Tuesday, November 17, 2015

வரங்களைக் கூட கொடிய சாபமாக்கி...



வெறித்துப் பயந்து ஓடும்
தன்மை கொண்ட பூனையாயினும்
முழு வழியையும் அடைத்துத்
தாக்கக் கூடின்
அது தப்பிக்கக் கழுத்தில்தான் பாயும்

பள்ளம் பார்த்து
தானே ஒதுங்கி ஓடும் நீராயினும்
அதன் போக்கனைத்தும் அடைத்துத்
தொலைப்போம் ஆயின்
அது நம் போக்கை அடைக்கத்தான் செய்யும்

வறுமையில் வயிறு
ஒட்ட ஒட்டக் கிடப்பவன்
பாடம் கற்காது போயின்
செல்வச் சேர்க்கையின் போது
அது நிச்சயம் உதவாதே போகும்

கோடையில் நீர்த்தேடி
தினம் அலைந்துத் தொலைப்பவன்
அதன் அருமை புரியாது போயின்
அது அதிகம் கிடைக்கையில்
நிச்சயம் அது வீணாய்த்தான் போகும்

ஓட்டைப் பானையில்
நீர்ப்பிடிக்கும் மூடனாய்
இயற்கையின் பால பாடங்களையே
அறியாத மூடனாய்
இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறோம் ?

வலியக் கிடைக்கும்
வரங்களைக் கூட
கொடிய சாபமாக்கி
அவதிப்படும் மூடர்களாய்
இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறோம் ?

14 comments:

Avargal Unmaigal said...

அறிவுபூர்வமாக சிந்திக்கவும் பேசவும் செய்யும் நம் மக்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட்டால் மாற்றம் வரலாம்

Avargal Unmaigal said...

ஒன்று இரண்டு நான்காவது பாராக்களின் வரிகள் மிக அருமை

நிஷா said...

வலியக் கிடைக்கும்
வரங்களைக் கூட
கொடிய சாபமாக்கி
அவதிப்படும் மூடர்களாய்
இன்னும் எத்தனை காலம் இருக்கப் போகிறோம் ?

அடுத்த தேர்தல் வரும் வரைக்கும். !

அடுத்த தேர்தலில் வீட்டுக்கொரு படகும் ஆளுக்கொரு குடையும் தருபவர்களுக்கு வாக்களிப்போம் என சொல்லி விடுவோம். பிரச்சனை சால்வ்.

ப.கந்தசாமி said...

நமக்கென்ன என்று அனைவரும் நினைப்பதால் வரும் நிலை இதுதான்.

Vish Cornelius said...

ஓவ்வொரு வரியும் அருமை....
வரம் என்பது எப்படி சாபமாகியது... மனிதனின் சுயநலத்தினால் மட்டுமே..

அருணா செல்வம் said...

அருமை.... இரமணி ஐயா!

தேடி வந்த
மகா லட்சுமியை
ஓடிப்போ என்கிறார்கள்
அவளைக் கட்டி
ஆளத் தெரியாதவர்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
ஏரி குளங்களைத் தூர்த்தோம்
வீடுகளாக்கினோம்
ஆற்று மணலை எல்லாம் காசாக்கினோம்
அனுபவிக்கத்தானே வேண்டும்
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும் ஐயா...

மீரா செல்வக்குமார் said...

ஓட்டைப் பானையில்
நீர்ப்பிடிக்கும் மூடனாய்///அருமை கவிஞரே...

”தளிர் சுரேஷ்” said...

ஒவ்வொரு வரியும் அருமை! உவமைகள் சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வரிகள்! உவமைகளும் சிறப்பு! அருமை..நாம் சுயநலவாதிகளாக இல்லாமல் அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால் பல நன்மைகள் விளையும்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

ஒவ்வொரு வரிகளையும் இரசித்து படித்த போது அதன் சிறப்பறிந்தேன் ஐயா... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

கடைசி இரண்டு பாராக்கள் - என்று திருந்தப் போகிறோம்.....

Post a Comment