Saturday, September 8, 2012

பதிவர்கள்- ஒரு சிறு அறிமுகம்

எம் படைப்புகள் எல்லாம்...

ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை
எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
மனம் கீறிப்போகும்
சிறுச்  சிறு அல்லல்களை
அதிக மசாலாக் கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

52 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

JR Benedict II said...

நல்லா இருக்கே

Rasan said...

அருமையாகவுள்ளது.பகிர்ந்தமைக்கு நன்றி.

// "யாதும் ஊரே யாவரும் கேளீர் " //

Unknown said...

அய்யா! உண்மை உணர்வின் வெளிபாடு இந்த படைப்பு... சூப்பர்! அருமை....

மனோ சாமிநாதன் said...

பதிவர்களுக்கிடையே உள்ள இனிமையான புரிதலையும் பதிவுகளின் வழியே உள்ள தேடுதலையும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்!‌

கே. பி. ஜனா... said...

அருமை!

Anonymous said...

ஆற்று நீரை எதிர்த்துப் போகும் அதீத எண்ணத்தில் சிலர் எழுதுகிறார்கள் தான். காலப் போக்கில் அவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.
உங்கள் இடுகை ஒவ்வோரு நாள் ஒவ்வொரு விதமாக உள்ளது.
அது தானே பதிவென்பது. பணி தொடரட்டும்.
நன்று.
வேதா. இலங்காதிலகம்.

ஹேமா said...

வேலைகள்,மனச்சுமைகளுக்கு நடுவிலும் எழுத்தில் மனங்களைக் கழுவும் பதிவர்களுக்கான நல்லதொரு புரிந்துணர்வுக் கவிதை.அருமை ஐயா !

vimalanperali said...

அன்றாட வாழ்க்கையை சொல்லிசெல்லும் கதைகளே ஜெயிக்கின்றன,

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்//

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ;)))))
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

kowsy said...

மனதில் தோன்றும் உணர்வுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துவார்கள் . ஒரு படைப்பாளி தன் உணர்வுகளை அன்றாட நிகழ்வுகளை தன் எண்ணத்தின் வண்ணமாய் படைக்கின்றான் . அதில் திருப்தியும் காண்கின்றான் . அதில் பலர் பலன் கருதி படைக்கின்றான் . படைப்பாளிகளின் பண்பும் புரிதலும் உங்கள் படைப்பின் மூலம் புலப்படுகின்றது . தொடருங்கள் . உங்கள் எண்ணம் என்னும் வண்ணத்தில் பல புரிந்துணர்வுகளும் புதுமையும் தோன்றட்டும்

Seeni said...

unmai!

arumai!

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

புதியதோர் உலகைச் செய்யப்
புறப்படும் தோழா! வெல்க!
பதிவையோர் உயிராய் எண்ணிப்
படைத்துள கவிதை நன்று!
சதியையோர் பக்கம் தள்ளு!
சரித்திரப் பக்கம் பேசும்!
விதியையோர் பக்கம் தள்ளி
மதியிலோர் வாகை சூடு!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr



டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பதிவர்களைப் பற்றி இவ்வளவு அழகாகச் சொல்ல முடியுமா?ஒவ்வொரு வரியும் அருமை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.3

Rathnavel Natarajan said...

அருமை ரமணி சார்.
எழுதுவது நமது ஆத்ம திருப்திக்காக. எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். நல்ல நட்புக்களை சம்பாதிக்கிறோம்.
உங்கள் அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி சார்.

எல் கே said...

அருமை அருமை

Unknown said...

நல்ல புரிந்துணர்வு எண்ண வெளிப்பாடு..! வாழ்த்துக்கள்!

Unknown said...



எளிமை! இனிமை! உண்மை!அருமை!

நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

/// உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
"யாது ஊரே யாவரும் கேளீர் "என
பண்புடன் வாழ முயலும்
பதிவர்கள் நாங்களெல்லாம்
விஞ்ஞானம் ஈன்றெடுத்த
புதிய இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர பலமே ///


இதற்கு மேல் என்ன வேண்டும்...? நன்றி சார்...

sury siva said...

அந்தக் காலத்துலேயே,

இராம சரித மானசு எழுதிய

துளசிதாசரிடம் என்னைப்போல ஒருவர் கேட்டாராம்:

ஏன்பா இதெல்லாம் எழுதிக்கினு !!
ஒனக்கு வேற வேலையே இல்லையா !
யாரு இதெல்லாம் படிக்கப்போறாக...என்றாராம்.

