Monday, May 31, 2021

முதல் பிரசவம் ( 8 /--)

 தோழர் வாசு சுருக்கமாகச் சொன்னாலும்

அழுத்தமாகச் சொன்னது எங்கள் சிந்தனையில்

ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்தது


பின் நாங்கள் மீண்டும் கூடி நம்மை

எழுத்தாளர்களாகக் காட்டிக் கொள்ள

எழுதுவதை விட நம் எழுத்து 

பயன் தரத்தக்கதாக இருக்க எழுதுதலே

சிறப்பு என முடிவுக்கு வந்தோம்.


முன் அட்டைபடம் சிறப்பாக இருந்தால்தான்

புத்தகத்தை கையில் எடுக்கும் ஆர்வம் வரும்

எனக் கருதியதால் முதல் கைப்பிரதிக்கான

அட்டைப்படத்தை ஓவிய ஆசிரியரையே

வரையச் செய்தோம்..அவர் நெற்கதிர்க்கட்டைச்

சும்ந்துவரும் பெண்ணின் படத்தை

அருமையாக வரைந்து கொடுத்தார்


இலக்கியம் ஓர் அறிமுகம் என்ற 

கட்டுரையை சேதுப்பாண்டியம் எழுத

ஒரு அற்புதமான சிறுகதையை காண்டீபன் எழுத

நான் பதினாறு வரிகள் வரும்படியாக

எனது முதல் கவிதையை எழுதினேன்


தோழர் வாசு ஊரின் தேவைகள் குறித்து

ஒரு விரிவான கட்டுரை எழுதிக் கொடுத்திருந்தார்


அதில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை கேட்க

டவுன் பஞ்சாயத்துக்கு வரும் பொது மக்கள்

நின்று கொண்டே கேடக வேண்டிய அவலம்

போக்க உட்கார்ந்து கேட்க சிமெண்ட் இருக்கைகள்

போட்டுத் தரவேண்டும்/ எடுப்புக் கக்கூஸை மாற்றி

கோப்பை பதித்துத் தரவேண்டும் என்பது போன்ற

ஊருக்கான அடிப்படை விஷயங்கள் குறித்து எழுதினார்


(பின்னாளில் இது பொது கோரிக்கைகளாக

அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டு 

நிறைவேற்றப்பட்டது எங்களுக்கு அதிக

மகிழ்வளித்தது)


அனைவரும் எழுதிக் கொடுத்ததை ஒன்று

சேர்த்து கையெழுத்து நன்றாக இருக்கக் கூடிய

இரண்டு மாணவர்களிடம் கொடுத்து எழுதி வாங்கி

பின் அனைத்தையும் வரிசை கிரமமாக அடுக்கி\

முன் பக்கம் ஓவியம் தெரியும்படியாக வண்ண

பிளாஸ்டிக் ஒட்டி..... பைண்ட் செய்து.


இப்படி எல்லாவற்றையும் எல்லோருமாகச்

சேர்ந்து ஏப்ரல் இருபத்தைந்துக்குள் செய்து முடித்து

மே ஒன்று அன்று ஊரில் ஊர்வலம் கொடியேற்றுதல் முதலான நிகழ்வுகள் தோழர் வாசுவுக்கு இருக்கும் என்பதால்

இரண்டாம் தேதி நூலகத்தில் வெளியிட்டோம்


நூலகத்திற்கான பிரதியை தோழர் வாசு

வெளியிட நூலகர் பெற்றுக் கொண்டார்

வெளிச் சுற்றுக்கான பிரதியை நூலகர் வெளியிட

தோழர் வாசு பெற்றுக் கொண்டார்


நாங்கள் அனைவரும் சுற்றி நின்று

கைதட்டி ஆரவாரம் செய்ய எங்கள்

கைப் பிரதிக்கான பெரும் முயற்சி

மிகச் சிறப்பாக அரங்கேறியது..


நூலகத்திற்கான  பிரதியை நூலகர்

என் கையில் கொடுத்து ரவுண்ட் சீல் 

போடச் சொன்னார்..


