Wednesday, December 22, 2021

இனிய பயணமே வாழ்க்கை..

 சங்கடங்களைச் சந்திக்க

 சங்கடப்படுவோன்....

சுகச் சூழல் விடச்
சஞ்சலப்படுவோன்....

சராசரித்தனம் தாண்டச்
 சாத்தியமே இல்லை

நினைவு அலையின்   மடியிலேயே
முழுமனம் பதித்தவன்...

அடி ஆழம் செல்ல
அச்சப்படுபவன்....

சாதனை முத்தெடுக்கச்
சத்தியமாய் வாய்ப்பே இல்லை

சூழல் மறந்த
நேர்ச்சிந்தனையும்

இழப்புகளைத் தாங்கும்
 மனவலிமையும்

கொண்டவனே
 சிகரத்திற்குப் பாத்தியப்பட்டவன் 

ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகவே  கொள்வதும்

ஒவ்வொரு செயலையும்
புதிதெனச்  செய்தலுமே

தொடர்ந்து வெல்வதற்கான
கம்ப  சூத்திரம்

இழந்தவைகளையும்
கடந்தவைகளையும்
கனவெனவே  கொள்வோம் வா

நடப்பதையும்
நடக்க இருப்பதையும்
நினைவினில் கொள்வோம் வா

வெற்றியும் சாதனையும்
நாம் அடையும் இலக்கல்ல
கடக்க  ஒரு குறியீடு  அவ்வளவே

தொடர்ந்து  குறியீடுகள் கடப்பதில்
கவனம் கொள்வோம்  வா வா

 இனிய பயணமே வாழ்க்கை
இரசித்துப்  பயணிப்போம் வா வா


2 comments:

Unknown said...

அருமையோ அருமை
எழுச்சியூட்டும் வார்த்தைகள்
உங்கள் கவி தொடரவாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Post a Comment