Sunday, September 19, 2021

தோழர் பி.ஆர்


 இன்று செப்டம்பர் 20


C P M தலைவர் P. ராமமூர்த்தி பிறந்த நாள்.


பிறப்பு:செப்டம்பர்20,1908 

மறைவு:டிசம்பர் 15, 1987


      இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.

       தமிழக சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டின் எதிர்க்கட்சித் தலைவர்.

      மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்பதவியில்

1967–1971ல் இருந்தார்.

     பி.ஆர். என்று கட்சிக்காரர்களாலும், தோழர் பி.ராமமூர்த்தி என்று அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது.

     1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர்.          

     இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். 

     சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 

      இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.

     1920ல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். 

     வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். 

     வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார்.அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார்.

      அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். 

      ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926ல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார்.

       சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். 

     இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. 

     மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார்.

      மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.

     பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். 

      அங்கு விடுதலை ஆன பிறகு சென்னைக்கு வந்து இங்கு அரசியல் போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

       1927ல் பம்பாயில் சைமன் வந்து இறங்கியதும் ஒரு மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், போலீஸ் தடியடியும் நடந்தது. லாலா லஜபதி ராயைத் தடியால் அடித்த சார்ஜெண்ட் சாண்டர்ஸ் லாஹூரில் கொலை செய்யப்பட்டார். அதில் சம்பந்தப்பட்ட பகத் சிங் தொடங்கிய பாரதி நவ ஜவான் சபா எனும் அமைப்பில் ராமமூர்த்தி ஓர் உறுப்பினர் ஆனார்.

     1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார்.

    1933ல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மகாநாட்டை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. தடையை மீறி மகாநாட்டுக்குச் சென்ற தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. குதிரை மீதமர்ந்து போலீஸ் நடத்திய தடியடியில் ராமமூர்த்தி தாக்கப்பட்டார். 

     அங்கு இருந்த காலகட்டத்தில் கம்யூனிச இயக்க நூல்களையும் காரல் மார்க்ஸ் நூல்களையும் படிக்க நேர்ந்தது. 

      பி.சுந்தரையா எனும் கம்யூனிஸ்ட் தோழரின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. 

      அவரோடு சேர்ந்து கொண்டு ஒரு சதி வழக்கிலும் இவர் பங்கு பெற்றார்.              ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுடன் தொடர்பு ஏற்பட்டது. 

      சென்னை திரும்பிய ராமமூர்த்தி ஏ.எஸ்.கே.ஐயங்காருடன் சேர்ந்து சென்னை மாகாண புரட்சிகர மாணவர் இயக்கத்தைத் தொடங்கினார். 

      அதில் பி.சுந்தரையா கலந்துகொண்டு பேசினார்.

       1936ல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 

      1934ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர்.

      சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். 

      அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. 

     மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

    1937ல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 

   1939ல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார். அவரும் வெற்றி பெற்றார். காந்தி பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்று ஒப்புக் கொண்டார். 

    1939ல் ஜெர்மனி போர் தொடுத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. ஹிட்லரின் இந்த யுத்தம் ஏகாதிபத்திய யுத்தம் என்று முதலில் கம்யூனிஸ்டுகள் வர்ணித்தனர். யுத்த எதிர்ப்புக் கொள்கைக்காக பல கம்யூனிஸ்டுகள் கைதானார்கள்.

     1940ல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 

      யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். 

    சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932ல் நடைபெற்றது.  இது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார்.

     சென்னையில் இவர்கள் ஒரு முகாம் அமைத்து, அங்கிருந்து அரசுக்கு எதிரான வெளியீடுகளை சுற்றுக்கு விட்டும், பிரச்சாரங்களில் ஈடுபட்டும் கட்சிப் பணியில் ஈடுபட்டனர். இதைக் கண்காணித்த போலீஸ் இவர்களைக் கூண்டோடு கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். ஏ.எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் பாதிக்கப்பட்டவர்கள்.

     முந்தைய நிலையில் பிரிட்டிஷ் அரசுக்கு போர் முயற்சிகளில் ஒத்துழைப்பு கிடையாது என்று இருந்த நிலையை ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் மாற்றிக் கொண்டு பிரிட்டிஷுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கலாயினர். 

     அதனால் இவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர். ராமமூர்த்தியும் சிறையிலிருந்து வெளி வந்து சுதந்திர மனிதரானார்.

    நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது.

      ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

    1952ல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார்.

     அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்தார்.

     பி.ராமமூர்த்தி

தான் அப்போது எதிர் கட்சித் தலைவர். 

    மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் சிறப்பாக இருந்தன.

     பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. 

     இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு 

சி ஐ டி யூ தொழிற்சங்கம் அமைந்தது.  அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.

    தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கி வளர்த்ததிலும், பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியதிலும் பி.ஆருக்கு மகத்தான பங்கு உண்டு.

    கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஜனசக்தி ஏட்டை உருவாக்குவதில் பி.ராமமூர்த்தி சிறந்த பங்காற்றினார்.

    குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்நடத்திய போராட்டத்திலும் பி.ராமமூர்த்தி அவருக்கு துணை நின்றார்.

     சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலய தர்மகர்த்தா தேர்தலில் அருந்ததிய மக்களை வாக்களிக்கச் செய்த பெருமையும் அவருக்கு உண்டு.

    மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டுமென நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் தோழர் பி.ராமமூர்த்திதான்.

     தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து தமிழில் பேசிய முதல் தலைவரும் அவரே.

     தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை ஆற்றினார்.

     தீக்கதிர் பத்திரிகையை நிலை நிறுத்தியத்திலும், மதுரையில் தீக்கதிர் உள்ள இடத்தை கட்சிக்கு பெற்று தந்ததிலும் தோழர் பி ஆர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.

     தோழர் பி.ராமமூர்த்தி, இயக்க குடும்பத்தை சேர்ந்த அம்பாள் என்பவரை கலப்பு திருமணம் செய்து, அந்த தம்பதியினருக்கு பொன்னி, வைகை என இரு மகள்கள் உள்ளனர். பொன்னி மருத்துவர். தோழர் வைகை தொழிலாளர்களின் மதிப்புமிக்க வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.            

                  "விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் "

         "காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து "

ஆகிய நூல்கள் இவர் எழுதியவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

     1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.

No comments:

Post a Comment