Wednesday, December 23, 2015

"காலத்தை வென்றவன் காவியமானவன் "

ஒரறிவு  உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி "கர்ஜிக்கும்
காலன் தோற்றது.....

மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை......

அவர்தானே
வசூல் " சக்கரவர்த்தித் திருமகனாய் " இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை....

அவர்தானே
"மன்னாதி மன்னனாய்த்" திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமென

"எங்கள் தங்கமென"   அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?

எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
"நல்லவன் வாழ்வான் "
"தர்மம் தலைகாக்கும் "எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை

இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ்
"இன்றுபோல்  என்றும் வாழ்க" என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோம்

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்று போல் என்றும் வாழ்க
என வாழ்த்துவோம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்று முதல் இன்று வரை ’ஒளி விளக்கு’ ஆகவும் ’எங்கள் தங்கம்’ ஆகவும் மக்கள் மனதில் ’குடியிருந்த கோயில்’ ஆகவும் திகழ்பவர் ’மக்கள் திலகம்’ ஒருவரே என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

’ஆயிரத்தில் ஒருவன்’ ஆன அவர் என்றும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ :)

தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடப்பதே சுத்தமாகத் தெரியாமல் எங்கோ ஓர் அயல் நாட்டின் மருத்துவ மனையில் படுத்துக்கொண்டே, இங்கு மாபெரும் வெற்றிபெற்று கடைசிவரை நிரந்தர முதல்வர் ஆகவே திகழ்ந்தவர் ! :)

‘இதயக்கனி’யைப்பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். :)

வாழ்க அவரின் புகழ் !

Unknown said...

உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!

Nagendra Bharathi said...

வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

அருமையான அஞ்சலி

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் வாழ்த்துகளுடன் எங்களதும்!!!

Post a Comment