Sunday, June 29, 2014

பதிமூனாவதா முதலாவதா ?

மாதம் எப்படியும் பதிமூன்று பதிவுகளுக்குக்
குறையாமல் எழுதிவிடுவது என்பதை
 ஒரு வரையரையாகக் கொண்டு
இந்த ஆண்டுத் தொடக்கம் முதல்
எழுதி வருவதால் இன்று ஒரு மாதம் முடிகிற
நிலையில் ஒன்று எழுத வேண்டி இருந்தது
என்ன எழுதலாம் என நேற்றே யோசிக்கத்
துவங்கிவிட்டேன்

இது இப்படி இருக்க இன்று மாலை நான்
இணைந்திருக்கிற அரிமா சங்கத்தின் சார்பாக
ஒரு நிகழ்ச்சி வர்த்தகசபைச் சங்கத்தில் இருந்தது
நான் தலைவனாக இருக்கிற சங்கத்தில் இருக்கிற
உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும்
அலைபேசி மூலம் நினைவூட்டுதல் செய்தி
அனுப்பிவிட்டு நான் என் மனைவியும்
வழக்கம்போல டூவீலரில்
அரங்கம் நோக்கிச் செல்லத் துவங்கினோம்

தெற்குவாசல் வரை ஒரு பிரச்சனையும் இல்லை
அங்கு சிக்னலில் சிகப்பு விளக்கு எரிய
அங்கு எனக்கு முன்னால் நின்றிருந்த  லாரியின்
பக்கத்தில் நானும் பச்சை விளக்குக்காகக்
 காத்திருந்தேன்

பச்சை விளக்குப் போட லாரியும் நகர நானும்
வண்டியை  எடுக்க அடுத்த நொடி என்ன நேர்ந்தது
எப்படி நேர்ந்தது எனத் தெரியவில்லை.
டமால் என ஏதோ மோதுகிற சப்தம்
அடுத்த நொடியில் நானும் என் மனைவியும்
அந்த அளவுக்கதிகமான பாரம் ஏற்றிய லாரியின்
பின் சக்கரத்தின் முன்னால் கிடக்கிறோம்

எங்களைச் சுற்றி ஐயோ நிறுத்துடா நிறுத்துடா
என்கிற சப்தம் வருகிறது.
ஒரு டிராஃபிக் போலீஸ்காரர்
விசிலடித்தபடி லாரியை நிறுத்தச் சொல்லி
கையசைத்தபடி லாரியை நோக்கி ஓடிவருகிறார்
பின் சக்கரத்தின் அரை அடி முன்னால் என் மனைவியும்
அடுத்து நானும் கிடக்கிறோம்.உறுதியாக
அடுத்த நொடிலாரி டயர் ஏற நசுங்கிச்
செத்துவிடுவோம் எனத் தெளிவாகப் புரிகிறது,
ஆனாலும் விழுந்த அதிர்ச்சியில்
திக் பிரமை படித்து என்ன செய்வதென்று அறியாமல்
அசையாமல் கிடக்கிறோம்.

அந்த நொடியை இப்போது நினைத்தாலும்
அதிர்ச்சியாக மட்டும் இல்லை
ஆச்சரியமாகவும் இருக்கிறது

காரணம் உண்மையில் அந்த நொடியில்
நிச்சயமாகச் செத்துவிடுவோம் என்கிற நிலையில்
வேறு நினைவுகள் எதுவும் இல்லை
பயமும் இல்லை.பதட்டமும் இல்லை
எங்களிடம் தப்பிப்பதற்கான
எந்த முயற்சியும் கூட இல்லை

ஒருவேளை வண்டி நிறுத்தப்படாமல் சக்கரம்
ஒரு சுற்று சுற்றி இருந்தால் நிச்சயம்
மார்பில் லாரி ஏற நசுங்கிச் செத்து இருப்போம்
என்றாலும் கூட அந்த மரண அவஸ்தை வலி
நிச்சயம் இருந்திருக்காது எனத்தான் இப்போது
நினைத்தாலும் தோணுகிறது

அரைகுறையாக அல்லாது முழுமையாக
உடன் இதுபோல் போய்ச் சேருகிறவர்களுக்கு
 அந்தத்  திக்பிரமைப் பிடித்த
நிலையது கூட ஆண்டவனின் கருணையோ
 எனக் கூட இப்போது யோசிக்கப் படுகிறது.

