Showing posts with label கவிதை -ஒரு மாறுதலுக்கு. Show all posts
Showing posts with label கவிதை -ஒரு மாறுதலுக்கு. Show all posts

Saturday, October 5, 2019

நெத்தியடி என்பது யாதெனில்...

இன்னும் கொஞ்சம்
நாகரீகமாய்ச் சொல்லி இருக்கலாம்

இதை இவ்வளவு அழுத்தமாய்ச்
சொல்லி இருக்கவேண்டியதில்லை

இதைச் சொல்லும் முன்
இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்

எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க
இது ஏன் இப்போது ?

இந்த அசட்டுத் தைரியம்
நிச்சயம் ஆபத்தானதுதான்

இப்படியெல்லாம்
உன் எழுத்துக்கு விமர்சனம் வருகிறது எனில்...

சரியான நேரத்தில்
மிகச் சரியாக
மிகச் சரியானதைத்தான்
சொல்லி இருக்கிறாய் எனச்
சொல்லத்தான் வேண்டுமா என்ன ?

Friday, July 15, 2016

உணர்தலும் அறிதலும்....

" உணர்ந்து
இரசித்தவர்களால்
படைக்கப் படும்
படைப்பிற்கும்

அறிந்து
இரசித்தவர்களால்
படைக்கப்படும்
படைப்பிற்கும்

அதிக வித்தியாசம் தெரிகிறதே
அது ஏன் ? எதனால் ? "

என்றான் நண்பன்

வீட்டின் வெளியில்
பச்சைப் புல் விரிப்பில்
மாலை வெய்யிலின்
இதமான சூட்டில்
குளிர்ந்துக்  கிடந்தோம் அப்போது

மெல்லத் தலை நிமிர்ந்து
"அதை நீ
அறியச் சொல்லவா ?
அல்லது
உணரச் சொல்லவா '" என்றேன்

சற்று யோசித்தவன்
"உணரவே சொல் ? என்றான்

அவனை முன்னறையுள்
கண்ணாடி ஜன்னலருகில் நிறுத்தி
மாலைச் சூரியனைக் காட்டினேன்

சூரியன் அங்குதான் இருந்தது
ஒளியும் அதே நிலையில்தான் வந்தது
ஆயினும் சூடு மட்டும் இல்லை

"நேரடியாய் ஒளியை அனுபவித்ததற்கும்
ஒன்றின் வழி அனுபவிப்பதற்கும்
என்ன வித்தியாசம் "என்றேன்

அவன் பதில்
"சூடாக "இருக்கும் என நினைத்தேன்

 அவனும் படைப்பாளி என்பதால்
"ஜீவன் "என்றான் சிரித்தபடி
என் விளக்கத்தை இரசித்தபடி

Wednesday, June 24, 2015

சர்வாதிகாரி- மிகக் குறைந்த அதிகாரத்தில்

பகலும் இரவும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பகலில் இரவில்
எதைச் செய்வது என்பது மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

பருவமும் காலமும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பருவத்திற்கும் காலத்திற்கும்
தகுந்தார்ப்போல நம்மை
தகவமைத்துக் கொள்ளும்
அதிகாரம் மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஆயுளும் முடிவும்
நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
ஆயுள் முடிவதற்குள்
எதைச் செய்து முடிப்பது என்பதை
முடிவு செய்யும்
அதிகாரம் மட்டுமே
நம் வசம் உள்ளது

வார்த்தைகளும் அதற்கான
அர்த்தங்களும் நம் கட்டுப்பாடில் இல்லை
அதனை முழுமையாகப் புரிந்து
மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....

