Tuesday, October 29, 2013

திருநாள் ஏதும் உண்டோ ?

திருநாள் ஏதும் உண்டோ  ?- தீபத்
திருநாள் எங்கும் உண்டோ ?
வருடம் ஒருநாள் ஆயினும் -திருநாள்
ஒருநாள் இரவே ஆயினும்                          (திருநாள் )

சிறியவர் பெரியவர் பேதமும்- செல்வம்
உடையவர் வறியவர் பேதமும்
துளியது இன்றி மகிழ்வினில் _அனைவரும்
திளைத்திடும் மகிழ்வைப் பெருக்கிடும்    (திருநாள் )

உறவினை எல்லாம்  கூட்டியே _ இனிக்கும்
விருந்தினில் அன்பைக் காட்டியே
துயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்
மகிழ்வினை ஆறாய்க் கூட்டிடும்               (திருநாள் )

இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
குறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான
நெருப்பினை நம்முள் விதைத்திடும்       (திருநாள் )

Saturday, October 26, 2013

இலக்கும் இடைவெளியும்

சட்டென மின்சாரம் அணைந்து போக
ஏற்றப்பட்ட விளக்கில்
எதிர் சுவற்றில் என் உருவம்
பூதாகாரமாய்...

ஏதோ ஒரு காரணமாய்
நான் பின் நகர
அதே சுவற்றில் என்னுருவம்
என்னிலும் பாதியாய்...

பார்த்துக் கொண்டிருந்த என் பேரன்
"எப்படித் தாத்தா
விளக்கும் நகராம நீயும் மாறாம 
உன் நிழல் மட்டும் எப்படி
உயரமாய் குள்ளமாய் " என்கிறான்

"அது இடைவெளி செய்யும் மாயம் "என்கிறேன்

அவன் புரியாது விழிக்கிறான்
எனக்கும்
வேறெப்படி சொல்வதெனப் புரியவில்லை

Wednesday, October 23, 2013

சராசரித்தனத்தின் சிறப்பு

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும் தொண்டனுக்கும்
இடைப்பட்ட அல்லக்கைகள் போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
கீறிவிட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கும்
வெகுஜனம் தரும் மரியாதைக்குப்
பங்கமும் இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணி ஓரத்துப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டம் கூட்டி
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை

மௌனங் காத்தலே
அறியாமைக்கு உற்றதிரையென
ஒதுங்கியே  நட்புகொள்ளும் வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளை அறிய ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

Tuesday, October 22, 2013

அரசியல் விளையாட்டு

மைதானங்கள் எவையும்
இப்போது மைதானங்களாக இல்லை
போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன

விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆகி
பழக்கப்பட்டும் போய்விட்டது

பார்வையாளர்கள் கூட
பார்வையாளர்களாக இல்லை
இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்

அணிகள் கூட
எதிரிகளாகக் களம் இறங்கி
பரம எதிரிகளாய் வெளியேறுகிறார்கள்

காவலர்களும் மருத்துவர்களும் இன்றி
விளையாட்டுச் சாத்தியமில்லை என்றாகி
அதுவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது

ஆயினும் கூட
விளையாட்டு துவங்கும் முன்பும்
விளையாட்டும் முடிந்த பின்பும்

"விளையாட்டு ஒன்றுதான்
மனித நாகரீகத்தின் உச்சம்
மனிதன் உயர்வுக்கு அச்சாணி "எனப்
பிரச்சாரம் செய்து போகிறார்கள்
விளையாடிச்செல்பவர்கள்

ஊட்டப்பட்ட போதையில்
ஆக்ரோஸ அணிகளாக
ஆட்டம் போட்ட பார்வையாளர்கள்

ஆட்டம் முடிய போதை தெளிய
மீண்டும் சராசரியாய் உருமாறி
கடந்து போகிறார்கள்
தத்தம்ம் பிழைப்புத் தேடி
"மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி

Sunday, October 20, 2013

சிரிப்பும் திரு நாளும்

என்று வருமோ என்று வருமோ-என்று
ஏங்க வைக்கும் ஒரு நாள்-
இன்று நாளை என்று நாளை-நம்மை
எண்ண வைக்கும் ஒருநாள்
கன்று போல வயதை மீறி-நம்மைத்
துள்ள வைக்கும் ஒரு நாள்
எங்கும் உலகில் இதுபோல் இல்லை-நம்
உவகைப் பெருக்கும் நன்னாள்

