Showing posts with label தந்தையர் தினம். Show all posts
Showing posts with label தந்தையர் தினம். Show all posts

Sunday, June 21, 2015

முன்னறித் தெய்வப்பட்டியலில்...

முன்னறித்  தெய்வப்பட்டியலில்
இரண்டாவதாயிருப்பதுக்  குறித்து
அவர்கள் கவலைப்பட்டதே இல்லை

குழந்தைகளின்முன்னேற்றம் குறித்துச்
சிந்திப்பதில் அவர்கள் எப்போதும்
முதலாவதாகவே இருக்கிறார்கள்

மாதா துவங்கி தெய்வத்தில் முடியும்
அந்த நால்வர் பட்டியலில்
குருவுக்கு முன்னர் இடம்பெற்றது
வெறும் வார்த்தை ஜாலத்திற்காக இல்லை

உலகைப் புரிந்து கொள்ளக்
கற்றுக் கொடுப்பதில் அவர்கள்
அனைத்து விஷயத்திலும் நிஜமாகவே
குருவுக்கு முன்னால்தான் இருக்கிறார்கள்

அன்னையர் தினம் அளவு
தந்தையர் தினம் கொண்டாடப்படுவது குறித்தும்
அவர்கள் சஞ்சலப்படாதே இருக்கிறார்கள்

ஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்
சில விசித்திர விதிகளினால்
அவர்கள்  உணர்வுகளை எப்போதும்
உள்ளத்தில் அடக்கிவைத்தே அலைகிறார்கள்

நம்மை வயிற்றில் சுமக்காது போயினும்
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து சுகங்காணும்

நமக்குப் பாலூட்டி வளர்க்காது போயினும்
காலமெல்லாம் சிகரத்தில் வைக்க தினம்சாகும்

தந்தையரின் தியாகங்களை
சிந்தையினில் எந்நாளும் கொள்வோம்-அவரின்
கனவுகளை நினைவாக்கி
அவர்மனதைக் குளிர்வித்து மகிழ்வோம்

அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்