Monday, December 22, 2014

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

Monday, September 8, 2014

சொர்க்கமது ஆனாலும் கூட----

பிடிச் சோறு ஆனாலும் கூட -அது
மிகப்பழசே ஆனாலும் கூட -நீ
பிழிந்துத்தர உண்ணுகிற சுகமே -அது
தேவலோக அமுதுக்குச் சமமே

எட்டுவகைக்  காய்கறிகள் கூட -உடன்
எறாநண்டும்  சேர்த்துவைத்தும் கூட-சோத்தை
தொட்டெடுக்க மறுக்குதடி மனமே-இந்தக்
கூத்துஇங்கு தொடருதடி தினமே

ஒருமொழியே ஆனாலும் கூட-அது
வசைமொழியே ஆனாலும் கூட-அது
திருமொழியாய்த் தெரியுதடி எனக்கு-உன்னைப்
பிரிந்துஇங்கு தவிக்கின்ற எனக்கு

நாகரீக உடையணிந்த மாந்தர்-தினம்
நுனிநாக்கில் கதைத்தாலும் கூட-அது
சோகமேற்றிப் போகுதடி எனக்கு -உன்னை
எண்ணிதினம் துடிக்கிற எனக்கு

குச்சிவீடு என்றாலும் கூட-வசதி
கூடக்குறச்சு என்றாலும் கூட-கண்ணே
நிச்சயசமாய் சொர்க்கமது தானே-அதுவே
கடல்தாண்டப் புரியுதடித் தேனே

கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
களிக்கின்ற கிறுக்கர்கள் போல-இங்கு
உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்

சொர்க்கமது  ஆனாலும் கூட - அது
நம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்
சொல்லியது சத்தியமாய் நிஜமே-இதனை
அங்கிருப்போர் அறிந்துகொண்டால் நலமே


(முக நூலில்  நண்பர்  நாஞ்சில்  மனோவின்
ஒரு பதிவைப் பார்க்கப்  பிறந்தக் கவிதை
அயல் நாட்டில்  வாழும் நண்பர்களுக்கு
இக்கவிதை என் எளிய  சமர்ப்பணம் ) 

Saturday, August 23, 2014

வேராகப் பதிவுலகு இருக்க..

சந்தமதும் சிந்தனையும்
சந்தனமும் குங்குமமாய்
ஒன்றையொன்று சார்ந்துநிற்கும் போது-கவிநூறு
பொங்கிவரத் தடையுண்டோ கூறு

தாளமதும் இராகமதும்
தண்ணீரும் குளுமையுமாய்
மாயக்கட்டுக் கொண்டிருக்கும் போது-கவிஆறு
மடையடங்கிக் கிடந்திடுமோ கூறு

இளமனதும் அனுபவமும்
இலைபோலக் கிளைபோல
பலமாகப் பிணைந்திருக்கும் போது-கவித்தேர்
நிலையடங்கிக் கிடந்திடுமோ கூறு

சீராட்டவும் பாராட்டவும்
தாயாக உறவாக
வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
வழங்குவதில் குறைவருமோ கூறு

Thursday, August 21, 2014

வெற்றி என்பது உணர்வது...

குழந்தைக்கு
செமிக்காது போய்விடுமோ எனக் கருதி
மிகத் தெளிவாய் உணர்ந்தே
பாலில் கூடுதலாய் நீரதைச் சேர்க்கிறேன்
கஞ்சப் பிசினாறி எனத்
தூற்றிப்போகிறது உலகு
கண்டுகொள்ளாது தொடர்கிறேன்

வெட்டுப்படுபவனின் பக்கமும்
நியாயம் இருக்கக் கூடுமெனக் கருதி
வெட்டருவாளை
அதிகக் கூர்ப்படுத்தாதே விடுகிறேன்
தொழிலில் தேர்ச்சியில்லை என
விட்டுவிலகுகிறது ஒரு பெருங்கூட்டம்
கலங்காது தொடர்கிறேன்

நியாயத்தின் பக்கமே
இருந்துவிட உறுதியுடனிருக்கையில்
நியாயங்கள் அணிமாற
நானும் மாறித்தொலைக்கிறேன்
பச்சோந்தியென பரிகசித்துப் போகிறது
பண்டிதர் பெருங்கூட்டம்
குழம்பாது தொடர்கிறேன்

எண்ணிக்கை
தரத்தை முடிவுசெய்வதில்லை என
காகமும் மயிலும் எனக்கு
ஆறுதல் சொல்லிப்போக
தொடர்ந்து நான் பயணிக்கிறேன்
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே...