நூலகத்திற்கு அப்போதெல்லாம் வார

மாத இதழ்கள் தபாலில் தான் வரும்

நூலகத்திற்கான கடை நிலை ஊழியர்

வயதானவர் என்பதால் பெரும்பாலும்

வரமாட்டார்..அப்படி வருகிற நாட்களில் கூட

தாமதமாகத் தான் வருவார்.


நூலகர் வருகையில் வாயிலில் இருப்பவன்

பெரும்பாலும் நானாகத்தான் இருப்பேன்

அவர் வந்ததும் சாவி வாங்கித் திறந்ததும்

உள்ளே விழுந்து கிடந்த வார மாத இதழ்களின்

கவர் கிழித்து அது நூலகப் புத்தகம் என்பது

தெரியவேண்டும் என்பதற்காக ரவுண்ட்சீல்

முன்பக்க அட்டை மற்றும் இடை இடையே

அடித்து வைப்போம்.பெரும்பாலும்

இதை நான் தான் செய்வேன்,


இப்போது நான் எழுதிய கவிதையைத் தாங்கிய

கைப்பிரதியில் ரவுண்ட் சீல் நானே

அடித்த நொடியில் கிடைத்த மகிழ்ச்சியை

நிச்சயம் சொல்லால் விளக்க முடியாது


முன்பக்கம் பின்பக்கம் அடித்ததோடு என் கவிதை

இருந்த பக்கமும் அடித்து நூலகர் கையில்

கையில் கொடுக்க  நடந்தபெருமித நடை

இப்போதும் நினைவில் காலத்தால் 

மங்காத ஓவியமாய் மின்னிக் கொண்டுதான் உள்ளது

என்றால் மிகையில்லை


கைப்பிரதியை பெற்றுக் கொண்ட நூலகர்

நான் முழுவதும் படித்து விட்டு என் 

விரிவான விமர்சனத்தை பின் பக்கம் காலியாக

விடப்பட்டுள்ள பக்கத்தில்  நாளை

பதிவு செய்துவிடுகிறேன். எனச் சொல்ல

சிறிது நேரம் பொது விஷயங்கள் குறித்து

கல்ந்து பேசி விட்டுக் கலைந்தோம்


மறு நாள் அவருடைய விமர்சனத்தில்

என்னுடைய கவிதை குறித்து என்னவாக இருக்கும்

என்கிற ஆர்வம் இரவெல்லாம் 

என்னைத் தூங்கவிடவில்லை


( தொடரும் ) 

Sunday, May 30, 2021

முதல் பிரசவம் ( 7 /--

 ஒரு நல்ல சமூகச் செயற்பாட்டாளர் 

என்கிற முறையில் ஊரில் அனைவரும்

தோழர் வாசுவை அறிந்திருந்ததைப் போலவே

நாங்களும் அறிந்திருந்தோம்


ஆனால் அவர் எங்களையும் எங்கள் புதிய

முயற்சியையும் முழுமையாக அறிந்திருந்தது

எங்களுக்கு ஆச்சரியம் அளித்தது


எங்களருகில் வந்தவர் 

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே

விசயத்துக்கு வந்துவிட்டார்.


"நான்கு நாட்களுக்கு முன்பு 

நூலகர் ராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்தேன்

உங்கள் முயற்சியைப் பற்றி மிகப்புகழ்ந்து பேசினார்

ரொம்ப சந்தோசமாக இருந்தது 

எனக்கும் வாசிப்பதிலும் எழுதுவதிலும்

அதிக ஆர்வம் உண்டு.. என்னையும்

இணைத்துக் கொள்வீர்களா " என்றார்..


எங்களுக்கும் இப்படி  சமுகத்துடன் நேரடித்

தொடர்புள்ள ஒருவர் உடன் இருந்தால்

நல்லது எனப்பட்டதால்.

உடன் மகிழ்வுடன் சம்மதித்தோம்..


பின் அவர் எங்கள் கைப்பிரதியின் அமைப்பு

உள்ளடக்கம் முதலான விஷயங்களை மிகுந்த

ஆர்வமுடன் கேட்டறிந்தார்.


