Wednesday, December 29, 2021

சிகரமடைந்து மகிழ்வோம்..

 மனவெளிச் சாலைகளில்

கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பதும் எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகளை நொறுக்கி
சிகரம் தொட்டு  மகிழ்வோம்

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிகரம் தொட்டு மகிழ்வோம். சிறப்பான வரிகள். ரசித்தேன்.

ஸ்ரீராம். said...

உவமைகளும் சிறப்பு. உண்மைகளும் சிறப்பு.

Jayakumar Chandrasekaran said...

சிதறடிக்கும் நேர்மறை எண்ணங்கள் பற்றியே இக்கவிதை உள்ளது. அதே போன்று நோக்கினை நோக்கி தடம் பிறழாது கொண்டு செல்லும் எண்ணங்கள் உள்ளன அல்லவா? அந்த positive thoughts பற்றியும் எழுதலாமே. 

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

Post a Comment