Sunday, May 1, 2016

வாழ்த்துரை...



தாய்மையின் வாஞ்சையுடன்
சமூகத்தின் பால் கொண்ட அதீத அக்கறையுடன்
ஒவ்வொரு படைப்பையும் கொடுக்கும்
திருமதி. கௌரி சிவபாலன் அவர்களின்
எழுத்தின்  தீவிர இரசிகன் நான்.

இதுவரை நேரடியாகவோ குரல் வழியோ கூட
தொடர்பு கொண்டதில்லை என்றாலும் கூட
ஒரு நாள் மின் செய்தி வழி , அவர்கள்
தங்கள் படைப்புகளை நூல்வடிவாகக்
கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகவும்
அதற்கு ஒரு நான்கு வரி வரும்படியாக
ஒரு வாழ்த்துப்பா  வழங்க முடியுமா
எனக் கேட்டிருந்தார்கள்

மனதிற்குப் பிடித்து நான் தொடர்கிற அனைத்துப்
பதிவுகளையும் முழுவதுமாகப்  படித்து
அதில் உள்ள சிறப்புகளை மிகச் சரியாகக்
குறிப்பிட்டுப்  பின்னூட்டமிடுவதாலும்

சில சமயங்களில், இது இப்படி இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என
உரிமை எடுத்துப் பின்னூட்டமிடுவதாலும்,

பதிவர்கள் சிலர் தங்கள் நூல் வெளியீட்டின் போது
என்னிடம் உரிமையுடன் வாழ்த்துரையோ,
முன்னுரையோ கோருவது உண்டு

அந்த வகையில் இது என்னுடைய ஐந்தாவது
வாழ்த்துரை என நினைக்கிறேன்

ஜெர்மெனியில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு
திருமதி. கௌரி சிவபாலன்  அவர்களின் 
"முக்கோண முக்களிப்பு "என்னும் நூல்
 ஸ்ரீலங்காவில் வெளியிடப்படுவது
மிக்க மகிழ்வளிக்கிறது

திருமதி.கௌரி சிவபாலன் அவர்கள்
பதிவுலகிலும், எழுத்துலகிலும் தொடர்ந்து
தன் சிறப்பான பதிவுகளைக் கொடுத்து
சிகரத்திலேயே தொடர்ந்து நிலைக்க
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

என்னுடைய வாழ்த்துப் பா

"தாய்மை நிரம்பி வழியும்
  தூய விரிந்த மனமும்
  ஆய்ந்து அறிந்துத் தெளிந்த
  அன்னைத் தமிழின் திறனும்

  வரமாய்ப் பெற்று "வலையில் "
   மலையாய் நிலைத்த கௌரி
   அறம்போல் என்றும்   உந்தன்
   எழுத்தும்  நிலைக்கும். வாழி  !  "
   

வாழ்த்துக்களுடன்...


No comments:

Post a Comment