Saturday, October 22, 2022

அரைப்பைத்தியமும்..முழுப்பைத்தியமும்

 தொடர்பின்றிப் போன

பிறந்த ஊரின் நினைவுகளையும்

தொடர்பற்றுப் போன

உறவுகளின் நினைவுகளையும்

மறக்கவும் முடியாது

தொடரவும் முடியாது

சுமந்துத் திரிகிற

ஒவ்வொரு கணமும்...


என்றேனும் பயன்படும் என்று

பொறுக்கிப் பொறுக்கிச் சேர்த்த

எதற்கும் பயன்படாத

பொருட்கள் அடங்கிய

அழுக்கு மூட்டையை

சுமந்துத் திரிகிற

எங்கள் தெரு அரைப்பத்தியமே

நினைவில் வந்து போகிறான்..


பயனற்றதுதான் ஆயினும்

எப்போதேனும் யாரேனும் 

அவனை நெருங்குகையில்

பறித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில்

சட்டென அந்த மூட்டையை

நெஞ்சோடு நெருக்கி

சேர்த்து அணைத்துக் கொள்கிறான்

உயிரை அணைப்பதைப் போலவே....


தொடர்பில்லைதான் ஆயினும்

ஏனோ எதனாலோ

தனிமையோ வெறுமையோ

என்னுள் விரக்தியை,விதைக்கையில்

பயனற்ற நினைவுகளை

சேர்த்தணைத்து பெருமூச்சுவிடுகிறேன்

ஒரு வகையில்

அந்த அரைப்பைத்தியம் போலவே

1 comment:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை.

/ஆயினும்
ஏனோ எதனாலோ
தனிமையோ வெறுமையோ
என்னுள் விரக்தியை,விதைக்கையில்
பயனற்ற நினைவுகளை
சேர்த்தணைத்து பெருமூச்சுவிடுகிறேன்
ஒரு வகையில்
அந்த அரைப்பைத்தியம் போலவே.. /

உண்மை.. . பயனற்ற நினைவுகளின் ஒப்பீடு நன்றாக உள்ளது. இந்த பயனற்ற பழைய நினைவுகளினாலேயே நாம் சமயத்தில் தேவையில்லாத வாதங்களில் இறங்கி, முழுப் பைத்தியமாகியும் விடுகிறோம்.
நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment