Monday, March 30, 2026

அவ்வப்போது அவரவர் நினைவில் கொள்ள..

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்.                             (இங்கு நான் என்பவர் இதைப் படிக்கும் நீங்களும் தான்.)

Sunday, March 29, 2026

இட்லி மகாத்மியம்

 


அடிபட மிதிபட அதிகப்பட்ச அவதிப்பட வருகிற பக்குவம் போல              நிச்சயமாக நீதிநூல்களோ போதனைகளோ அல்லது அதிக வயதோ கூட தருவதில்லை.                           அதுபோல அரைத்தோம்          வேகவைத்தோம்  அல்லது நன்றாக எண்ணையில் பொரித்தோம் என்றாலும் கூட.  நெல்லாய்அவித்து அரிசியாகஅரைத்து  மீண்டும் ஊறவைத்து புளிக்க விட்டு                      மீண்டும் ஆவியில் வேகவைத்துத் தயாரித்த வெண்மையான மென்மையான சுவைக்க பதமான   குடலுக்கு இதமான உணவு.   உலகில் இட்லி போல வேறு இருக்க நிச்சயம் சாத்தியமில்லை...                     அறிவுலகுக்கு வள்ளுவத்தைத் தந்தது போல் உணவு உலகுக்கு இட்லி தந்த நம் முன்னோருக்கு இந்த இட்லி தினத்தில் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குவோம்..

Thursday, March 26, 2026

இராம நவமி நல்வாழ்த்துகள்

 


'ஒரு'  (ஏக )பத்தினி விரதனாகி

'இரண்டு' புதல்வர்களுக்குத்

தந்தையாகி

'மூன்று' 

அன்னையர்களின்

மடியில் தவழ்ந்து 

'நான்கு'

சகோதரர்களில் 

ஒருவராகி

'ஐந்து' என

உடன்பிறப்பாகக்

குகனை ஏற்று

'ஆறு' எழுத்தாம்

இராமாயணம் 

எனும் காவியத்தை 

'ஏழு' காண்டங்களாக

இயற்றவைத்து 

'எட்டு' எழுத்தாம்

சுந்தரகாண்டம் 

நாயகனைத் 

தன் பக்தனாக்கி

'ஒன்பது' எனும் 

திதியாம்

நவமியில் அவதரித்து 

'பத்து' தலை

இராவணணை

வதம் செய்த 

இராமபிரானை

ராமநவமி தினமான 

இன்று 

பக்தியுடன் 

போற்றி வணங்கிடுவோம்!

அனைவருக்கும் இனிய ராமநவமி 

நல்வாழ்த்துக்கள்!

உண்மைதான்...

 ஒரு மனிதன் தன் குரங்குகளுடன் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தான். அந்தப் படகில் இருந்த மற்ற பயணிகளில் ஒரு தத்துவஞானியும் இருந்தார். அந்தக் குரங்கு இதற்கு முன் படகில் பயணம் செய்ததில்லை, அதனால் அது சங்கடமாக உணர்ந்தது. அது கத்தவும் மேலும் கீழும் குதிக்கவும் தொடங்கியது, படகில் இருந்த யாரையும் நிம்மதியாக உட்கார விடவில்லை. படகோட்டி எரிச்சலடைந்தார், மேலும் இந்தக் குழப்பத்தால் படகு மூழ்கிவிடுமோ என்று பயணிகள் கவலைப்பட்டனர்.  குரங்கு அமைதியாகவில்லை என்றால், அது படகை மூழ்கடிக்கக் காரணமாகிவிடும்.

அந்த மனிதன் இந்தச் சூழ்நிலையால் கலக்கமடைந்தான், ஆனால் குரங்கை அமைதிப்படுத்த எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தத்துவஞானி எல்லாவற்றையும் கவனித்துவிட்டு உதவ முடிவு செய்தார்.

அவர், “நீங்கள் அனுமதித்தால், இந்தக் குரங்கை ஒரு வீட்டுப் பூனையைப் போல என்னால் அமைதியாக்க முடியும்,” என்றார்.

அந்த மனிதன் உடனடியாக ஒப்புக்கொண்டான். இரண்டு பயணிகளின் உதவியுடன், தத்துவஞானி குரங்கைத் தூக்கி ஆற்றில் வீசினார். தண்ணீரில் மிதக்கப் போராடிய குரங்கு, வெறித்தனமாக நீந்தத் தொடங்கியது.

அது சாகும் தருவாயில் இருந்தது, தன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, தத்துவஞானி குரங்கை மீண்டும் படகிற்குள் இழுத்தார். இப்போது குரங்கு அமைதியாகி ஒரு மூலையில் சென்று அமர்ந்தது.

குரங்கின் மாறிய நடத்தையைக் கண்டு அந்த மனிதனும் அனைத்துப் பயணிகளும் ஆச்சரியப்பட்டனர்.