நாங்களும் முதல்வெளியீடு என்பதால்

அட்டையில் விநாயகர்/அட்டைபடத்திற்கு ஏற்ற

கவிதை தலையங்கம் முதலான விசயங்களைச்

சொல்ல ஆர்வமுடம் கேட்ட அவர் ...


"நீங்கள் எல்லாம் என்னைவிட கூடுதல்

கல்வித் தகுதி பெற்றவர்கள்..உங்களுக்கு

நான் சொல்ல வேண்டியதில்லை..ஆனாலும்

என்னுடைய சிறு ஆலோசனையும் கேளுங்கள்

பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்

இல்லையேல் உங்கள் பாணியில் செயல்படுங்கள்

என்றார்..


நாங்கள் கேட்கத் தயாரானோம்


"இதுவரை நமது ஊரில் ஜாதிகடந்து

ஒன்றாக இணைந்து ஒரு புதிய வேலையைத்

துவங்குகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதைப் போல்

புதியமுயற்சியை ஏன் பழம் சிந்தனையுடன்

துவங்குகிறீர்கள்


அட்டைக்கு விநாயகர் படம் வரைகிறவர்

ஏற்கெனவே இருக்கிற விநாயகர்  படத்தைப் பார்த்து

அதைவிட மிகச் சிறப்பாகவோ அல்லது

கொஞ்சம் சராசரியாகவோ வரையப் போகிறார்

அதில் அவர் கற்பனைக்கு தீனி என்ன உள்ளது.


அதைப் போல அதற்கான கவிதையை எழுதப்

போகிறவர் ஏற்கெனவே விநாயகர் குறித்த பத்து பாடல் படித்தால்

உடன் அதைப் போல வார்த்தைகளை அடுக்கி

ஒரு கவிதையைச் செய்யப் போகிறார்

அவருடைய கற்பனைக்கும் அங்கு என்ன

வாய்ப்பு உள்ளது...


சுருங்கச் சொன்னால் குட்டி கல்கி /அமுத சுரபி

ஆனந்த விகடன் தீபாவ்ளி மலர்கள் போல

ஒன்று செய்வதில் என்ன புதுமை இருக்கிறது


மாறாக நீங்கள் வருகிற மே மாதம்

முதல் பிரதியைக் கொண்டு வர இருக்கிறீர்கள்

இயல்பாக அப்படி அமைகிறது

அதை ஏன் நல்ல வாய்ப்பாக 

எடுத்துக் கொள்ளக் கூடாது


ஓவியம் வரைபவரை உழைப்பாளிகளை

கௌரவப்படுத்தும் விதமாக அவருக்குத்

தோணுகிற எதையாவது வரையச் சொல்லுங்கள்

கவிதையும் உழைப்பின் மேனமையைச்

சொல்வதாக  எழுத 

அவர் கற்பனைக்கே விட்டுவிடுங்கள்


மே தினத்தின் சிறப்பு குறித்து நான் எழுதுகிறேன்

ஊரின் இன்றைய நிலை குறித்தும் நாளைய

எதிர்பார்ப்பு குறித்தும் யாராவது எழுதுங்கள்

இப்படி எல்லாம் இருந்தால் நம் கைப்பிரதி

நம் ஊரில் அதிகம் கவனிக்கப் படும்..


இது என்னுடைய கருத்து ,நீங்கள் ஏற்றுக்

கொண்டுதான் ஆகவேண்டும் 

என்கிற அவசியமில்லை" எனச் சொல்லி முடித்தவர்...


பையில் கையை விட்டு ஒரு ஐந்து ரூபாய்த்

தாளை எடுத்து "நீங்கள் எல்லாரும்

படிக்கிற பிள்ளைகள்..உங்களுக்கு பணம்

புரட்டுவது எத்தனை சிரமமாக இருக்கும்

என்பது எனக்குத் தெரியும் "

எனச் சொல்லி நீட்டினார்


நாங்கள் வாங்கத் தயங்கினோம்

எனெனில் அவருடைய வருமானமே

பினாயில் விற்பது மற்றும் சோப்புப் பவுடர்

விற்பதுதான். அதுவும் அது குறித்த

விழிப்புணர்வு ஏதும் இல்லாத ஊரில்....


இந்த ஐந்து ரூபாய்  அவருக்கு

இரண்டு நாள் உழைப்பின் மதிப்பாக

நிச்சயம் இருக்கும்..


அவர் எதுவும் யோசிக்கவில்லை

சட்டென அந்த ஐந்து ரூபாயை என் பையில்

திணித்துவிட்டு "வாழ்த்துக்கள் தோழர்களே .."

எனக் கை அசைத்துக் காட்டிவிட்டு

நடக்கத் துவங்கினார்..


எங்களுக்குள்ளும் கைப்பிரதியின் உள்ளடக்கம்

குறித்தான  ஒரு மாறுபட்ட சிந்தனை

கசியத் துவங்கியது...


( தொடரும் )

Saturday, May 29, 2021

முதல் பிரசவம் ( 6 /- )

 11 ஆம் வகுப்பில் பிரிட்டனில் தொழிற்புரட்சிக்

குறித்து பாடம் எடுத்த எங்கள் சரித்திர ஆசிரியர்

எங்களுக்கு புரிதலும் ஈடுபாடும் வேண்டும் 

என்பதற்காக..


பிரிட்டனில் தொழிற்புரட்சி தோன்றியதும்

எப்படி விவசாயம் முக்கியத்துவத்தை 

இழக்க ஆரம்பித்தது... 

புதிதாக எப்படி ஒரு புதிய தொழிலாளி முதலாளி இனம்

உருவானது என்பதை. எங்கள் ஊர் நிகழ்வுடன்

ஒப்பிட்டு அருமையாகப் பாடம் நடத்துவார்..


அதன் காரணமாகவே என்னால் எங்கள் ஊர்

குறித்து ஒரு கழுகுப்பார்வையிலும்

அணுக்கப் பார்வையிலும் மிகச் சரியாக

உற்று நோக்க முடிந்தது.. 

புரிந்து கொள்ளவும் முடிந்தது


ஆம் முற்றிலும் விவசாயம் சார்ந்தே அனைத்துமாக

இருந்த எங்கள் ஊரில் முதன் முதலாக

ட்ர்க்கி டவல் என்னும் பூத்துண்டு தறியை

ஒருவர் போட ஆரம்பித்தார்...


பத்துக்கும் மேற்பட்டத்தறி ஒரே இடத்தில் போட்டதால்

அது தொழிற்கூடம் போல ஆக ...

அதன் தொர்ச்சியாய் 

கணக்குப் பிள்ளை/ தினக் கூலி வாரக் கூலி மாதக் கூலி/ 

இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் ..

அந்த முதலாளியின்  பொருளாதார வளர்ச்சி....


இப்படிப்பலப் பல விஷயங்கள் கவர்ச்சிகரமானத்

தோன்றியதால் தனியாக குடிசைத் தொழில் போல

ஒருதறி வைத்து வேலை செய்து கொண்டிருந்த

செட்டியார்களில் பலரும் ஜக்காட் எனும்

டர்க்கித் தறிக்கு மாற.ஆரம்பித்தார்கள்...


அதுவரை நிலச் சுவான்தார்களையே நம்பி இருந்த

கூலி கூட அவர்களது மனோபாவம் பொருத்துப்

பெற முடிந்த நிலையில் மௌனமாக சகித்துக்

கொண்டிருந்த இளைஞர்களின் கவனம்

தறிப் பக்கம் திரும்பத் துவங்கியது


அதன் காரணமாக மெல்ல மெல்ல எங்கள் ஊர்

குடியானவர்கள் ஊர்என்கிற முகம் கலைத்து 

தொழில் நகரமாக மாறத்துவங்கியது..


மாதக் கணக்கில் உழைத்துப் பெறுகிற

சம்பளத்தை பதினைந்து நாளில் பெற முடிந்ததும்

அதையும் உரிமையுடன் பெற முடிந்ததும்


மெல்ல மெல்ல அதிக இளைஞர்களை 

ஜாதி வேறுபாடின்றி தறியின் பக்கம் இழுக்க/

பணப் புழக்கம் அதிகரிக்க...

அதன் தொடர்ச்சியாய் ஊரிலேயே 

செலவழிக்கும்படியான வாய்ப்புகளும் பெருக..

அதன் நிழலாய் பற்றாக் குறையும் வளர..

அதன் காரணமாய்க் கூலி உயர்வு குறித்த

எண்ணங்களும் முயற்சிகளும் சச்சரவுகளும்

போராட்டங்களும் தலையெடுக்கத் துவங்க....


இதனைத் தீர்க்கும் சாமர்த்தியம் விவசாய

விஷயங்களில் இருந்த அளவு இந்தத்

தொழிற்பிரச்சனைகளைத் தீர்க்க 

காங்கிரஸ் மற்றும் தி.மு.க இயக்கம்

சார்ந்தவர்களுக்கு உதவாததால்....


அந்த வெற்றிடத்தை நிரப்பும் திறனும்

இந்தத் தொழில் சார்ந்த சூட்சுமங்களும்

அனுபவமும்  உடையவர்கள் தேவைப்பட்டார்கள்


அதற்கு ஏற்கெனவே கைத்தறி நகராகவே

இருந்த செல்லூரில் அனுபவப்பட்ட

தொழிற்சங்கத் தலைவர்களின் கவனம்

எங்கள் ஊர்ப்பக்கம் திரும்ப....


கட்சியில் ஏற்கெனவே இருந்தவர்களின்

வயதும் மனோபாவமும் இந்தப் புதிய சூழலுக்கு

பொருந்தாது எனவும் அதற்கு கொஞ்சம்

இளைஞராகவே இருந்தால் நல்லது என

முடிவு செய்து கட்சியின் பகுதி நேரப்பணியாளராகத்

தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான் தோழர் வாசு..


இவர் மிகச் சிறிதாகச் செய்து கொண்டிருந்த

சோப் பவுடர் மற்றும் பினையில் வியாபாரத்தை

வீடு வீடாகச் சென்று விற்பதுடன்

கட்சி இதழ்களான தீக்கதிர் செம்மலர் ஆகியவைகளை

கேட்பவர்களுக்கு வினியோகிப்பவராகவும் இருந்தார்.


நடு நிலைப் பள்ளி அளவே படித்திருந்தாலும் கூட

உலக அரசியல் பேசுவதிலும் ,ஜெயகாந்தன் படைப்புகள்/

வால்கா முதல் கங்கை வரை / தாய்/

முதலான நூல்களை விமர்சன நோக்கில்

விரிவாகப் பேசும் அளவு இலக்கிய அறிவும்

பெற்றிருந்தது அப்போதே எங்களுக்கு

ஆச்சரிய மூட்டும் விஷயமாகவே இருந்தது.


என்வே அவர் எங்கள் கைப்பிரதி குறித்து

சொல்ல முனைந்த விஷயத்தில் நாங்கள் அலட்சியம்

கொள்ளவில்லை..


கவனமாகவே கேட்டுக் கொண்டிருந்தோம்

அது பயனுள்ளதாகவும் இருந்தது..


ஆம் கைப்பிரதியின் உள்ளடக்கத்தை

முற்றிலும் மாறச் செய்யக் கூடியதாகவுமே

இருந்தது.. 


( தொடரும் )

Friday, May 28, 2021

முதல் பிரசவம் ( 5/---)

 சிறிது நேரமே பேசி நாங்கள்

முடிவு செய்திருந்த கைப்பிரதியின்

உள்ளடக்கத்தை மாற்றக் கூடிய திறன் கொண்ட

தோழர் வாசுவைப் பற்றி மிகச் சரியாகப்

புரிந்து கொள்ளவேண்டுமெனில் கொஞ்சம்

எங்கள் ஊரையும் அறிந்திருக்கவேண்டும்.


