ஒரறிவு உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரைஅனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி "கர்ஜிக்கும்
காலன் தோற்றது.....
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள் மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?
அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை......
அவர்தானே
வசூல் " சக்கரவர்த்தித் திருமகனாய் " இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?
தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை....
அவர்தானே
"மன்னாதி மன்னனாய்த்" திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?
அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமென
"எங்கள் தங்கமென" அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான சூத்திரம் என்னவாக இருக்கும் ?
கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?
புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
"நல்லவன் வாழ்வான் "
"தர்மம் தலைகாக்கும் "எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர் புகழ்
"இன்றுபோல் என்றும் வாழ்க" என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்
2 comments:
ஈகை குணம்...
எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் பிறருக்கு வாரி வழங்கிய, எளியவர்கள் மீதான அன்புகொண்ட குணம்தான் அவரை மக்கள் மனதில் வாழவைக்கிறது
Post a Comment