Sunday, January 30, 2011

தேடல்


என் முன்னே என் பின்னே
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்" என்றேன்
என்னை ஒத்தவரிடம்
"நம் முன்னால் செல்பவர்கள் எல்லாம் தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான் நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால் அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில் என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்
"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான் யாரேனும் உண்டா" என்றேன்
நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்" என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்
"நம் கால்கள் ஓடத்தான் படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான் படைக்கப்பட்டது எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட கேட்கலாம்தானே" என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப் பார்த்துக் கேட்டேன்
"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன் ஓய்வாக இருக்கிறீர்கள்" என்றேன்

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்" என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும் கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பா ர்-கேள்வி கேள் - எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்
எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

17 comments:

Anonymous said...

எதார்த்த கவிதை...

Chitra said...

"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்



......வாழ்வின் எதார்த்தத்தை சொல்லும் கவிதை! பாராட்டுக்கள்!

கா.வீரா said...

என்ன ஒரு எதார்த்தம்

கா.வீரா said...

நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எல்லோரும் தேடியலையும் விஷயத்தைத் தெளிவான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள் ரமணி சார்.

அறிவின் சுமையைத் துறந்து நம் உள்மனத்தின் குரலை மட்டும் நாம் கேட்கத்தொடங்கினால் மொழி புரியக்கூடும்.கேள்விகள் இறக்கக்கூடும்.

அற்புதமான இடுகை.வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

எல்லாம் புரிந்தமாதிரியும் இருக்கிரது. ஒன்றுமேபுரியாத மாதிரியும் இருக்கிரது. இது தான் யதார்த்தமா?

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாம் புரிந்து தெரிந்து விட்டால், வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமல் போய் விடும் இல்லையா அண்ணா....

G.M Balasubramaniam said...

நம்மில் உல்ள “நான்” ஐ ஒழித்து விட்டால் ஒரளவு தேடலுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் ஓடுகிறேன்.ஓட்டம் முடியும்போது கிடைக்கும் பதிலை நான் எப்படி பகிர்ந்து கொள்வது. தேடாதிருத்தலே சுகமோ என்றும் தோன்றுகிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இப்படியாகத் தான் நாங்களும் ஓடிக் கொண்டு இருக்கிறோம்...ஆஃபீஸுக்கு, ரமணி சார்!!

எல் கே said...

வாழ்வில் கண்டிப்பா எல்லாருக்கும் தேடல் இருக்கும், இருக்கு. அதை சரியான வழியில் செலுத்துபவன் தேடலின் இறுதி நிலையை அடைகிறான். இது தொடர்பாக ஒரு சில இடுகைகளை எழுதி இருக்கிறேன் எனதுப் பதிவில் "தேடல் " என்றத் தலைப்பில்

vanathy said...

வித்யாசமா இருக்கு.

R. Gopi said...

ஓடுபவர் இளைப்பாற ஒருமுறை நிற்பார்

எண்ணங்கள் 13189034291840215795 said...

"நீ பேசுவது விதண்ட வாதம்"

பகுத்தறிவுவாதிகளுக்கான மறுபெயர்..:)


கேள்விகள் தொடரட்டும். எம்மையும் சிந்திக்க வைப்பதற்கு நன்றிகள்..

S.Venkatachalapathy said...

Great work Ramani Sir,

I like the way this poem has been written. Particularly this reflects a deeper philosophy.
The starting point of awareness is the question 'why'.
The truth is dynamic and so there can not be a conclusion.
This state is very greatly reflected in the last stanza.
The person who has reached this status is the enlightened being. If he wants to run he can, understanding the fact that the joy is in running. If he wants to sit and relax he can enjoy that too. Standing offers both choices to sit or to run.

So now I can join a Sri Krishna bajan, so that I sail with the devotees and get Prasatham (Snacks) which I relish much without bothering about Bagavat Gita.
(Ref. My post worshiping SriKrishna)

I can feel proud of the Microwave oven without ever using it.
(Ref: My post on How we add things to our household)

I can cherish as an employer and guide the employees to cherish too.
(Ref:My post on How much you cherish as an entrepreneur)

So I can stop giving suggestions, stop expressing the analytical outlook and confine to only appreciations & encouragements, so that I am liked by all.
I have to periodically endorse the views of the society.

The verses explain how people get convinced .This will help the readers to learn perfectly to fit into the GLOBALISATION. If some one comes for counseling , we can understand what is expected out of us. They only need more points to justify their action and they look for endorsement, appreciation (without revealing that you have understood their clever manipulations and cunning moves)

We can encourage them to proceed in their chosen direction because there are always lakhs and crores of others ahead of them in the very same direction.

ShankarG said...

நிறை குடம் தளும்பாது என்பது எவ்வளவு உண்மை! அரை குறைகள் ஆட்டம் போடும் காலத்தில் மிகப் பொருத்தமான கவிதை இது.

அகலிக‌ன் said...

"இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான் யாரேனும் உண்டா"

இந்த நூற்றாண்டு கால கேள்விக்கு விடை தெரியாதாவர்களின் அசட்டுத்தனம்தான் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என கழுவிய மீனில் நழுவும் மீன்.அருமையான பதிவு.

Prabu M said...

//"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்
அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்
ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்
இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்//

ஓட ஆரம்பித்திருந்த நேரத்தில் குழப்பியடித்திருந்த கேள்விகள் இவை...
இப்போது ஓடும்போது வேகம் கூட்டி அவ்வப்போது ஓய்வும் எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டது! :)
இதுவும் ஓர் அருமையான படைப்பு... யதார்த்தம்.... ஓட்டமும் ஓய்வும்தானே வாழ்க்கை....
நம்பிக்கை, கற்பனை, உண்மை, சந்தேகம்னு கியர்கள்தான் மாறுதே தவிர ஓட்டம் நிற்பதில்லை...
வேண்டுமானால் ஓட்டத்தைப் பயணம் என்று சொல்லிக்கொள்ளலாம்! :)

Post a Comment