அதற்கு துளசிதாசர் சொன்னாராம்.
இந்த ராமனின் கதையை நான்
யாரேனும் படிப்பார்கள், படிக்கவேண்டும் என
எழுதவுமில்லை. எதிர்பார்க்கவுமில்லை.

இது என்
உள்ளிருக்கும் ஆத்மாவின் அமைதிக்காக,
சுகத்திற்காக என்றாராம்.

("ஸ்வாந்தஸ் ஸுகாய...")

அகத்தியரோ தொல்காப்பியரோ
ஆனானப்பட்ட அவ்வைப்பிராட்டியோ
திருமூலரோ திருவள்ளுவரோ
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கூட

இத்தனை ஃபாலோயர்ஸ் இருப்பர் என
எண்ணியிருப்பரோ !! ஐயம் தான் !!

ஒரு படைப்பினை
குப்பையா, கவிதையா, காவியமா எனக்
காலமல்லவா சொல்கிறது !!

அதுவும் சில நேரங்களில்
காலனிடம் சென்றபின்பு தானே
ஞாலம் உணர்கிறது. !!

பாருக்குள்ளே நல்ல நாடு, நம்
பாரத நாடு என பறை சாற்றிய
பாரதிக்குக்கூட
இறுதி யாத்திரையில்
இருபது பேர் கூட இல்லையாமே !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

முத்தரசு said...

அருமையான அறிமுகம்

ரிஷபன் said...

பதிவர்கள் நாங்களெல்லாம்
விஞ்ஞானம் ஈன்றெடுத்த
புதிய இனிய இனமே

அருமையாக சொல்லி விட்டீர்கள்..

கரந்தை ஜெயக்குமார் said...

வலைப் பூவால் ஒன்றினைந்து புதியதோர் உலகு செய்வோம்.
அருமையான கவிதை

கவி அழகன் said...

Alakaaka solliyirukkireerkal

உழவன் said...

அறிமுகம் நல்லாருக்கு..நன்றி அய்யா..

செய்தாலி said...

ரெம்ப சரியா சொனீங்க சார்
இதுதான் உண்மை

Thozhirkalam Channel said...

இணையத்தால் என்றும் இணைந்திருப்போம்,,

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.

கீதமஞ்சரி said...

தாங்கள் குறிப்பிட்டுள்ள அற்புதப் பதிவுலகத்தின் அங்கத்தினராய் இருப்பதற்காக மிகவும் பெருமிதமாய் உணர்கிறேன். மனதின் சோர்வகற்றி, பதிவுலகின் பலத்தைப் போற்றும் அருமையானப் படைப்புக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

தனிமரம் said...

அருமை கவிதை!

G.M Balasubramaniam said...


பதிவுலக எழுத்தாளர்களை அற்புதமாக வெளிக் கொண்டு வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

விச்சு said...

ஆத்ம திருப்திக்காகவும் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் எழுதுவது பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பதிவுலகத்தினைப் புரிந்துகொண்டு இன்னும் எழுதுவோம்.

”தளிர் சுரேஷ்” said...

பதிவர்களின் இயல்பினை படம் பிடித்தது கவிதை! சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


Prem S said...

ஒவ்வொரு வரியும் அருமை.

தி.தமிழ் இளங்கோ said...

மனதில் பட்ட வார்த்தைகளை மறைக்காமல் சொல்லி எதனையும் எதிர்பாராது எழுதும் பதிவர்களின் புகழ் சொல்லும் கவிஞரின் கவிதை.


குட்டன்ஜி said...

பதிவர்கள் பற்றி இதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது.
த.ம.13

Anonymous said...

அழகா உண்மைய சொல்லியிருக்கீங்க:)

துரைடேனியல் said...

இன்றைய பதிவுலகத்தைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். உண்மையில் நாம் புதிய இனம்தான். இணையத் தமிழினம். இணையில்லாத் தமிழினம். புதிய புதிய சிந்தனைகள் அருவிபோல தங்களது கவிதை ஊற்றிலிருந்து கிளம்புவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அருணா செல்வம் said...

பல மனங்களை நீங்கள்
ஒரு மனதாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
சூப்பர் ரமணி ஐயா.

நம்பள்கி said...

த.ம. 1

Unknown said...