Monday, November 11, 2013

அந்தநாள் எனக்குப் பொன் நாள்

கவியது படைக்க எண்ணி      
மனமது முயலும் போதே
சதியது செய்தல் போல
சங்கடம் நூறு நேரும்
எதிரியாய் எதுகை மாறி
எடக்கது செய்து போக
புதிரென மோனை மாறிப்
புலம்பிட வைத்துப் போகும்

இனியொரு கவிதை யாரும்
இயற்றுதல் கடினம் என்னும்
கனிநிகர் கவிதை யாக்க
கடிதுநான் முயலும் போதே
அணியது முரண்டு செய்து
மனமதை நோகச் செய்ய
பனியது விலகல் போல
படிமமும் ஒதுங்கி ஓடும்

யுகக்கவி இவனே என்று
உலகிது போற்றும் வண்ணம்
நவகவி ஒன்று நானும்
நவில்ந்திட முயலும் போதே
உவமையும் வெறுப்பை ஊட்டி
ஒழிந்துதன் இருப்பைக் காட்ட
அவதியில் மனமும் மாறிக்
கவிதையை வெறுத்துச் சாடும்

ஆயிரம் முறையே வீழ்ந்தும்
எழுந்திட முயலும் சேயாய்
காவியம் ஒன்றை வாழ்வில்
செய்திட முயல்வேன் ஓர்நாள்
மேவிடும் முயற்சிக் கண்டு
மனதினில் மகிழ்வுக் கொண்டு
காளியே அருள்வாள் ஓர்நாள்
அந்தநாள் எனக்குப்  பொன் நாள்

Saturday, November 2, 2013

போதையும் திருவிழாவும்

முற்றியப்  போதை தெளிந்த பின்
குடிகாரன் பார்வையில் படும்   சூழலாய்
விரிந்து கிடக்கிறது
திரு விழா முடிந்த மறுநாள்

நட்புக்காகத் எனத் துவங்கி
சகமரியாதைக்கு எனத் தொடர்ந்து
போதையின்  பிடியில் நகரும் இரவாய்

சம்பிரதாயம் எனத் துவங்கி
தனக்கானக்   கௌரவம் எனத் தொடர்ந்து
விளம்பரங்களுக்கிடையில்  சிக்கிய  போதையில்
தத்தளித்துக்   கிடந்த நடுத்தரக் குடும்பம்

கட்டுப்பாட்டை  முழுதும் இழக்க 
கடந்து   சென்ற   இரு நாட்கள்
லேசாய்  நினைவுக்கு வர
தலை உலுக்கி
 ஒரு சராசரி நாளை எதிர்கொள்ள
வழக்கம்போல்  தயாராகிறது மீண்டும்

அளவை  மீறியச் செலவு
அலங்கோலமாய்  கிடக்கும் இருக்கைகள்
காலி பாட்டில்கள்அலங்கோலம்போல்

எல்லை மீறியச்  செலவுகளும்
வரும் மாதத் தேவைகளும்
லேசாக  மனத்தைக்  கலக்கிப்போக

அடுத்தமுறையேனும்
தேவையற்றதை தவிர்க்கணும்  
செலவினை  வரவிற்குள் அடக்கணும் எனும்
பிரசவ   சங்கல்பமெடுக்கிறது அது
வழக்கம்போல் எடுக்கும்
பல வருடாந்திரத் தீர்மானங்கள் போலவே

 இனியேனும்
குடிப்பதை   அடியோடு நிறுத்தனும்
குடித்தாலும்  அளவோடு குடிக்கணும் என
நாற்பட்ட குடிகாரன்   எடுக்கும்
அன்றாடத்  தீர்மானம் போலவே
என்றும்   நிறைவேறாது போகும்
அந்த அதிசயத் தீர்மானங்கள் போலவே

