Saturday, March 19, 2016

சமூக நீதியும் சமூக அமைதியும்.....

பட்டப் பகல்
வெட்டவெளி
சுற்றிலும் ஜனத் திரள்

மிக இயல்பாய்
பேசியபடி வரும்
அந்த அழகுத் தம்பதிகள் போலவே

மிக இயல்பாய்
எவ்வித பதட்டமுமின்றி
அந்தக் கொலைகாரர்களும் வருகிறார்கள்.

செய்யத் தக்கதை
செய்வதைப் போலவே..

எவ்வித குற்ற உணர்வோ
பதட்டமோ இன்றி...

மிக இயல்பாய்
இருவரையும் வெட்டிச் சாய்க்கிறார்கள்

ஒரு படப்பிடிப்பை
பார்க்கிற பார்வையில்
பார்த்தபடி நகர்கிறது
திருவாளர் பொது ஜனம்.

டீக்குடித்துத் திரும்புதல் போல்
மிக இயல்பாய்
திரும்பிப் போகின்றன
அந்தக் கொலைவெறி மிருகங்கள்

பொது வெளி
பாதுகாப்பு அற்றுப் போனதை..

மக்களின் சமூக அக்கறை
அழிந்துத் தொலைந்ததை..

மிருகங்கள் அச்சமின்றி
உலவுகிற சூழலை...

மனித நேயம்
கருகிக் தொலைந்ததை..

எல்லாம்
.
உரக்கச் சொல்வதற்குள்
உறுத்தச் சொல்வதற்குள்

யாரை யாரானாலும்
எதற்கு எதற்கானாலும்
இது சகிக்க இயலாதது
என்பதை நிலை நாட்டும்முன்....

எந்தக் கொலையும்
வெட்கக்கேடானது
காட்டுமிராண்டித்தனமானது
அடியோடு அழித்தொழிக்கவேண்டியது என

அனைவரும் உணர்ந்து தெளியும் முன்
தங்கள் வெறுப்பைப்பதிவு செய்யும் முன்

மெல்லத் திசை மாறுகிறது
அந்தப் படுபாதக நிகழ்வு..

வழக்கம் போல

சமூக நீதியும்
சமூக அமைதியும்
சமூகத்திற்கு இரு கண்கள் என்பதுவும்

சட்ட ஒழுங்கின் சீர் கேடும்
பொது ஜனத்தின்
எருமைமாட்டுத்தனமும் 

மிகச் சரியாய்..

உணர்ந்து கொள்ளப்படாமலேயே
வலியுறுத்தப் படாமலேயே
பதிவு செய்யப்படாமலேயே....
.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன மழை பெய்தாலும், எருமை மாட்டுத் தோலுக்கு தெரிய வாய்ப்பில்லை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் வருத்தம் அளிக்கும் நிகழ்வுகள். :(

கீதமஞ்சரி said...

எல்லா அராஜகங்களும் இப்படியே மடைமாற்றப்பட்டுக்கொண்டு போனால் இறுதியில் நாம் மடையர்களாகி நிற்பதைத் தவிர வேறு வழியே இல்லை. உங்கள் பாணியிலேயே உணர்த்த முற்பட்டிருக்கிறீர்கள்.. எய்துகொண்டே இருப்போம். என்றாவது இலக்கை அடையும் என்ற நம்பிக்கையோடு.

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி said...
எல்லா அராஜகங்களும் இப்படியே மடைமாற்றப்பட்டுக்கொண்டு போனால் இறுதியில் நாம் மடையர்களாகி நிற்பதைத் தவிர வேறு வழியே இல்லை//

மிகச் சரியாக பதிவின் அடி நாதம் புரிந்து
பின்னூட்டமிட்டது மிக்க மகிழ்வளிக்கிறது
மிக்க நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதிலும் வேதனை என்னவெனில் இதை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவது.

வெங்கட் நாகராஜ் said...

வருத்தம் அளிக்கும் நிகழ்வுகள்.... யாரும் எதையும் செய்யலாம் எனும் நிலை.....

ஸ்ரீமலையப்பன் said...

திருத்தவும், திருந்தவும் இனி ஊர் பெரியார் போதாது ஒவ்வொரு ஊரிலும் பெரியார் வேண்டும்..

Thulasidharan V Thillaiakathu said...

சொடக்கிடும் நேரத்தில் நிகழ்வுகள் மாறுகின்றன. நம் எண்ணங்கள், தார்மீகக் கோபங்கள் வெளிப்பட்டுப் பதிவிடப்படும் முன்னரே நிகழ்வும் மாறுகிறது சமுதாயத்தின் கண்களும் மாறிவிடுகின்றன. இதற்கு முன் வருந்தியது அவ்வளவுதான்..அதுகிடப்பில், அடுத்து நிகழ்வு ..இபடி இதுவும் கடந்து போகும் என்றுக் கடந்து கொண்டே போவதால் எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்படாமலேயே கிடப்பில் கிடந்து விடுகின்றது. மக்களின் கண்ணொட்டமும் மாறிவிடுகிறது..

நாமும் பதிவோம்..என்றேனும் ஒரு நாள் நல்லது நடக்காதோ என்ற நம்பிக்கையில்

தி.தமிழ் இளங்கோ said...

ஒருவர் நெஞ்சில் மட்டும் ஒரு முள் அல்ல; பலரது நெஞ்சிலும் முட்கள்.

Post a Comment