Monday, June 8, 2015

முள்ளை முள்ளால் ( 1 )

" நான் பலமுறை பல விதமா பலரால
ஏமாத்தப்ப்பட்டிருக்கேன். இத்தனைக்கும்
எனக்கு கெட்டிக்காரனூன்னு வேற ஊர்ல பேரு
ஆனா இவங்கிட்ட  ஏமாந்தது மா திரி
எவங்கிட்டெயும் ஏமாறலை.

அதோ முதுகு தெரிகிறார்ப்பல நிக்கிறவனை
நல்லாப்  பார்த்துக்கோ.
பின்னால் விவரம் சொல்றேன் "என்றான் நண்பன்

நான் அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்க்க
சுமார் முப்பது வயது மதிக்கத் தக்க
ஒருவன் இருந்தான்

அவனது நடை உடை பாவனைகளை நான்
அனுமானித்தவரையில் எனக்கு
இவன் குறிப்பிடுவது போல
ஏமாற்றுக்காரனாகத் தெரியவில்லை

ஏதோ படித்தவன் நல்ல வேலையில் உள்ளவன்
போலத்தான் தெரிந்தான்.

அதே சமயம் எனக்குப் புதியவனாகவும்
தெரியவில்லை
எங்கள் பகுதியிலேயே அதிகம் பார்த்த ஞாபகம்
இருக்கிறது. ஆனால் எங்கு  எப்போது என்பது
எப்படி முயன்றும் நினைவுக்கு வரவில்லை

நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவனுடன் பேசிக் கொண்டிருந்தவர்
பர்ஸை எடுத்துபணத்தை எண்ணிக்
கொடுத்துக் கொண்டிருந்தார்

அவன் அதை மிக மரியாதையாக வாங்கி
பேண்ட் பாக்கெட்டில் வைத்தபடி
"அவசியம் சாயந்திரம் கடைக்கு வருகிறேன் "
எனச் சொல்லியபடிஅருகில் சாய்த்து
நிறுத்தி இருந்த பைக்கை ஸ்டாட் செய்து
எடுத்துக் கொண்டு கிளம்பினான்

" நான் இவனை அடிக்கடி பார்த்த ஞாபகம்
 இருக்கு அடுத்த முறைப் பார்த்தால்
அவசியம் அடையாளம் கண்டுபிடிச்சிடுவேன்
.சரி இப்போ சொல்லு இவன் எப்படி
உன்னை ஏமாத்தினான். எங்கு ஏமாத்தினான்  "
என்றேன்

"அதை அப்புறம் பார்ப்போம்.முதல்ல
பணம் எடுத்துக்கொடுத்தவரை
கொஞ்சம் விசாரிப்போம்
ஒருவேளை அவருக்குத் தெரிந்தவராக
இருக்கலாம் இல்ல

தெரிந்தவராக இருந்தால் நல்லதாப் போச்சு
அவனை அவனிடத்தில வச்சே பிடிச்சிடலாம் "
என்றான்

எனக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது

பணம் கொடுத்த பெரியவரை அணுகி
நான்தான் பேச்சைத் துவங்கினேன்

" ஐயா இப்போது போகிற பையன் என்
உறவுக்காரப் பையன் போலத் தெரியறான்.
சரியாக யார் எவர் என சட்டென அடையாளம்
தெரியலை.கூப்பிட்டுக் கேட்கலாம்னு
 நினைப்பதற்குள்ளவண்டியை எடுத்து  போயிட்டான்
நமக்குத் தெரிந்த பையன் தானுங்களா ?
 நம் ஏரியா தானா ? என்றேன்

அவர் என்னையும் என் நண்பனையும்
ஏதோ பார்வையாலேயே அனைத்தையும்
கணித்துவிடுகிறவர்போல கொஞ்சம்
ஏற இறங்கப் பார்த்துவிட்டு

" நம் நகரைச் சேர்ந்தவனாகத்தான்
 இருப்பான்போல இருக்கிறது.
எல்லாம் சரியாகச் சொல்றான்  "

"அப்படியா நீங்கள் ஏதோ ரூபாய் கூட
கொடுத்தீங்க  போலத் தெரிஞ்சது .
எதுவும் வியாபாரம் செய்கிறானா ? " என்றேன்

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை தம்பி.நமக்கு
எட்டத்து உறவாய் இருப்பான் போல இருக்கு
எல்லோரையும் சரியாச் சொல்றான், பாவம்
ஸ்கூலுக்கு பையனுக்கு பணம் கட்ட
 வந்திருக்கிறான்

இரு நூறு குறைவாக இருந்திருக்கு
பண மிஷினில் எடுக்கப் போயிருக்கிறான்
அதில் பணமில்லையாம்.

