Showing posts with label சிறப்புக் கவிதை - புத்தாண்டு. Show all posts
Showing posts with label சிறப்புக் கவிதை - புத்தாண்டு. Show all posts

Wednesday, April 13, 2016

சித்திரை மகளே வாராய்

நற்குண மாந்தர் இந்த
மாநிலம் எங்கும் ஓங்கி
நற்செயல் பெருகி இந்தப்
பூமியே சொர்க்கம் ஆகும்
அற்புதம் நிகழ்த்த வந்த
அதிசய ஆண்டே வாராய்
துர்முக ஆண்டே வாராய்
தீந்தமிழ் ஆண்டே வாராய்

இத்தரை வாழும்  யாரும்
இனிவரும் காலம் யாவும்
எச்சிறு குறையு மின்றி
இனிதென வாழ வென்றே
புத்தொளிப் பரவும் காலை
பிறந்திடும் எழிலே வாராய்
சித்திரை மகளே வாராய்
செந்தமிழ் அழகே வாராய்

மனமது நிறைவு கொள்ள
வாழ்வதும் நிறைவு கொள்ளும்
மனமதில் இந்த உண்மை
நிலைத்திட வேண்டும் என்றே
ஜனகரின் மைந்தன் தந்த
மகிழ்வுறு நாளே வாராய்
புனர்வசு நாளே வாராய்
பைந்தமிழ் நாளே வாராய்

இட்டமாய்ச் செய்யும் எல்லாம்
இனிமையே நல்கும் என்று
திட்டமாய் சொல்லி மாந்தர்
தெளிந்திட வென்றே  கீதைத்
தந்தவன் தன்னை ஈந்த
திருமிகுத்  திதியே  வாராய்
அட்டமித் திதியே வாராய்
அருந்தமிழ்த் திதியே வாராய்

( துர்முக ஆண்டு, சித்திரை மாதம், புனர்பூஷ
நட்சத்திரத்தில்,அஸ்டமி திதியில் பிறக்கிறது
ஞாபகம் வைத்துக் கொள்ள அவசியப்படுவோர்
நினைவில் வைத்துக் கொள்வதற்காக )

Wednesday, December 30, 2015

தொடர் பயணம்

சமதளமாய்
காலடியில் கிடக்கிறது
எட்டிவிட்ட சிகரம்

ஒரு அடையாளமாய்
சேர்ந்தே இருக்கிறது
அடைந்துவிட்ட இலக்கும்

சிகரத்தை அடைவது
ஓய்ந்துச் சாய இல்லை

கொஞ்சம் ஓய்வெடுத்து
மீண்டும் துவங்கவே என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்

வெகு கவனமாய்
சிகரத்தில்  கிடைத்த
கிரீடங்களையும் மாலைகளையும்
உடலிலிருந்தும் மனத்திலிருந்தும்
இறக்கி வைத்து
என்னை எளிதாக்கிக் கொள்கிறேன்

ஏனெனில்
ககமான பயணத்தை
சீரழிக்கும் முதல் எதிரி
 கூடுதல் சுமைகளே என்பதில்
எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை

தேடலும் பயணிப்பதுமே
வாழ்க்கையேயன்றி

ஒன்றை அடைதலும் இல்லை
ஒன்றில் அடைதலும் இல்லை

இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

மீண்டும் பயணிக்கத் துவங்குகிறேன்

எதிரே சவாலாய்த தெரிகிறது
வானை  முட்டி நிற்கும் 
அந்த நெடிய சிகரம்

(அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்  )

புத்தாண்டு முதல் சுகவாழ்வு காண்போம்

சக்தி இருந்தும்
சமாதானமாய்

வசதி இருந்தும்
எளிமையாய்

அதிகாரமிருந்தும்
பணிவாய்

அறிவிருந்தும்
அடக்கமாய்

நியாயமிருந்தும்
பொறுமையாய்

பாண்டித்தியமிருந்தும்
மிக இயல்பாய்

மொத்தத்தில் ....

சந்தோஷத்தில்
துள்ளாது

சஞ்சலத்தில்
துவளாது

இருப்பவன்
அகராதியில்

என்றும்

வெற்றியன்றி
தோல்வியில்லை

சுகமன்றி
சங்கடங்களில்லை

இயற்கையின்
என்றும் மாறா

நியதி  இதனை

மனதில் தெளிவாய்
மறையாய்க் கொள்வோம்

புத்தாண்டு முதல்

வாழ் நாளெல்லாம்
சுகவாழ்வு கொள்வோம்

Saturday, December 21, 2013

ஒளியேற்றி இருள் நீக்கி மென்மேலும் உயர்வோம்

செய்யக் கூடாதை செய்து
பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம்  உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம்