Sunday, January 5, 2020

மீண்டும்..

மீண்டும் நான் ஓடத் துவங்குகிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் மீண்டும் எப்போதும் போல் ஓடத் துவங்குகிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடத் துவங்குகிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

மீண்டும் சீரான வேகத்தில்
முன்போலவேநான் என்னைக் கடக்கத் துவங்குகிறேன்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

வாருங்கள் கவிஞரே
தங்களை வலையில் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன
தொடருங்கள்
காத்திருக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

அருமை.

G.M Balasubramaniam said...

ஓட்டம் அருமை

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

தொடரட்டும் பகிர்வுகள்.

Post a Comment