Thursday, May 24, 2018

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிறப்  போக்கில்
எதிர்ப்படும் நண்பனை
விசாரித்துப்போகும்
 "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாகத்  தவிர்க்க முடியாதுக்
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும்
 "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடிப்  பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும்
 "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்தக்
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள்
அன்றாடம் அலைந்து திரிந்துத்   ...
தன்  சுயம் தொலைப்பவன் ...

முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர்விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்

குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
மெய் நிகர்க்  காட்சிகளைக் கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும் 

8 comments:

ஸ்ரீராம். said...

இயற்கையை இழந்து செயற்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

KILLERGEE Devakottai said...

உவமையை இரசித்தேன் கவிஞரே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஓரே வீட்டுக்குள் வெவ்வேறு அறைகளில் உள்ளவர்கள்கூட, ஒருவருடன் ஒருவர் பேச நேரமில்லாமலோ, பேச விருப்பம் இல்லாமலோ, பிறகு சொல்ல மறந்து போய்விடுவோம் என்ற பயத்திலோ, முக்கியச் செய்திகளைக்கூட வாட்ஸ்-ஆப்பில் பேசிக்கொள்ள / பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.

எல்லோர் கைகளிலும், எப்போதும் உரையாட + உறவாட ஓர் உபகரணம்.

நேரடி பேச்சுக்கோ ஏச்சுக்கோ இடமில்லை.

பெளர்ணமி நிலவு, பாடும் குயில்கள், ஆடும் மயில்கள், பறவைகள், அசையும் மரங்கள் செடிகள் கொடிகள், இடி, புயல், மழை, மின்னல், வானம், வானவில், மலைகள், நீர் வீழ்ச்சிகள், குட் மார்னிங் முதல் குட் நைட் வரை என அனைத்துமே இன்று நம் உள்ளங்கையில்.


பின்னோக்கிய நல்ல முன்னேற்றம் !

Avargal Unmaigal said...

////முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர்விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்

குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
மெய் நிகர் காட்சிகளைக் கண்டு தானே
" மெய்மறக்க " முடியும்///


செம செம.......

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல வடிவமைப்பான வார்த்தைகள். அருமை.

//முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர்விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்

குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
மெய் நிகர்க் காட்சிகளைக் கண்டு தானே" மெய்மறக்க " முடியும் //

உண்மை.. அனைத்தையும் ரசிக்க இயலாமல் தொலைத்துதான் விட்டோம்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

V.GOPALAKRISHNAN said...

100% true experience of missing something all the time with a blank feeling and taking walk on long corridors entering lift come out and walk long path to touch a road having used to step on our street instantly on hearing a hawker selling tender coconut



என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்தக்
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள்
அன்றாடம் அலைந்து திரிந்துத் ...
தன் சுயம் தொலைப்பவன் ...

Shankar G said...

மிகவும் சரி. உண்மையை அழுத்தமாகப் பதிவு செய்தமைக்கு நன்றி.

Post a Comment