Tuesday, December 28, 2021

சிரிப்பின் சுகமறிவோம்..

 சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்

மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

(பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்  இனிய
புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்  )

4 comments:

Jayakumar Chandrasekaran said...

பாடல் நன்று. வெள்ளித்திரைக்கு ஏற்ற பாடல்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிரிப்பு நல்லதொரு சிறந்த மருந்து...

ஸ்ரீராம். said...

சிரிப்பு என்பது அருமருந்து.  உங்களுக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

சிரிப்பு சிறப்பு. சிறப்பான பாடல் - இசையமைத்து பாடலாம்!

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post a Comment