அப்புறம் என்ன..
மனைவியின் அதீத பக்தியோ
அல்லது அதிகம் வெளிச்சமடித்துக் காட்டாது
நான் செய்கிற சேவையோ அந்த போலீஸ் காரர்
மற்றும் கூடிய இருந்த மக்கள் ரூபத்தில்
உடனடியாக அனிச்சையாக குரல் கொடுத்து
வண்டியை நிறுத்த வைத்தது
பின் எங்களை யாரோ இருவர் சட்டெனத் தூக்கி
அருகில் பிளாட்பாரத்தில் படுக்க வைத்தார்கள்.

லேசாக நினைவு திரும்ப
கால் மட்டும் கையில் வலியெடுப்பது தெரிந்தது
மனைவிக்கும் டயரில் மோதி விழுந்த அதிர்ச்சியில்
முதுகில் அதிக வலியென்றார்

அதற்குள் அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரி
நான் அணிந்திருந்த அரிமா பொத்தானைப் பார்த்து
"சேவை இயக்கத்தில் இருக்கிறீர்களா "என்றார்

"ஆம் " என்றோம்.

"ஒன்றும் பயப்படவேண்டாம்,
உங்களுக்கு ஒன்றுமில்லைதெரிந்தவர்கள்
யாருக்காவது உடன் போன் செய்துவிட்டு
உள்ளே அந்த கடையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என
மிக ஆறுதலாகப் பேசி அங்கு  கூடியிருந்த
காவலர்களுக்குஏதோ உத்தரவுகள்
கொடுத்துச் சென்றார்..
காவலர்களும் கூடுதல் கனிவுடன்
எங்களைக் கவனித்துக்கொண்டார்கள்

,பின் எனக்கு நெருக்கமான நண்பராக இருக்கிற
இன்ஸ்பெக்டருக்கு தகவல் தர உடன் வந்து
மிகச் சேதாரமாகி இருந்தவண்டியை
அப்புறப்படுத்தவும்சட்ட ரீதியான காரியங்களையும்
எங்களை உடன் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று
உடன் முதலுதவிக்கும் ஏற்பாடு செய்ய ஒரு வழியாக
ஒரு இரண்டு மணி நேரத்தில்
(சிறிது சேதாரம் இருந்தால் கூட)
சகஜ நிலைக்குத் திரும்பினோம்

இன்று காலையில் இதை பதிவிடலாம்
என நினைத்த போதுதான்
எனக்கு தலைப்பில் சொன்னது போல
இது பதிமூனாவது  அல்லது முதல் பதிவா என்கிற
குழப்பம் வந்தது

முடிந்தால் குழப்பத்தை நீங்களே தீர்த்து வையுங்களேன்...

31 comments:

பால கணேஷ் said...

பதிமூணாவது பதிவாகவே இருக்கட்டும். முதல் பதிவுன்னு சிந்திக்காதீங்க... இனி கூடுதல் கவனத்துடன் இருங்கள் ஐயா... ஹெட்டுக்கு வந்தது கேப்போட போச்சுன்னு நினைச்சுக்கலாம்.

vimalanperali said...

குழப்பம் என்ன சார்.இதுதான் முதலும், பதிமூணாவதும்/

vimalanperali said...

சூழலின் கையில் நாம் என்பது இதுதானோ?

தி.தமிழ் இளங்கோ said...

நீங்களும் உங்கள் மனைவியும் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டது இறைவன் அருள்! உங்கள் வழக்கப்படி பதிவு 13 ஆவதாகவே இருக்கட்டும்! குறைவு வைக்க வேண்டாம்!

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவின் எண்ணிக்கை எப்படியோ இருக்கட்டும் ஐயா... உடல்நலம் மிகவும் முக்கியம்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் செய்த நற்செயல்கள் எப்போதும் உணளைக் காக்கும். முடிந்தவரை இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்த்து விடுங்கள். ஆட்டோ அல்லது கால் டாக்சி பயன்படுத்துங்கள். உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்

Avargal Unmaigal said...

இறைவன் உங்களோடு இருக்கிறான் கவலை ஏதும் படாதீர்கள் வாழ்க வளமுடன்

Unknown said...

இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது ,சென்ற பதிவில் சொன்னது உண்மைதான் என்பதை தான் !அந்த உண்மை #சூழலுக்குப் பயந்து பயந்து வாழ்பவன்
நிச்சயம் செத்துச் செத்துத்தான் வாழ்வான்#
த ம 6

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

கடவுளே!! உனக்குத்தான் நன்றி..
உடம்பைப் பார்த்துத் கொள்ளுங்கள் ஐயா நீங்களும் உங்கள் மனைவியும்.
பதிமூன்றாவதாகப் போகட்டும் இப்பதிவு...
இனிமேல் முதலிலிருந்து எல்லாம் நன்றாக நடக்கட்டும் ஐயா

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகப்பெரியதொரு விபத்தில் சிக்காமல் தப்பியது கேட்க மிக்க மகிழ்ச்சி. அன்னை மதுரை மீனாக்ஷியின் அருள் என்றும் நாம் வைத்துக்கொள்ளலாம்.

பதிவுகளின் எண்ணிக்கைகள் ஒருபுறம் தனியாகக் கிடக்கட்டும்.

தங்களின் பதிவுகள் பெரும்பாலும் NUMBER 'ONE' மட்டும் தானே. வாழ்த்துகள்.

இனி இதுபோல டூ வீலரில் செல்வதைத் தவிர்த்து விட்டு, ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்லுங்கள்.

அத்யாவஸ்யத் தேவைகளும் வசதி வாய்ப்புகளும் கூடினால் சொந்தக்கார் வைத்துக்கொண்டு, அதற்கு தனியாக ஒரு ஓட்டுனர் போட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன் VGK

Yarlpavanan said...

தாங்கள் இருவரும்
இறைவனருளால் நீடூழி வாழ வேண்டும்
இவ்வாறு
இனி நிகழாது என்போம்!

இது பதிமூனாவது அல்லது
முதல் பதிவா என்கிற குழப்பம்
எமக்கில்லை - இது
ரமணி ஐயாவின்
பதிவு என்பதே உண்மை!

கோமதி அரசு said...

தர்மம் . பக்தி இரண்டும் உங்கள் இருவரையும் காப்பாற்றி உள்ளது.
சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.
உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் மனைவியின் முதுகுவலி எப்படி இருக்கிறது?மருத்துவரிடம் சென்று நன்கு செக்கப் செய்து கொள்ளுங்கள்.

Anonymous said...

ஐயா காத்திராத பல செயல்கள் நடக்கின்றன.
தங்களுக்கு மனைவிக்கு அனைத்தும் பழைய நிலைக்கு வர ஆண்டவன் அருளட்டும்.
மறுபடியும் கடவுளுக்கே நன்றி.
இங்கும் திடீரென கணவர் உடல்நலமின்றி..
வைத்தியசாலை. வீடு என்று என் நிலையும்
பணிவிடைகளில் செல்கிறது. எல்லாம் சரிவரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

ஸ்ரீராம். said...

பயங்கர அனுபவம். இரண்டாவது பிறவியின் முதல் பதிவு என்றே வைத்துக் கொள்ளுங்கள். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களில் கவனமாக ஓட்டுங்கள். நீங்கள் இருவருமே இப்போது பூரண நலம்தானே?

G.M Balasubramaniam said...

கீதையின் சாராம்சம் என்று படித்ததுநினைவுக்கு வருகிறது” எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது:எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது: எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் “. படித்தவுடன் ஓரிரு வினாடிகள் பதை பதைத்தது. இம்மாதிரி விபத்துக்கள் எங்கள் உற்ற உறவினர் வாழ்க்கையில் பயங்கரமாக நடந்து விட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. உங்களுக்கு இதுவும் ஒரு அனுபவமாக இருக்கும். வாழ்க்கையின் போக்கு எவராலும் கணிக்கப்பட முடியாதது. நீங்கள் இருவரும் நலம் எனத் தெரிந்து மனம் பூரிக்கிறது. உங்கள் மின் அஞ்சல் முகவரிஎன்னிடம் இல்லை. அதனால் எல்லா உணர்வுகளையும் பதிவில் பங்கிட முடியவில்லை. இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

kingraj said...

"தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்"
மீண்டும் ஓர் ஆபத்தில் இருந்து உங்களை காப்பாற்றிய தர்மத்திற்கு(தெய்வத்திற்கு) நன்றி கூறுங்கள். ஜாக்கிரதையாக இருங்கள் ஐயா. இப்பொழுது நலம் தானே?.

இராஜராஜேஸ்வரி said...

கண் அருகில் காலனைக் கண்டு எள்ளி நகையாடி மீண்டு வந்த காட்சி ..மனதை ந்டுங்கவைக்கிறது..!

அருணா செல்வம் said...

இரமணி ஐயா.... பதிவைப் படிக்கும் போதே மனம் பதைக்கிறது.

முகமறியாதவர்களின் மேல் வைக்கும் அன்பின் வலிமை கூட அதிகம் தான் என்பதை உணர்ந்தேன்.
உங்களையும் உங்கள் மனைவியையும் காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

பாலகணேஷ் சார் சொன்னது போல தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது! விரைவில் பூரண நலம் பெற்று வழக்கம் போல உங்கள் பணிகளை தொடர இறைவனை ப்ரார்த்திக்கிறேன்! நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

பதிவுகளின் எண்ணிக்கை எப்படியோ இருக்கட்டும்....

நல்லவேளை தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றே....

கரந்தை ஜெயக்குமார் said...

பதிவின் எண்ணிக்கை எத்தனையாக இருந்தால் என்ன ஐயா,
உயிர் மீண்டு வந்திருக்கின்றீர்கள்
வாழ்த்துக்கள்
தங்களுக்காகக் குரல் கொடுத்த நல் உள்ளங்களுக்கு
மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்போம்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 10

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எண்ணிக்கை பிரச்சினையல்ல. பதிவினைக் கண்டு அதிர்ந்தேன். பகிர்வு உங்களின் சுமையைக் குறைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

மனோ சாமிநாதன் said...

மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! இன்னும் இந்த உலகத்தில் நீங்கள் செய்ய வேன்டிய நல்லவை பாக்கி இருக்கிறதோ, என்னவோ!!

RajalakshmiParamasivam said...

தர்மம் தலை காக்கும் என்பது உண்மையானதே! பதிவு என்னவோ ஆகிவிட்டுப் போகட்டும். உங்கள் நலத்தையும், உங்கள் மனைவியின் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

மருந்து மாத்திரைகளை விட
பதிவர்கள் உறவினர்கள் மற்றும்
நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள்
விரைவில் குணமடையவும்
குறிப்பாக
மன அளவில் சம நிலை அடையவும்
அதிகம் செய்தது
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

Thulasidharan V Thillaiakathu said...

பதிவுகளின் எண்ணிக்கை வேண்டாம் சார்! தங்கள் வாழ்நாளின் எண்ணிக்கைதான் மிகவும் முக்கியம்! ஏனென்றால் தாங்கள் எழுத்துக்களுக்கு முடிவு இல்லை அதனால் முதலோ, பதின்மூன்றாவதோ இல்லை.!!....இன்னும் தாங்கள் எழுத வேண்டும்......கடவுளின் அருள் தங்களுக்கு எப்போதும் இருக்க நாங்கள் பிரார்த்திக்கின்றோம்! சார்! தங்களின் நல்ல இதயம் இன்னும் அதிக நாள் சுவாசிக்கும்! மூச்சிலும் மட்டுமல்ல..எழுத்திலும்!!

பிரார்த்தனைகளுடன்!

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் மனைவியும்,தாங்களும் நலமுடன் இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றோம்! தாமதமாக வந்ததற்கு தயவு செய்து மன்னிக்கவும்! சார்!

ஹ ர ணி said...

அன்புள்ள ஐயா.

படித்துவிட்டு அதிர்ந்துபோனேன். குலை நடுங்குகிறது.

உங்களின் மனோதிடம் இறைவனின் அருள்.
அந்த அருளால் நீங்களும் அம்மாவும் பரிபூரண ஆயுளுடன் பல்லாயிரம் பதிவுகளை இடுவீர்கள். கடவுளை வேண்டி நிற்பேன்.

srikanth said...

இறைவன் உங்களோடு இருக்கிறான் கவலை ஏதும் படாதீர்கள் வாழ்க வளமுடன்

Post a Comment