மதுரை நகருக்கு மிக அருகே 3 கி.மீ தூரத்தில்தான்

எங்கள் ஊர் இருந்தது என்றாலும்

இதை எழுதும் காலத்தில் எங்கள் ஊர்

நகரத்தின் சுவடுகள் ஏதும் பதியாத  

அந்தக் காலத்திற்கு முப்பது ஆண்டுகள்

முந்தைய கிராமமாகவே இருந்தது..


நாலைந்து நிலச்சுவான்தார்கள்

பத்துப் பதினைந்து நிலக் குத்தகைக்காரகள்

மற்றபடி ஏறக்குறைய எல்லோருமே 

விவசாயக் கூலிகளே..


அங்கு பிழைப்புக்கான வேலை என்றால்

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த

தொழில்களான மாட்டுவண்டி /கலப்பைப் பட்டறை/

வண்டிக்கு காளை மாடு மற்றும் தெருவுக்கு

பத்து வீடுகளில் பசு மாடு வளர்ப்பு

அது சார்ந்து பால் மோர் வியாபாரம்

புல்லுக்கட்டு வியாபாரம் எனத்தான் 

ஊர் இருந்தது,,


சேனியச் செட்டியார்கள் என்கிற ஒரு

தெருவில் இருந்தவர்கள் எல்லாம் 

அவரவர் வீட்டளவில் தறி வைத்து

சாதா துண்டு உற்பத்தி செய்பவர்களாக

இருந்தார்கள்..அது தொடர்பான நூல் சுற்றுதல்

குஞ்சம் முடிதல் கூடுதல் தொழிலாய் இருந்தது


அதன் காரணமாக ஊரில் செலவழிக்க 

நினைத்தாலும் செலவழிக்கத்தக்க கடைகள் ஏதும்

அதிகம் இருக்காது..


ஹோட்டல் என்றால் எங்கள் ஊருக்கு ஏற்ற

பைவ் ஸ்டார் எனச் சொல்லத்தக்க

ஒரு  உடுப்பி பிராமணாள் ஹோட்டல்/

கொஞ்சம் நடுத்தர மக்களும் சாப்பிட முடிந்த

பத்ம விலாஸ் என மற்றொரு பிராமணாள்

ஹோட்டல் அடுத்து கோபால்நாயுடுக்கடை

என்கிற ஒரு அசைவம் கிடைக்கிற கடை


இந்த ஹோட்டல்களை ஜாதிவாரியாகச்

சொல்லக் காரணமே ஊரே ஜாதியாகத்தான்

பிரிந்து கிடந்தது அல்லது கட்டுண்டு கிடந்தது

எனச் சொல்லலாம்


தெருப்பெயர்கள் எல்லாம் அக்ரஹாரம்/

பிள்ளைமார் தெரு/கோனார்/தெரு/சேர்வார்தெரு/

சௌராஷ்ட்ரா காலனி /பச்சேரிஎன்றே இருக்கும்


பின்னாளில் ஜாதிப் பெயரில் பெயர் இருக்கக்

கூடாது என சட்டம் வந்த பின்பு கூட

ஜாதிப் பெயர் தெரியும் படியாக

கணக்குபிள்ளைத்தெரு/மருதுபாண்டியர் தெரு

செட்டியார்கள் வணங்கும் தெய்வத்தின் பெயர்

இருக்கும்படியாக மார்கண்டேயசாமி கோவில் தெரு

பெரியார் நகர்/அக்ரஹாரம்  எனத்தான்

மாற்றிக் கொண்டார்கள்..


இந்தச் ஜாதிக் கட்டமைப்பை இறுக்கக்

கட்டிவைக்கும்படியாகவே அவர் அவர்களுக்கான

கோவில் திருவிழா/ மஞ்சுவிரட்டு /

முளைபாரித் திருவிழா என இருக்கும்..


பொழுதுபோக்குக்கெனில் ஒரே ஒரு

டெண்ட் கொட்டகை உண்டு

ஊரின் மொத்த சாராம்சம் இவ்வளவுதான்..