நல்ல படைப்பு . ஆரம்பம் அருமை

பால கணேஷ் said...

ஒவ்வொரு வரியும் அக்ஷர லட்சம் பெறும். மிகமிக உண்மை. நானும் பதிவுலகில் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்ள வைக்குத் தருணங்களில் ஒன்று இதைப் படித்தது. மிக்க நன்றி ஐயா.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்பவே அருமை..

ஸாதிகா said...

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
"யாது ஊரே யாவரும் கேளீர் "என
பண்புடன் வாழ முயலும்
பதிவர்கள் நாங்களெல்லாம்
விஞ்ஞானம் ஈன்றெடுத்த
புதிய இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர பலமே//அருமையாக சொல்லி இருக்கின்றீர்கள்.

ADHI VENKAT said...

அருமை சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை!

"யாவரும் கேளிர்"

வெங்கட் நாகராஜ் said...

//விஞ்ஞானம் ஈன்றெடுத்த
புதிய இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர பலமே//

அருமை ரமணி ஜி!

இன்று எனது பக்கத்தில் வெளியிட்ட பகிர்வு டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை. முடிந்தபோது படியுங்கள்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

கதம்ப உணர்வுகள் said...

இம்முறை பதிவர்களை மேன்மைப்படுத்தும் மிக அருமையான பகிர்வு ரமணிசார்....அழகிய அறிமுகம்.... கவிதை வரிகளில் அலங்காரம் இல்லை.. வார்த்தை ஜாலங்கள் இல்லை, வசீகரிக்கும் சொற்கள் அமைப்பு இல்லை.. எல்லாமே இயல்பாய் வெகு இயல்பாய் இதயத்தில் இருந்து வெளிவந்த எதார்த்த உண்மைகள் மட்டுமே இந்த கவிதைக்கு அழகு சேர்க்கிறது....

சினிமாவில் எதுவும் சாத்தியமே... ஒரே ஒரு ஹீரோ பத்துபேரை உதைப்பதும்... நெருப்புக்குள்ளில் இருந்தும் சிரித்துக்கொண்டே வெளிவருவதும்.... ஆனால் பதிவர்களின் பதிவுகளில் இத்தகைய ஆர்டிஃபிஷியல் எதுவுமே இல்லை.. எல்லாமே சிந்தனையின் துளிகள்.... கற்பனைகள், எண்ணங்கள், நிகழ்வுகள், சிறு சிறு சலனங்கள், கண் எதிரில் நடக்கும் அநியாயங்கள், அதை தட்டி கேட்க நம்மால் முடியாவிட்டாலும் நம் எழுத்துகளால் முடியும் என்ற நம்பிக்கை வரிகள்.....

மிக அற்புதமான வார்த்தை கோர்ப்புகள்.... நாங்கள் வெறும் பதிவர்கள் மட்டுமே.. எதையும் மாற்றி அமைக்கும் ப்ரம்மாவோ இல்லை அழிக்கும் ஆற்றல் கொண்ட சிவனோ காக்கும் அருள் புரியும் விஷ்ணுவோ இல்லை... என்று தன்னடக்கத்துடன் ஆரம்பித்து தொடர்ந்த வரிகள் மனதை கவர்ந்தது ரமணிசார்... பதிவர்களின் எழுத்துகள் எத்தனையோ சாதிக்கிறது... தவற்றை திருத்த உதவுகிறது.... நடந்த சம்பவங்களை படைத்து இனி இப்படி ஒரு கெடுதல் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கையும் தருகிறது... மனதை நிறைக்கும் தாயன்பை கொட்டுகிறது...... நல்லதை எடுத்துச்சொல்கிறது... கருத்துகளை பகிர்கிறது.... ஆசானாய் நம்மை வழி நடத்துகிறது.... பதிவர்கள் பெருமைக்கொள்ளவைக்கும் பகிர்வு இது...

இப்படி எத்தனையோ அற்புதங்கள் பதிவுகளில் நான் கண்டதுண்டு.... எளிமையான சொற்களால் கோபுரம் அமைத்து அதற்கு மணிமகுடம் சூட்டும் அருமையான கவிதை வரிகள் இவை ரமணி சார்.....

” பாமரமொழி “ ரசித்தேன்..... எழுத்துகளில் சோகங்களை கொட்டி வடிகாலாக்கி மனதை இலேசாக்கவும் முடியும் என்றும்.... சந்தோஷங்களை பகிர்ந்து, அருமையான படைப்புகளை தந்து சிகரமாய் ஜொலித்தாலும் எத்தனை பணிவுடன் எங்கள் வசதிக்கேற்றவரை சமைத்து எங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறோம் என்ற இந்த சொல்லாடல் மிக மிக ரசித்தேன் ரமணி சார்.... அருமை அருமை.....

எல்லாம் அறிந்தவன் கற்றுத்தேர்ந்தவன் அமைதியாக அடக்கமாக தான் இருப்பான்.... என்பதை பறைச்சாற்றுகின்றன உங்கள் கவிதை வரிகள்....


கதம்ப உணர்வுகள் said...

எழுத்துகள் மனிதர்களை ஒன்றிணைக்கிறது என்பதற்கு இதோ இது ஒரு உதாரணம்... பதிவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் காணாது தம் தம் எழுத்துகளால் மட்டுமே எல்லோரின் மனதிலும் நிலைத்து நிற்கின்றனர்.... மிக அருமையான அழகான உவமை... உலகையே ஒரு வீடாக்கி.. ஆமாம் ஆமாம் உலகத்தில் எந்தெந்த மூலையில் இருப்போர் எல்லாம் இந்த எழுத்துகளால் தான் இணைந்தோம்.... அறிந்த பதிவர்கள் அத்தனை பேர்களையும் உறவுகளாக்கும் பெருந்தன்மை மிக அருமையாக பளிச்சிடுகிறது... மனதில் இருக்கும் அன்பு எத்தனை அழகாய் பிரதிபலிக்கிறது....பதிவர்களை உறவுகள் என்று சொல்லும் அன்பு..... பண்புடன் வாழ முயலவில்லை.. பண்புடன் தான் வாழ்கிறார்கள்... இதுவரை நான் பேசிய அத்தனை பதிவர்களும் அன்பு மனம் படைத்தவர்களாக உதவும் நற்பண்பு உடையவர்களாக பேசும்போதும் கண்ணியம் மீறாத குணங்களாக மட்டுமே தெரிகிறார்கள்.... அத்தனையும் எழுத்துகள் மூலமாக அறிந்த உள்ளங்கள்....

அற்புதமான கோர்ப்பு.. முத்து பதித்தாற்போல் ” விஞ்ஞானம் ஈன்றெடுத்த புதிய இனிய இனமே “ கடைசி வரி நச் எப்போதும்போல்.... பதிவர்களின் எழுத்துகளில் இருக்கும் சக்தி எத்தனை பிரம்மாண்டமானது என்று ஆணித்தரமாக சொல்லி முடிக்கிறது...

நல்லதை பகிர்வோம் எழுத்துகளில்
அன்பினை எழுதுவோம் எழுத்துகளில்
பண்பினை கற்பிப்போம் எழுத்துகளில்
அமைதியை படைப்போம் உலகினில்

பதிவர்கள் கம்பீரமாக நெஞ்சு நிமிர்த்திக்கொள்ளவைக்கும் அழகிய பகிர்வு இது....

இனி வரும் ஜெனரேஷன் எல்லோரும் மூத்தோரின் எழுத்துகளை படித்து பயன்பெற்று முன்னேறும்போது அங்கே ஜாதி, மதச்சண்டை இருக்காது.. போட்டி பொறாமைகள் இருக்காது... நல்லதோர் உலகம் படைக்க முயன்ற பதிவர்களின் எழுத்துகள் காலம் சென்றபிறகும் நிலைத்து நிற்கும்... இனிவரும் ஜெனரேஷனுக்கு பாடமாக அமையும்... அன்பு அன்பு அன்பு .... இது மட்டுமே தாரக மந்திரமாக இருக்கும் உலகினில் என்று சொன்ன அசத்தலான கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் ரமணிசார்... எப்போதும் போல் ஜொலிக்கிறது வரிகளில் இருக்கும் உண்மை....

கதம்ப உணர்வுகள் said...

த.ம.18

cheena (சீனா) said...

அன்பின் ரமணி - சிந்தனை அருமை - கவிதை அருமை - பதிவர்களின் கருத்தினை அப்படியே படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள் - ஆனால் இப்பதிவர்களீலும் பலர் கதாசிரிய்ரகளாகவும், கவிஞர்களாகவும் மிளிர்கின்றனர். நல்வாழ்த்துகல் ரமணீ - நட்புடன் சீனா

Post a Comment