Wednesday, June 1, 2016

கண் கெட்ட பின்னே.....

ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில்
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே
வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்

சம்பாத்தியம் தந்த தெம்பில்
கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்
திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்
செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...
கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முைற்யும்
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...
உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.

7 comments:

ஸ்ரீராம். said...

உண்மைதான். எல் ஐ ஸி பற்றிய ஜோக்கும் நினைவுக்கு வருகிறது!

Thulasidharan V Thillaiakathu said...

யதார்த்தத்தை அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்! நாளை நாளை என்று இன்றைய சந்தோஷங்களையும் இழக்கின்றோம், நேற்றைய நினைவில் புலம்பல்களில் இன்றைய நிமிடங்களை இழக்கின்றோம். இப்படித்தான் போகிறது பெரும்பாலோர்க்கு..

G.M Balasubramaniam said...

இன்றைய தலை முறை வேறுவிதம் வெற்றிலை பழுக்கும் முன்னே அனுபவிக்கிறார்கள்

Bhanumathy Venkateswaran said...

அற்புதம்! திட்டமிடுகிறேன் என்ற பெயரில் வாழ்கையை எத்தனை அபத்தமாக்குகிறோம் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

”தளிர் சுரேஷ்” said...

அற்புதமான கவிதை! மீள்பதிவா? ஏற்கனவே வாசித்த நினைவும் வருகிறது.

கோமதி அரசு said...

தளிர் சுரேஷ் சொல்வது போல் முன்பே படித்த நினைவு இருக்கிறது.

"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.//

கவிதையில் படித்த பாட்டி நினைவு அப்படியே பசுமையாய் இருக்கிறது.

வைசாலி செல்வம் said...

உண்மை தான் ஐயா.ஐந்தில் வளையாது ஐம்பதிலும் வளையாது என்பது எவ்வளவு உண்மை என்பது தெரிந்துக் கொண்டேன்.நன்றி ஐயா.

Post a Comment