உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்!

உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி ராம ஜன்ம பூமி தொடர்பான வழக்கு விசாரணை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும், வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.

இரு தரப்பிலும் சாட்சிகளாக பலர், நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.'அயோத்தி தான் ராம ஜன்ம பூமி' என தெரிவித்து, தன் வாதங்களை மூத்த வழக்கறிஞர்பராசரன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 'ராமர் இருந்தார் என்பதற்கு, வேதங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை கூறுகிறீர்கள். ராமபிரானின் ஜன்ம பூமி பற்றி, எந்த வேதத்திலாவது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா?' என, பராசரனிடம் கேட்டார்.

நுாற்றுக்கு நுாறு சரி

இதற்கு பராசரனால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அப்போது, சாட்சிகள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து, முதியவர் ஒருவர் எழுந்தார். அவரை தான், ராம ஜன்ம பூமிக்கு ஆதரவான முக்கியமான சாட்சியாக, பராசரன் தெரிவித்திருந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கிரிதர்.அவர் நீதிபதியைப் பார்த்து கூறியதாவது:மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே... ரிக் வேதத்தில்,'ஜைமினியா சம்ஹிதா' பகுதியில், ராம ஜன்ம பூமி பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சரயு நதியின் கரையில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, ராம ஜன்ம பூமிக்கு செல்வதற்கான வழிகளும், துாரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வழிகளை பின்பற்றிச் சென்றால், ஒருவரால், ராம ஜன்மபூமிக்கு நிச்சயம் செல்ல முடியும்.இவ்வாறு, அவர் கூறினார். இதை அவர், எந்த புத்தகத்திலிருந்தும் படித்து காட்டவில்லை; எழுதியும் காட்டவில்லை. மடை திறந்த வெள்ளம் போல், மனதிலிருந்து கூறினார்.

கிரிதர் கூறியது சரிதானா என ஆய்வு செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கிரிதர் கூறியது நுாற்றுக்கு நுாறு சரி என தெரிந்தது. இதை அறிந்த நீதிபதி, 'இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி; அதை, இன்று நான் நேரில் பார்த்தேன்' என, ஆச்சரியத்துடன் கூறினார்.இதைக் கேட்ட கிரிதர், மிகவும்அமைதியாக, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருந்தார்.நீதிபதி இப்படி மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் கூறியதற்கு பின்னணியில், முக்கியமான காரணம் உள்ளது. இதற்கு நாம், இந்திய வரலாற்றை திருப்பிப் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தோமானால், வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அவசியத்தை உணர்வோம்.உத்தர பிரதேசமாநிலம், ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்டிட் ராஜ்தேவ் மிஷ்ரா - சசிதேவி தம்பதிக்கு, 1950ம் ஆண்டு, ஜனவரி, 14ம் தேதி, மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆம், அன்றைய தினம் அவர்களுக்கு, அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, 'கிரிதர்' என, பெயர் வைத்தனர்.இரண்டு மாதத்துக்குப் பின், குழந்தை கிரிதர், கடும் நோயால் பாதிக்கப்பட்டான். அது, குழந்தை கிரிதர் மற்றும் அவனது பெற்றோரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம்... கிரிதருக்கு பார்வை பறிபோனது.

அபார ஞாபக சக்தி

குழந்தை வளர வளர, தன் மகனால் படிக்கவும், எழுதவும்முடியாது என்பதை, கிரிதரின்தந்தை ராஜ்தேவ் புரிந்து கொண்டார். ஆனால், கிரிதரிடம், எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையும், சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்யும் சக்தியும் இருப்பதை அறிந்தார். மேலும், கிரிதருக்கு மறதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், அபார ஞாபக சக்தியும் இருந்தது.

இதனால், மகனில் அருகில் அமர்ந்து, அவனுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தார். வேதத்துக்கு அர்த்தமும் சொல்லி கொடுத்தார். கிரிதருக்கு, 8 வயதான போது, ராமானந்த் வழியைப் பின்பற்றும் மடம் ஒன்றில் சேர்த்தார். மடாதிபதி, கிரிதரை தன் சீடனாக ஏற்று, அவருக்கு, 'ராமபத்ரா' என்ற புதிய பெயரையும் வைத்தார். ராமபத்ராவுக்கு, புதிய வழியை காட்டினார். அவரது நினைவு திறனை அறிந்து, வேதங்கள், புராணங்கள், உபநிஷத்கள் என, அனைத்தையும் கற்பித்தார். குரு சொல்லச் சொல்ல, அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்துக் கொண்டார் ராமபத்ரா.

