Thursday, January 18, 2024

பண்டிதரும் குதிரைக்காரரும்

 ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் , அனைத்தும் கற்றவர் மற்றும்  புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்திருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை அழைத்திருந்தார்கள்.


பண்டிதரை அழைத்து  வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார்.




பண்டிதர் வந்தபோது அங்கே யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதர்கோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ணலாம்?’னு குதிரைக்காரனிடம் கேட்டார்.




‘அய்யா! நான் குதிரைக் காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.




பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது பண்டிதருக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்காக மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா எடுத்துரைத்து பிரமாதப் படுத்திட்டார் பண்டிதர். பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் பண்டிதர்.




‘அய்யா… நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்… பண்டிதர் ஒன்றும் பேசாமல் மௌனமாக அவ்விடத்தில் இருந்து புறப்பட்டார் .




நீதி ;-  மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்…புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் . பக்தியில் ஒருவனுடைய ஈடுபாடு மற்றும் முன்னேற்றத்திற்கு தகுந்தாற்போல் ஒருவருக்கு படிப்படியாக  உபதேசத்தை தர வேண்டும். !!!




🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆






ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 


கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஹரே ராம, ஹரே ராம, 


ராம ராம, ஹரே ஹரே




🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண🙏

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

கதை சொல்லும் நீதி சிறப்பு. முகநூலிலும் படித்து ரசித்தேன்.

மாதேவி said...

''மற்றவர்களுக்கு ....... .. '" நல்ல நீதி ரசனையும் கூட.

Post a Comment