அந்த மனிதன் தத்துவஞானியிடம், “முன்பு அது அமைதியின்றி அங்குமிங்கும் குதித்துக் கொண்டிருந்தது. இப்போது அது ஒரு வளர்ப்புப் பூனையைப் போல அமர்ந்திருக்கிறது. ஏன்?” என்று கேட்டான்.


தத்துவஞானி பதிலளித்தார், “நான் இந்தக் குரங்கைத் தண்ணீரில் வீசியபோது, ​​அது நீரின் சக்தியையும், தன் வாழ்வின் மதிப்பையும், படகின் பயனையும் புரிந்துகொண்டது.”


இந்தியாவில் எல்லாவற்றையும் தொடர்ந்து விமர்சித்து, கருத்துரைத்து, எதிர்க்கும் நபர்களை ஆறு மாதங்களுக்கு வட கொரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, ஈராக், பாலஸ்தீனம், பாகிஸ்தான், இலங்கை அல்லது சீனாவிற்கு அனுப்ப வேண்டும். இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு, அவர்கள் தானாகவே ஒரு வளர்ப்புப் பூனையைப் போல அமைதியாகி, நாடு முன்னேற வழிவகுப்பார்கள்.


“இந்தியா”வைத் தவறாகப் பயன்படுத்தி அவதூறு பரப்பும் அனைத்து நண்பர்களுக்கும் அர்ப்பணம்... படித்ததில் பிடித்தது 

Saturday, March 21, 2026

வள்ளுவன் சொன்ன ராஜரகசியம்.

 சொட்டு நீரைக் கூட வீணே

விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்
(இன்று உலக தண்ணீர் தினம்)

Friday, March 20, 2026

சிட்டுக் குருவிக்கு வேண்டாம் தட்டுப்பாடு

 


இன்று World Sparrow Day (மார்ச் 20). சிட்டுக்குருவிகள் (Sparrows) இயற்கை சூழலுக்கு மிகவும் முக்கியமான பறவைகள். அவற்றின் முக்கியத்துவம் பற்றி சில விஷயங்கள்: 🐦🌿

1️⃣ பூச்சி கட்டுப்பாடு

சிட்டுக்குருவிகள் விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல பூச்சிகளை உணவாக உண்ணும்.

இதனால் விவசாய நிலங்களில் பூச்சி தாக்குதல் குறையும். 🌾

2️⃣ விதைகள் பரவ உதவும்

சில தாவர விதைகளை சிட்டுக்குருவிகள் சாப்பிட்டு வேறு இடங்களில் விடும்.

இதனால் புதிய தாவரங்கள் வளர உதவுகிறது. 🌱

3️⃣ சுற்றுச்சூழல் ஆரோக்கியம் காட்டும் குறியீடு

ஒரு பகுதியில் சிட்டுக்குருவிகள் அதிகமாக இருந்தால், அந்த இடத்தின் சுற்றுச்சூழல் நல்ல நிலையில் உள்ளது என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. 🌍

4️⃣ மனிதர்களுக்கு நெருக்கமான பறவை

சிட்டுக்குருவிகள் மனிதர்கள் வாழும் இடங்களில் (வீடுகள், கூரைகள், தோட்டங்கள்) வாழ்கின்றன.

அதனால் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமான பறவையாகும். 🏠

5️⃣ இயற்கை சமநிலையை காக்கும்

சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலியில் (food chain) ஒரு முக்கிய பகுதி.

அவை இல்லாமல் போனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படும். ⚖️

✅ சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது:

வீட்டில் சிறிய கூடு (nest box) வைக்கலாம்.

தண்ணீர் மற்றும் தானியம் வைக்கலாம்.

தோட்டத்தில் மரங்கள், செடிகள் வளர்க்கலாம்.

அதிகமான பூச்சிமருந்து பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

🐦 சிட்டுக்குருவி குறைந்து வருவதற்கான காரணங்கள்:

நகரமயமாக்கல்

மரங்கள் குறைதல்

மொபைல் டவர் கதிர்வீச்சு (சில ஆய்வுகள் இதையும் கூறுகின்றன)

பூச்சிமருந்துகள்

👉 சிறிய பறவை என்றாலும் சிட்டுக்குருவி இயற்கைக்கு மிகப் பெரிய உதவி செய்கிறது.(பகிர்ந்து தட்டுப்பாட்டை அகற்றுவோம் )

Thursday, March 19, 2026

தேர்தல்..

 எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்

கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
( என்னுடைய இருபதாவது வயதில் நான் எழுதி அன்றைய முற்போக்கு மாத இதழாக வெளிவந்து கொண்டு இருந்த சிகரம் பத்திரிக்கையில் வெளிவந்த கவிதை.இப்போது எனக்கு வயது 75..எனது முற்போக்கு சிந்தனை மனநிலையில் எவ்வித மாறுதலும் இல்லை.தேர்தல் நடைமுறைகளைப் போலவே )

)