Tuesday, July 30, 2024

நிஜமாகும் கட்டுக்கதை..

 ஏழுகடல் தாண்டி

ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

2 comments:

மனோ சாமிநாதன் said...

அருமை!
எல்லாமே இயந்திரத்தனமாக போய்க்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையில் அன்பென்ற மழைத்துளி மட்டும் தான் நெஞ்சில் நிறைந்து உயிர்ப்புடன் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன். அன்பிருந்தால் சாத்தியம்! உண்மை.

Post a Comment