Tuesday, October 6, 2020

கண்டேன் சீதையை....

என் சிறு வயதில் ஏறக்குறைய

ஓராண்டு காலம் செவ்வாய் மற்றும்

சனிக்கிழமைகளில் இராமாயண உபன்யாசம்

கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.


உபன்யாசம் கேட்கப் போகாவிட்டால்

இரவு உணவு பாதிக்கப்படும் எனும்

நிலையில் வீட்டின் கண்டிப்பு இருந்ததாலும்

உபன்யாசகர் வெகு சுவாரஸ்யமாகக்

கதை சொல்லிப் போனதாலும் நான்

கூடுமானவரையில் உபன்யாசம் 

கேட்கப் போவதைத் தவிர்ப்பதில்லை


அன்று சிறு வயதில் கேட்ட இராமாயணக் கதை

மட்டுமல்ல சில குறிப்பிட்ட காட்சிப் படிமங்களும்

அன்று என்னுள் பதிந்தது இன்று வரை என்

நினைவில் இருப்பது என்பாக்கியம் எனத்தான்

சொல்லவேண்டும்


அவற்றுள் முக்கியமானது சீதையை

இலங்கையில் சந்தித்து பின் இராமனை

அனுமன் சந்திந்த நிகழ்வை அந்த

உபன்யாசகர் உபன்யாசம் செய்த விதம்...


அனுமனைத் தவிர அனைவரும் பல்வேறு

திசைகளில் சீதையைத் தேடிச் சென்று

எவ்வித நேர்மறையான தகவலும் இன்றித் திரும்ப

மீதம் நம்பிக்கையூட்டும்படியாய் இருந்தது

அனுமன் வருகைமட்டுமே என்றிருந்த நிலையில்..


அனுமன் வருகிற செய்தி அறிந்து இராமன்

கொள்கிற பதட்டத்தையும் அவன் என்ன சொல்லப்

போகிறாரோ என கொண்ட அதீத எதிர்பார்ப்பையும்

இராமானாகவும் அனுமனாகவும் அவர்

கதாப்பாத்திரமாகவே மாறி மாறி உபன்யாசம்

செய்து கேட்போருக்குள் பதட்டத்தைக் கூட்டி.....


சீதையைக் கண்டேன் எனச் சொல்லாமல்

கண்டேன் சீதையை எனச் சொன்னதன்

முக்கியத்துவத்தை கேட்போரும் உணரச்

சொன்னவிதம், அந்தக் காட்சி ஏன் அந்தச்

சூழல் கூட இன்று என்னுள் நிழற்படமாய்

இருக்கிற சூழலில்.....


இந்த கொரோனா காலத்தில் முக நூல்

மற்றும் வலைத்தளங்களில் வருகிற

சில பதிவுகளும் அதே தாக்கத்தை

ஏற்படுத்திப் போகிறது என்றால்

அது மிகையில்லை


பிறந்த நாள் வாழ்த்து மண நாள் 

வாழ்த்துகளைப் பதிவு செய்கிறவர்கள்

எல்லாம் முதலில் வாழ்த்துச் செய்தி 

என்று பதிவு செய்யாமல் சம்பத்தப்

பட்டவரின் புகைப்படத்தைப் பதிவு செய்துவிட்டு

பின் அவர் குறித்த சிறப்பான விஷயங்களை

எல்லாம் பதிவு செய்துவிட்டு பின் 

கடைசியாக பிறந்த நாள் வாழ்த்து எனவோ

மணநாள் வாழ்த்து எனவோ பதிவிடுவதற்குள்

ஏற்கெனவே பல்வேறு எதிர்மறைச் செய்திகளால் தகவல்களால் பாதிக்கப் பட்டிருக்கும் நம் மனம் எதையோ கற்பனை செய்து

படபடத்து முடிவைப் படித்ததும் தான்

ஆசுவாசம் கொள்கிறது..


எனவே இந்தக் கொரோனா கொடூரம்

முடிகிறவரையிலாவது முதலில் சம்பத்தப்பட்டவரின்

புகைப்படத்தைப் பதிவு செய்யும் முன்

சொல்லின் செல்வர் அனுமன் 

கண்டேன் சீதையை எனச் சொன்னதைப் போல

பிறந்த நாள் வாழ்த்து என்றோ

மண நாள் வாழ்த்து என்றோ பதிவிட்டுவிட்டு

பின் புகைப்படத்தைப் பதிவு செய்தால்

தேவையற்ற சில நிமிடப் பதட்டம் குறையும்

எனபதோடு இந்தச் சாக்கில் இராமனையும் அனுமனையும் சில நிமிடங்கள் நினைக்கிற பாக்கியமும் 

புண்ணியமும் நிச்சயம் வந்து சேரும்

என்பது என் அபிப்பிராயம்...


 சரிதானே.....

9 comments:

balu said...

அருமையான பதிவு. சரி இராமாயணம் பற்றி இப்போது யாரும் நினைப்பதில்லை. எல்லாம் திராவிடம் தான்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான்
இந்த கொரோனா காலத்தில் அனுமனின் உத்தியை கடைபிடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்

துரை செல்வராஜூ said...

இப்போது இப்படி மற்றவர்களை பரபரப்புக்கு/ தவிப்புக்கு உள்ளாக்குவதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்..

எனது உறவில் / நட்பில் இப்படிச் செய்ததைக் கண்டித்து புறக்கணித்து இருக்கிறேன்...

புறக்கணிப்பு ஒன்றே நிம்மதி...

ஸ்ரீராம். said...

ஆம்.  நீங்கள் சொல்லும் அனுபவம் எனக்கும் உண்டு.  நானும் நினைத்ததுண்டு.

வல்லிசிம்ஹன் said...

வெறும் தொலைபேசி அழைப்பு வந்தாலே
கேட்க அச்சமாக இருக்கிறது.
என்ன செய்யலாம் சார்.
நீங்கள் சொல்லி இருப்பது போல எல்லோரும் செய்யட்டும்.
இல்லை அல்லாத செய்திகளைப்
பகிராமல் இருக்கட்டும்.
நானும் இது போல எழுதாமல் இருக்கப்
பழகிக் கொள்கிறேன்.
அனுமன் தாள் துணை.

திண்டுக்கல் தனபாலன் said...

இவறல் போல தலைமையே இவ்வாறு இருக்கும் போது... ம்...

KILLERGEE Devakottai said...

ஒப்பீடு அருமை கவிஞரே...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல கருத்துள்ள பதிவு. தெளிவுடன் ஸ்ரீ ராமரின் பதட்டத்தை குறைக்க சொல்லின் செல்வன் அனுமன் சொல்லிய சொல் காலங்காலமாய் போற்றக்கூடியது. அந்த அனுமன் நம்முள்லிருந்து பிறருக்கு பதட்டம் தரும் நிகழ்வுகளை செய்யாதிருக்குமாறு காத்தருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம் சொன்னீர்கள். முதலில் வாழ்த்தைச் சொல்லி, பின்னர் வேறு விஷயங்களைச் சொல்வதே நல்லது! அதுவும் தீநுண்மி காலத்தில்!

Post a Comment