கல்வியில் ஆர்வம்

கல்வி மீது ராமபத்ராவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிக்க, எழுத முடியாவிட்டாலும், தன் நினைவுத் திறனால், 22 மொழிகளை கற்றுத் தேர்ந்தார்.நான்கு வேதங்கள், உபநிஷத்கள் அனைத்திலும் மாபெரும் புலமை பெற்றார். துளசிதாசர் மீது மிகவும் பக்தி கொண்டிருந்த ராமபத்ரா, அவர் ஹிந்தியில் எழுதிய ராமாயணமான, 'ராமசரிதமானஸ்' பற்றி, உபன்யாசங்கள் நிகழ்த்த ஆரம்பித்தார்.

கற்பனை செய்து பாருங்கள். படிக்கவும், எழுதவும் முடியாத ஒருவர், மற்றவர் படிக்கக் கேட்டு, அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்து, உபன்யாசங்கள் செய்துள்ளார். தன், 38வது வயதில், ராமானந்தஆசிரமத்தில், நான்கு ஜகத்குருக்களில் ஒருவராக, ராமபத்ரா பொறுப்பேற்றார். ஜகத்குரு ராமபத்ராச்சார்யா என, அழைக்கப்பட்டார்.

பல மொழி வித்தகர்

ராமபத்ராச்சார்யாவின் திறமையும், சாதனைகளும் நம்மை வியக்க வைக்கிறது. பல மொழி வித்தகர், ஆன்மிக தலைவர், கல்வியாளர், சமஸ்கிருத அறிஞர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், தத்துவஞானி, பாடகர், இசையமைப்பாளர். உபன்யாசகர், நாடக எழுத்தாளர் என, அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவர், 'கீதா ராமாயணம், ஸ்ரீ பார்கவ ராகவ விஜயம், அருந்ததி, அஷ்டாவக்ரா, விதுரா' உட்பட 100க்கும் அதிகமான நுால்களை எழுதியுள்ளார். 'ஸ்ரீ சீதாராம சுப்ரபாதம்' என்ற சுலோகத்தையும் அவர் எழுதி இசையமைத்து உள்ளார். கவிஞரான ராமபத்ராச்சார்யா, ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும்பல கவிதைகளை எழுதி உள்ளார். ராமாயணம், மஹாபாரதம் உட்பட பல புராணங்களை, கவிதை வடிவில் எழுதியுள்ளார். தானே இசையமைத்து பாடி, ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். கல்வி மீது தீராத பற்று கொண்ட ராமபத்ராச்சார்யா, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக, ஜகத்குரு ராமபத்ராச்சார்யா பல்கலைக்கழகத்தை துவக்கினார். ஹிந்து மதம் பற்றி படித்து ஆய்வு செய்ய, துளசிதாசர்

பெயரில், 'துளசி பீடம்' என்ற குருகுலத்தை துவக்கினார். 2015ம் ஆண்டு, மத்திய அரசு, 'பத்மவிபூஷன்' விருது வழங்கி, ராமபத்ராச்சார்யாவை கவுரவித்தது. பிறந்து, இரண்டே மாதத்தில் பார்வையிழந்தும், மன தைரியத்துடன் போராடி, கல்வியிலும், அறிவிலும் உச்சம் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை, அனைவருக்கும் பெரும் ஊக்க சக்தியாக அமைந்துள்ளது.

சாபக்கேடு

பார்வையில்லாமல், மாபெரும் சாதனை படைத்த இந்த மாமனிதரை, நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?பார்வையற்றவர் படைத்த சாதனை என்றால், நம்மில் பலருக்கு, 'ஹெலன் கெல்லர்' தான் நினனவுக்கு வருவார். அவரை பற்றி, பள்ளி பாடப் புத்தகங்களில் பாடங்கள் கூட வந்து உள்ளன. ஆனால், நம் கல்வி முறையில், ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவின் பெயர் சிறிதும் இடம் பெறாதது வேதனை. ஏனெனில், அவரை புகழ்ந்து பேசினால், நம் நாட்டின் மதச்சார்பின்மை மாயமாகிவிடும் என, போலி மதச்சார்பின்மைவாதிகள் குற்றம்சாட்டி, முதலைக் கண்ணீர் வடிப்பர். இதுதான், நம் நாட்டின் சாபக்கேடு! 

- தினமலர்

1 comment:

ஸ்ரீராம். said...

வாழும் சாதனையாளர்களை நாம் மதிப்பதுமில்லை, பக்கத்து உயரங்கள் கண்ணுக்குத் தெரிவதும் இல்லை.

Post a Comment