Friday, May 28, 2021

முதல் பிரசவம் ( 5/---)

 சிறிது நேரமே பேசி நாங்கள்

முடிவு செய்திருந்த கைப்பிரதியின்

உள்ளடக்கத்தை மாற்றக் கூடிய திறன் கொண்ட

தோழர் வாசுவைப் பற்றி மிகச் சரியாகப்

புரிந்து கொள்ளவேண்டுமெனில் கொஞ்சம்

எங்கள் ஊரையும் அறிந்திருக்கவேண்டும்.


மதுரை நகருக்கு மிக அருகே 3 கி.மீ தூரத்தில்தான்

எங்கள் ஊர் இருந்தது என்றாலும்

இதை எழுதும் காலத்தில் எங்கள் ஊர்

நகரத்தின் சுவடுகள் ஏதும் பதியாத  

அந்தக் காலத்திற்கு முப்பது ஆண்டுகள்

முந்தைய கிராமமாகவே இருந்தது..


நாலைந்து நிலச்சுவான்தார்கள்

பத்துப் பதினைந்து நிலக் குத்தகைக்காரகள்

மற்றபடி ஏறக்குறைய எல்லோருமே 

விவசாயக் கூலிகளே..


அங்கு பிழைப்புக்கான வேலை என்றால்

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த

தொழில்களான மாட்டுவண்டி /கலப்பைப் பட்டறை/

வண்டிக்கு காளை மாடு மற்றும் தெருவுக்கு

பத்து வீடுகளில் பசு மாடு வளர்ப்பு

அது சார்ந்து பால் மோர் வியாபாரம்

புல்லுக்கட்டு வியாபாரம் எனத்தான் 

ஊர் இருந்தது,,


சேனியச் செட்டியார்கள் என்கிற ஒரு

தெருவில் இருந்தவர்கள் எல்லாம் 

அவரவர் வீட்டளவில் தறி வைத்து

சாதா துண்டு உற்பத்தி செய்பவர்களாக

இருந்தார்கள்..அது தொடர்பான நூல் சுற்றுதல்

குஞ்சம் முடிதல் கூடுதல் தொழிலாய் இருந்தது


அதன் காரணமாக ஊரில் செலவழிக்க 

நினைத்தாலும் செலவழிக்கத்தக்க கடைகள் ஏதும்

அதிகம் இருக்காது..


ஹோட்டல் என்றால் எங்கள் ஊருக்கு ஏற்ற

பைவ் ஸ்டார் எனச் சொல்லத்தக்க

ஒரு  உடுப்பி பிராமணாள் ஹோட்டல்/

கொஞ்சம் நடுத்தர மக்களும் சாப்பிட முடிந்த

பத்ம விலாஸ் என மற்றொரு பிராமணாள்

ஹோட்டல் அடுத்து கோபால்நாயுடுக்கடை

என்கிற ஒரு அசைவம் கிடைக்கிற கடை


இந்த ஹோட்டல்களை ஜாதிவாரியாகச்

சொல்லக் காரணமே ஊரே ஜாதியாகத்தான்

பிரிந்து கிடந்தது அல்லது கட்டுண்டு கிடந்தது

எனச் சொல்லலாம்


தெருப்பெயர்கள் எல்லாம் அக்ரஹாரம்/

பிள்ளைமார் தெரு/கோனார்/தெரு/சேர்வார்தெரு/

சௌராஷ்ட்ரா காலனி /பச்சேரிஎன்றே இருக்கும்


பின்னாளில் ஜாதிப் பெயரில் பெயர் இருக்கக்

கூடாது என சட்டம் வந்த பின்பு கூட

ஜாதிப் பெயர் தெரியும் படியாக

கணக்குபிள்ளைத்தெரு/மருதுபாண்டியர் தெரு

செட்டியார்கள் வணங்கும் தெய்வத்தின் பெயர்

இருக்கும்படியாக மார்கண்டேயசாமி கோவில் தெரு

பெரியார் நகர்/அக்ரஹாரம்  எனத்தான்

மாற்றிக் கொண்டார்கள்..


இந்தச் ஜாதிக் கட்டமைப்பை இறுக்கக்

கட்டிவைக்கும்படியாகவே அவர் அவர்களுக்கான

கோவில் திருவிழா/ மஞ்சுவிரட்டு /

முளைபாரித் திருவிழா என இருக்கும்..


பொழுதுபோக்குக்கெனில் ஒரே ஒரு

டெண்ட் கொட்டகை உண்டு

ஊரின் மொத்த சாராம்சம் இவ்வளவுதான்..


தேவைகள் அதிகம் இல்லையென்பதாலோ

அல்லது ஜாதிக்கட்டமைப்பை மீறினால்

பிழைத்தல் என்பது சாத்தியம் இல்லை

என்பதாலோ அரசியல் கட்சிகள் கூட

அதிகம் ஜாதி சார்ந்துதான் இருந்தது


கட்சி என்றால் காங்கிரஸ் மற்றும்

தி.மு.க மட்டுமே இருந்தது


மதுரையில் அந்தக் காலத்தில் சொல்லத்தக்க

அளவில் கம்னியூஸ்ட் கட்சி வளர்ந்திருந்தாலும்

கூட  எங்கள் ஊரில் இந்தக் கட்டமைப்பை மீறி

கம்னியூஸ்ட் கட்சி தனனை விவசாயிகள்

இயக்கமாகக் கூடக் கட்டமைத்துக் கொள்ள

முடியவில்லை


இந்த நிலையில் ஊரில் புதிதாக

விவசாயம் தவிர்த்து வருமானம் கிடைக்கும்படியாக

ஒரு மாற்றம் நேரத் துவங்கியது..


இந்த மாற்றத்தில். ஊரின் முகம்

கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக

மாறத்துவங்கியது


இந்த மாற்றாத்தினை உள்வாங்கி களத்தில்

தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு

செயல்படும் ஒரு போராளியாக 

தோழர் வாசு இருந்ததால் அவரை

அனைவரும் அறிந்திருந்தோம்


அனைவருடனும் தன்னை இணைத்துக் 

கொள்ளும்படியான மனோபாவம் அவரிடம்

இருந்ததாலேயே அவரால் அவரினும்

சிறியவர்களான எங்களுடனும் நெருங்க முடிந்தது


கைப்பிரதியின் உள்ளடக்கதிற்கான மாறுதலை

நாங்களும் ஏற்றுக் கொள்ளுபடியாகச்

செய்ய முடிந்தது..


(தொடரும் )

4 comments:

மனோ சாமிநாதன் said...

முதல் பிரசவத்தின் ஐந்து பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டு வந்து எழுதுகிறேன். மிகவும் சுவாரஸ்யமாக, நிறைய தகவல்களையும் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள்! அருமை! சின்ன வயது நினைவுகள் எல்லோரது மனதிலுமே பொக்கிஷமாக, நினைக்கும்போதெல்லாம் மணம் வீசிக்கொண்டிருக்கும். இங்கேயும் அந்த மணம் வீசுகிறது.

ஸ்ரீராம். said...

விவரங்கள் வெகு சுவாரஸ்யம்.

திண்டுக்கல் தனபாலன் said...

சுருக்கமாக இருந்தாலும், நகரின் விரிவாக்கம் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அந்த கால நிகழ்வுகள் குறித்து விவரமாக எழுதி இருப்பது நன்று. விவரங்கள் சிறப்பு. மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

Post a Comment