வருகை தன்னை உறுதி செய்து-மருமகன்
மகிழ்வை விதைக்கும் ஒருநாள்
புதுவகை வெடிவகை பட்டியல் அனுப்பி-பேரன்
மகிழ்வைப் பெருக்கும் ஒருநாள்
இதுவரை அறியா இனிப்பினைச்செய்து-மனைவி
மகிழ்வை உயர்த்தும் ஒருநாள்
இதுபோல் உலகில் எங்கும் இல்லை-நாம்
உணர்ந்து மகிழும் திருநாள்

விடிய எழுந்து குளித்து முடித்து-கோடி
உடுத்தி மகிழும் ஒருநாள்
புதிது புதிதாய் சுவைத்து மகிழ்ந்து-சுகத்தில்
சொக்கிக் கிடக்கும் ஒருநாள்
முடிந்தால் புதிய சினிமாப் பார்த்து-அதில்
மூழ்கித் திளைக்கும் ஒருநாள்
இதுதான் திருநாள் எனவே நினைத்தால்-நாம்தான்
உலகின் முதல்நிலை முட்டாள்

தெய்வம் நமக்குக் கொடுத்த தெல்லாம்-நாமே
தின்றுத் தீர்க்க இல்லை
பிள்ளைப் பார்க்க உண்டுத் திரிபவன்-நிச்சயம்
மனித இனமே இல்லை
இருப்பதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து-வறியோர்
முகத்திலும் சிரிப்பை விதைப்போம்
திருநாள் என்பதை சிரிப்பு என்பதை -உலகில்
பொதுவென் றாக்கி ரசிப்போம்

Thursday, October 17, 2013

குமுதத்தின் ராஜதந்திரம்

குமுதம் இதழ் இந்த வாரம் தீபாவளி
சிறப்பு மலர்களில் ஒரு மலராக
இணையச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது
அதில் ஒரு கட்டுரை வலைத்தளம் குறித்த
கட்டுரையாக வெளிவந்திருக்கிறது,

அந்த கட்டுரையை வலைத்தளத்தித்தில்
அதிகப் பரிட்சயம் உள்ளவர்தான் எழுதியிருக்கிறார்
 என்பதுநம் வலைத்தளதின் பலம் மற்றும்
 பலவீனங்கள் குறித்து மிக எளிமையாகச்
சொல்லிப் போவதுபோல்அடிஆழம் தொட்டு
இருப்பதில் இருந்து நிச்சயமாக
புரிந்து கொள்ளமுடிகிறது.

சிறந்த முதலாளி என்பவர் எப்போதும்
எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளியை
 பயன்படுத்திக்கொள்வது என்பதிலும்தான் ---

உண்மையில் தொழிலாளிக்கு அதிகம்
பயன்படாமல்பயன்படுவதுபோல் நடிப்பது
எப்படி என்பதிலும்தான்---
மிக கவனமாக இருப்பார்

கெட்டிகார அரசியல்வாதி கூட தான் அதிகம்
 தியாகம்செய்வது போல் நடித்தபடி மக்களை
 எப்படித் தனக்காக அதிக பட்ச தியாகம்
செய்ய வைப்பது என்பதில்
மிகக் குறியாக குறியாக இருப்பார்

இணையத் தளத்தின் வளர்ச்சி நிச்சயம்
 பத்திரிக்கைகளுக்குசாதகமானதில்லையென்பது
 குமுதம் போன்ற வெகு ஜனப்
 பத்திரிக்கைக்காரர்களுக்கு புரியாதிருக்க
வாய்ப்பில்லை,ஆயினும் அவர்கள் ஏன் தனியாக
இணையத் தள சிறப்பிதலும் அதில் வலைத்தளம்
குறித்த கட்டுரையும் வெளியிடுகிறார்கள் எனில்
"அதில்தான் இருக்கிறது ஆச்சாரியரின்
 விபீஷண வேலை "

காலத்தின் போக்கோடு அனுசரித்துப் போகாத எதுவும்
கரையோரம் ஒதுக்கப்படும் என்பதுவும்
அதனோடுஇயைந்து போதலுமே நிலைத்தலுக்கான
சூத்திரம் என்பதுவும்அவர்களுக்குத் தெரியும்

இப்போது வருகிற சினிமாக்களில் எல்லாம்
பத்திரிக்கைகளுக்குநன்றி தெரிவித்து வாசகம்
போடுவதில் நமதுவலைத்தளங்களுக்க்கும்
சேர்த்து நன்றி சொல்வதில்
மிக கவனமாக இருக்கின்றன

காரணம் பத்திரிக்கையில் வருகிற விமர்சனத்தை விட
இணையம் மூலம் வருகிற விமர்சனங்கள் விரைவாக
மட்டுமின்றி மிகவும் கூர்மையாகவும் இருப்பதால் அது
தங்கள்  வசூலை பாதித்துவிடக் கூடாது என்பதில்
ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வே காரணம்.

