Sunday, January 18, 2015

காணும் யாவும் கருவாகிப் போகவும்

தன்னுள் அடைக்கலமான
ஜீவத் துளியினை
உயிரெனக் காக்கும்
தாயென மாறிப் போனால்....

கூட்டில் உயிரைவைத்து
குஞ்சுகளுக்கென
பலகாதம் கடக்கும்
பறவையென மாறிப்போனால்...

இன்னும் இன்னும் என
மிக மிக நெருங்கி
ஓருடலாகத் துடிக்கும்
காதலர்கள் ஆகிப் போனால்..

விட்டு விலகி
விடுதலையாகி
தாமரை இலைத் துளிநீர்
தன்மையடைந்து போனால்..

வேஷம் முற்றும் கலைத்து
ஜனத்திரளில்
இயல்பாய் கலக்கும்
மன்னனாகிப் போனால்..

தானே யாவும்
தானே பிரம்மன் என்னும்
தன்னம்பிக்கை மிக்க
தனியனாகிப் போனால்...

மொத்தத்தில்
தன்னிலை விடுத்து
கூடுவிட்டு கூடுபாயும்
வித்தையறிந்து போனால்..

காணும் யாவும்
கருவாகிப் போகவும்
எழுதும் எல்லாம்
கவியாகிப் போகவும்
நிச்சயம் சாத்தியம் தானே ?

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக...!

ரசித்தேன் ஐயா...

துரை செல்வராஜூ said...

//காணும் யாவும்
கருவாகிப் போகவும்
எழுதும் எல்லாம்
கவியாகிப் போகவும்
நிச்சயம் சாத்தியம் தானே//

அதில் சந்தேகமே இல்லை!..

இளமதி said...

எதுவெல்லாம் நித்தியமாகிறதோ அங்கே
எல்லாமும் சாத்தியமாகும்!

அருமையான சிந்தனை ஐயா!
மிகவே ரசிக்கின்றேன்!
வாழ்த்துக்கள்!

Unknown said...

சாத்தியம் என்பது சத்தியமான வார்த்தை :)
த ம 4

KILLERGEE Devakottai said...

அருமையான வார்த்தைகள் கவிஞரே....
எனது பதிவு என் நூல் அகம் 3

”தளிர் சுரேஷ்” said...

படைப்பாளன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

Kasthuri Rengan said...

அருமை...
சாத்தியமே அய்யா
தம +

தி.தமிழ் இளங்கோ said...

ஆமாம் அய்யா, நீங்கள் சொல்வது போல, கவிஞர்கள் தனி உலக பிரம்மாக்கள்.
த.ம.6

yathavan64@gmail.com said...

சாத்தியமாவதை நிச்சயமாய் நாம்
வாத்தியம் கொண்டு வரவேற்போம்!இது சத்தியம்.
நன்றியுடன்,
புதுவை வேலு

மகிழ்நிறை said...

கவிதை சமைக்க நல்ல ரெசிபி தான்:) அருமை அய்யா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

கருத்து மிக்க வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

மொத்தத்தில்
தன்னிலை விடுத்து
கூடுவிட்டு கூடுபாயும்
வித்தையறிந்து போனால்..

காணும் யாவும்
கருவாகிப் போகவும்
எழுதும் எல்லாம்
கவியாகிப் போகவும்
நிச்சயம் சாத்தியம் தானே ?//

சாத்தியமே! நிச்சயமாய்! இப்படியானால் சாத்தியமில்லாமல் எப்படிப் போகும்...மிகவும் ரசித்த வரிகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

போனால் .... போனால் .... போனால் .... போனால் ....

காணும் யாவும் கருவாகிப் போகவும், எழுதும் எல்லாம் கவியாகிப் போகவும் நிச்சயம் சாத்தியம் தான் ......

ஆனால் .... ஆனால் .... ஆனால் .... ஆனால் .... :)

Post a Comment