Wednesday, October 23, 2013

சராசரித்தனத்தின் சிறப்பு

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும் தொண்டனுக்கும்
இடைப்பட்ட அல்லக்கைகள் போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
கொஞ்சம் நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
கீறிவிட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கும்
வெகுஜனம் தரும் மரியாதைக்குப்
பங்கமும் இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணி ஓரத்துப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டம் கூட்டி
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை

மௌனங் காத்தலே
அறியாமைக்கு உற்றதிரையென
ஒதுங்கியே  நட்புகொள்ளும் வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
கூடுதலான ஆங்கில வார்த்தை
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளை அறிய ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
கூடுதல்
சந்தோஷமளிப்பதாவும்தான் இருக்கிறது

Tuesday, October 15, 2013

குட்டி யானைக்கு இரும்புச் சங்கிலி

நம்மை மீறிடும்
சக்திப் பெற்ற யானையைக்
குட்டியாய் இருக்கையில்
கனத்தச் சங்கிலியால்
பிணைத்துப் பழக்குதல்
பின்னாளில் அதனை
மிகச் சரியாய்ப் பயன்படுத்த உதவுதல்போல்

வானம் மறைக்கும்
ஆலமரமாயினும் கூட
செடியாய் இருக்கையில்
விலங்குகளுக்கு இரையாகாது
வேலியிட்டுப் பாதுகாத்தல்
பின்னாளில் அது
விலங்குகளுக்கே கூரையாக பயனாவதுபோல்

அறிவுதான் அனைத்துமாயினும்
அதுவே கூர் ஆயுதமாயினும்
அதுதன் திறமதை முழுதும் அறிதலுக்கு
மடத்தனமான நம்பிக்கைகளே உதவுமாயின்
குஞ்சு வளர்வதற்குத் தேவையான
முட்டை மூடிய ஓடு போல
ஆத்திகமும் தேவையென்பதுவும் சரிதானோ ?

பகுத்தறிவே அனைத்துமாயினும்
அதுவே மனிதனுக்கான அடையாளமாயினும்
பதப்படுத்திய நிலத்தில்தான்
பயிர் வளர்தல் சாத்தியம் என்பதுபோல்
பண்பட்ட மனம் பொருத்தே
அறிவு வளர்ச்சியும் சாத்தியம் என்பதால்
வீட்டுக்கான சுவர் போல
ஆன்மீகம் அவசியமென்பதுவும் சரிதானோ ?

Sunday, September 15, 2013

ஊருக் குள்ளே நல்ல "பாரு"

பாருக் குள்ளே நல்ல நாடு
நம்ம நாடு என்று
வீறு கொண்டு இருந்தோம் அன்று-பகை
வென்று மகிழ்ந்தோம் அன்று

ஊருக் குள்ளே நல்ல "பாரு"
எந்த "பாரு " என்று
தேடி யலைந்துத் திரிகிறோம் இன்று-மதியைக்
தோண்டிப் புதைக்கிறோம் இன்று

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலென
பெருமிதம் கொண்டோம் அன்று
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடென-நெஞ்சம்
பூரித்து நின்றோம் அன்று

விண்ணகம் முட்டும் விலையில் கல்வியை
உயரே கொண்டு வைத்து
வன்முறை வளர்ந்திட நாடது கேடுற-நாமே
வழிகள் வகுக்கிறோம் இன்று

இன்னறு கங்கை எங்கள் ஆறென
உரிமை கொண்டோம் அன்று
மன்னும் இமயம் எல்லைக் கோடென-உள்ளம்
மகிழ்ந்து திரிந்தோம் அன்று

அண்டை மாநில உறவு கூட
ஜென்மப் பகைபோல் மாற
வன்மம் வளர்த்து வன்முறை வளர்த்து-கூண்டில்
ஒடுங்கித் தவிக்கிறோம் இன்று

உலகை மாற்றி ஊரை மாற்றி
நம்மை மாற்ற எண்ணும்
தலையச் சுற்றி மூக்கைத் தொடுகிற-வீண்
வேலை இனியும் வேண்டாம்

அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்