Showing posts with label அவல் ( 1 ). Show all posts
Showing posts with label அவல் ( 1 ). Show all posts

Friday, September 20, 2013

சினிமா- ஒரு மாய மோகினி

எப்படி எனக்கு சினிமாவின் மீது அப்படியொரு மோகம்
வந்தது என இப்போது நினைத்துப் பார்த்தாலும்
அனுமானிக்க முடியவில்லை

எங்களூரின் நான் சிறுவனாய் இருக்கையில் அதிகம்
நாடகம் நடக்கும்.குறிப்பாக வள்ளி திருமணமும்
ஹரிச்சந்தரா நாடகமும்.தெரிந்த கதைதான்
என்றாலும் கூட எங்களூர் "பெருசுகள் "
ஒவ்வொரு முறையும் எந்த ஊரில் எந்த நடிகர்
எந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வார்களோ
அவர்களைத் தேர்ந்தெடுத்து எங்களூரில் நடிக்கச்
செய்வார்கள்

அவர்களுக்கு ஓத்திகை கிடையாது
என்பதால் ஒவ்வொரு கதாப்பாத்திரத்து நடிகரும்
பாத்திரத்தை மீறித் தான் தான் ஜெயிக்கவேண்டும்
எனச் செய்கிற ஜெகதலப் பிரதாபங்கள் நாடகத்தை
உச்சக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

பல சமயங்களில்  வள்ளி திருமணத்தில்  வள்ளிக்கும்
முருகனுக்குமான  இறுதி தர்க்கம் முடிவடையாது
வள்ளிமாலை வாங்காது போன நிகழ்வுகளும்
அதன் தொடர்சியாய் "பெருசுகள் " அப்படி
மாலை வாங்காமல் போனால் ஊருக்கு
ஆகாமல் போகும்என்று கெஞ்சிக் கூத்தாடி
மேடை பின்புறம் கூட மாலை வாங்கவைத்த
நிகழ்வுகள் இப்போது  கூடஎன்னுள் நிழற்படமாய்
ஓடிக் கொண்டுதான்  இருக்கிறது

அந்த சமயத்தில் "புதுமையும் புரட்சியுமே " எங்கள்
மூச்சு என்கிற நினைப்பில் படித்துக் கொண்டிருந்த
சிலரும்படித்து வேலை கிடைக்காமல்
அலைந்து கொண்டிருந்த சிலரும் நண்பர்களாய்
 இருந்தோம்

.எங்களுகெல்லாம் இந்தப் பெருசுகள்  இப்படியே
விட்டால் நூறு வருஷம் கூட வள்ளி திருமணத்தையும்
ஹரிச்சந்தரா மயான காண்டத்தையும் போட்டுக்
கொண்டுதான் இருப்பார்கள். இதற்கு மாற்றாக நாம்
உடனடியாக இன்றைய சமுகப் பிரச்சனைகளை
உள்ளடக்கியதாக சமூக நாடகம் ஒன்று போட்டு
இந்தப் பெருசுகளையும் சமூகத்தையும் உடனடியாக
மாற்றியாக வேண்டும் என முடிவெடுத்தோம்

என்ன காரணத்திலோ பெருசுகளுடன் மன விரோதம்
கொண்ட ஒலி பெருக்கி வைத்திருந்த மணி அண்ணனும்
ஒலி ஒளி அமைப்பும் இலவசமாய் தான்
செய்து தருவதாக ஒப்புக் கொள்ள உடனடியாக
ஒரு கூட்டம் போட்டு ஏபிஎம் நாடக் குழு என
ஒலிபெருக்கி அமைப்பாளரின்
பெயரிலேயே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தோம்

(தொடரும் )