அதைப்போலவே பத்தாம்பசலித்தனமாக இன்னமும்
சினிமாவுக்கெனவும் பயனற்ற வெறும் பொழுது போக்கு
விசயங்களுக்காக அதிகப் பக்கங்கள் ஒதுக்கியும் தனது
வியாபாரத் தந்திரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிற
ஒரு பத்திரிக்கை----

மக்கள் கவனம்  கொள்ளவேண்டிய விஷயங்களை
மிகச் சாதுர்யமாய் மறைத்து தேவையற்ற விஷயங்களில்
கவனம் கொள்ளவைப்பதில் மிகக் கவனமாய் இருக்கிற
ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கை---

மிகச் சரியாக தாமும் தற்கால உலகின் போக்கை
புரிந்து கொண்டிருக்கிறோம் என பம்மாத்துக் காட்டி
தன் வியாபார சாம்ராஜ்ஜியத்தை
நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கிற அற்ப
முயற்சியே இது

பிற பத்திரிக்கைகள் போல நல்ல வலைத் தளங்களையும்
நல்ல முக நூல் வாசகங்களையும் அறிமுகம் செய்து
அதன் மூலம் நல்ல கருத்து மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும் என்கிற எண்ணம் இல்லாது----

அதன் மூலம் இணையத் தளம் மற்றும் வலைத்தளம்
ஆகியவற்றின் வீச்சை மக்கள் அறியவிடாது----

வலைத்தளத்தையும் இணையத்தளத்தையும்
மேலோட்டமாக சொல்லிச் செல்வதன் மூலமே--

தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
கெட்டிக்காரத்தனமாகச் செய்கிற அற்பத்தனத்தை
 நாம் தெளிவாய்ப் புரிந்து கொள்வோம்

அவ்வப்போது இதுபோன்ற அற்பப் பத்திரிக்கைகளுக்கு
நம் வலைத்தளம் மூலம் ஆப்படிப்பதன் மூலம்
அவைகளை மைய நீரோட்டத்திலிருந்து
ஒதுக்கிப் போடுதலே இலக்கியத்திற்கும்
 மக்களுக்கும் நாம் செய்யும்
மகத்தான தொண்டு எனப்புரிந்து
தொடர்ந்து செயல்படுவோம்

Tuesday, October 15, 2013

குட்டி யானைக்கு இரும்புச் சங்கிலி

நம்மை மீறிடும்
சக்திப் பெற்ற யானையைக்
குட்டியாய் இருக்கையில்
கனத்தச் சங்கிலியால்
பிணைத்துப் பழக்குதல்
பின்னாளில் அதனை
மிகச் சரியாய்ப் பயன்படுத்த உதவுதல்போல்

வானம் மறைக்கும்
ஆலமரமாயினும் கூட
செடியாய் இருக்கையில்
விலங்குகளுக்கு இரையாகாது
வேலியிட்டுப் பாதுகாத்தல்
பின்னாளில் அது
விலங்குகளுக்கே கூரையாக பயனாவதுபோல்

அறிவுதான் அனைத்துமாயினும்
அதுவே கூர் ஆயுதமாயினும்
அதுதன் திறமதை முழுதும் அறிதலுக்கு
மடத்தனமான நம்பிக்கைகளே உதவுமாயின்
குஞ்சு வளர்வதற்குத் தேவையான
முட்டை மூடிய ஓடு போல
ஆத்திகமும் தேவையென்பதுவும் சரிதானோ ?

பகுத்தறிவே அனைத்துமாயினும்
அதுவே மனிதனுக்கான அடையாளமாயினும்
பதப்படுத்திய நிலத்தில்தான்
பயிர் வளர்தல் சாத்தியம் என்பதுபோல்
பண்பட்ட மனம் பொருத்தே
அறிவு வளர்ச்சியும் சாத்தியம் என்பதால்
வீட்டுக்கான சுவர் போல
ஆன்மீகம் அவசியமென்பதுவும் சரிதானோ ?