அந்தச் சனியன் அடிக்கடிஅப்படித்தானே பண்ணுது.
ஒரு இரு நூறு இருந்தால்கேட்டான்.கொடுத்தேன்.
என் கடை அவனுக்குதெரிந்திருக்கிறது.
சாயந்திரம் வந்து தருவதாகச்
சொல்லிப் போறான் ". என்றான்

"அவன் பெயர்  தெரு ஏதாவது தெரியுங்களா "
என்றேன்

"கேட்கலையே தம்பி அதுதான் சாய்ந்திரம்
வரப்போறானேஅது எதுக்குன்னு கேட்கலைத் தம்பி
வேண்டுமானா சாய்ந்திரம் வரும்போது கேட்டு
வைக்கிறேன்.என் கடை அந்த லெட்சுமி
ரைஸ் மில்லுக்குஒட்டின கடைதான்.
அவசியம்னா வந்து தெரிஞ்சுக்கங்க "

"சரிங்க பெரியவரே சாய்ந்திரம் வந்தா
விசாரித்து வைங்கநாளைக்கு வர்றோம் "
என்றபடி என நண்பன் என் கையை
வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு கொஞ்சம்
தள்ளி வந்து....

"பெருசுக்கிட்ட இன்னைக்கு போணி
பண்ணிட்டான். நமக்காக இல்லையென்னாலும்
அடுத்து இப்படி நடக்கக் கூடாது.அதுக்காகவாவது
அவன் வீட்டைச் சரியா கண்டுபிடிச்சு
கைய கால உடைச்சு கேவலப் படுத்தனும் "
என்றான் படு கோபத்துடன்

" இப்படி கோபப் படுகிற அளவுக்கு என்னடா
பண்ணினான் ? எப்படி உன்னை ஏமாத்தினான் "
என்றேன்

அவன் சொல்லத் துவங்கினான்

(தொடரும்  )

17 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

கதையை நன்றாக சொல்லிவந்து இறுதியில் வைத்தீர்கள் எதிர்பார்ப்பை... தொடருங்கள் ஐயா... என்னவென்று அறிய ஆவலாக உள்ளேன்... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...


ரூபன் //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
(தயவு செய்து இ.மெயில் பார்க்கவும் )

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லோரிடமும் இதே வேலை தான் போல...

இராய செல்லப்பா said...

சீக்கிரம் சொல்லி விடுங்கள் ஐயா! நானும் இதேபோல் ஒருவனிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏமாந்துபோனேன்! இனியாவது உங்கள் ஆலோசனையை ஏற்று நடக்கலாமே! உம்...சீக்கிரம்!... - இராய செல்லப்பா

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுவாரஸ்யமான துவக்கம்.

நம்மை இதுபோல ஏமாற்ற நினைப்பவர்கள், தங்களின் மயக்கும் பேச்சிலும், நம்மை நம்ப வைக்கும் சாமர்த்தியத்திலும், நம்மைவிட அதிபுத்திசாலிகளாகவே உள்ளனர்.

தொடரட்டும் .....

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்றொரு நாள், சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில், மிகவும் உஷார் பேர்வழியான என்னையே, ஒருவன் இதுபோலவே சொல்லி ஏமாற்ற எத்தனித்தான்.

நான் எதிர் கேள்விகள் கேட்டு மடக்கியதில் ஓட்டமாக ஓடியே போய்விட்டான். :)

yathavan64@gmail.com said...

இப்படி கோபப் படுகிற அளவுக்கு என்னடா
பண்ணினான் ? எப்படி உன்னை ஏமாத்தினான் "
என்றேன்.

அவன் சொல்லத் துவங்கினான்

."தொடரும்!
தொடருங்கள் என்றே?"

சஸ்பென்ஸால் BP ஏறி விட்டது அய்யா!


நன்றி!த ம 5

நட்புடன்,
புதுவை வேலு

சசிகலா said...

நானும் இதுபோல ஏமார்ந்து இருக்கிறேன். பேச்சு சாமார்த்தியம் பணத்தை எப்படியெல்லாம் ஏமாற்றிப் பெருகிறார்கள்.
அடுத்த பகிர்வுக்கு காத்திருக்கிறேன் ஐயா.

Unknown said...

இதே வேலையாய் போச்சு இரமணி உங்களுக்கு!
தூண்டுவது, காக்க வைப்பது!!!!

சென்னை பித்தன் said...

இது போன்றவர்களை நானும் சந்தித்திருக்கிறேன்.
தொடருங்கள்.

சென்னை பித்தன் said...

த ம 8

UmayalGayathri said...

ஆவலுடன் அடுத்த பதிவிற்கு

தம +1

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான தொடக்கம்! இப்படி பல ஏமாற்றுக்காரர்கள் பெருகிவிட்டார்கள்! நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டியதாக உள்ளது!

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யமான தொடக்கம்! இப்படி பல ஏமாற்றுக்காரர்கள் பெருகிவிட்டார்கள்! நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டியதாக உள்ளது!

G.M Balasubramaniam said...

வே. நடன சபாபதியின் பதிவைப் படிப்பது போல் இருந்தது. ‘ஏமாற்றுவதும் ஒரு கலைதான்’

கீதமஞ்சரி said...

சுவாரசியமான ஆரம்பம்... கெட்டிக்காரன் என்று பெயரெடுத்தவரையே ஏமாற்றிய அந்த வித்தைக்காரன் யார்? ஆவலுடன் தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருத்தானே செய்வார்கள்! அது சரி சொல்லத் தொடங்கியதைத் தொடர்கின்றோம்....

Post a Comment