தேவைகள் அதிகம் இல்லையென்பதாலோ

அல்லது ஜாதிக்கட்டமைப்பை மீறினால்

பிழைத்தல் என்பது சாத்தியம் இல்லை

என்பதாலோ அரசியல் கட்சிகள் கூட

அதிகம் ஜாதி சார்ந்துதான் இருந்தது


கட்சி என்றால் காங்கிரஸ் மற்றும்

தி.மு.க மட்டுமே இருந்தது


மதுரையில் அந்தக் காலத்தில் சொல்லத்தக்க

அளவில் கம்னியூஸ்ட் கட்சி வளர்ந்திருந்தாலும்

கூட  எங்கள் ஊரில் இந்தக் கட்டமைப்பை மீறி

கம்னியூஸ்ட் கட்சி தனனை விவசாயிகள்

இயக்கமாகக் கூடக் கட்டமைத்துக் கொள்ள

முடியவில்லை


இந்த நிலையில் ஊரில் புதிதாக

விவசாயம் தவிர்த்து வருமானம் கிடைக்கும்படியாக

ஒரு மாற்றம் நேரத் துவங்கியது..


இந்த மாற்றத்தில். ஊரின் முகம்

கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக

மாறத்துவங்கியது


இந்த மாற்றாத்தினை உள்வாங்கி களத்தில்

தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு

செயல்படும் ஒரு போராளியாக 

தோழர் வாசு இருந்ததால் அவரை

அனைவரும் அறிந்திருந்தோம்


அனைவருடனும் தன்னை இணைத்துக் 

கொள்ளும்படியான மனோபாவம் அவரிடம்

இருந்ததாலேயே அவரால் அவரினும்

சிறியவர்களான எங்களுடனும் நெருங்க முடிந்தது


கைப்பிரதியின் உள்ளடக்கதிற்கான மாறுதலை

நாங்களும் ஏற்றுக் கொள்ளுபடியாகச்

செய்ய முடிந்தது..


(தொடரும் )

Thursday, May 27, 2021

முதல் பிரசவம் 4 /--

கவிதை எழுதும் முன்  அவர் புனைப்பெயர்

வைத்துக் கொள்ளச் சொன்னதன் காரணமே

என் பள்ளிப் பெயர் ரொம்ப நீளமானது

இனிசியலுடன் சேர்த்தால் பதிமூன்று எழுத்து


எனவே வீட்டில் கூப்பிடும் பெயரான

ரமணி என்கிற பெயரை வைத்து ஒரு

புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் என

முடிவு செய்தோம்


முன்பு பிரபலமானவர்கள் எல்லாம் தங்கள்

பெயருக்கு முன்னால் ஊரின் பெயரைச்

சேர்த்து தங்கள் பெயரை வைத்திருப்பார்கள்


கொத்தமங்கலம் சுப்பு../நாஞ்சில் பி.டி சாமி

நெல்லைக் கண்ணன் ...இப்படி...

அந்த வகையில் எங்கள் ஊரின் பெயரான

அவனியாபுரத்தின் பெயரில் மூன்று எழுத்தையும்

என பெயரையும் சேர்த்து அவனி,ரமணி

என வைப்பதென முடிவு செய்தோம்..

பின் அது கூட சரியில்லை இனிசியலையும்

சேர்த்து அவனி..எஸ்.வி ரமணி என வைத்துக்

கொள்வதென முடிவாயிற்று


மூவரும் ஏதோ  அரஞ்சு மிட்டாயை மெல்வதுபோல்

மெல்ல மெல்ல வாய்க்குள் சொல்லிப் பார்த்து

பிரமாதம் அப்படியே இருக்கட்டும் என முடிவு செய்து...

பெயர் நன்றாக அமைந்துவிட்டது அப்படியே

இனி கவிதையும் அமையும் என வாழ்த்துக்

கூற அடுத்த விஷயங்களில் கவன்ம் செலுத்தத்

துவங்கினோம்


முதல் பிரதி என்பதால் அட்டைபடத்தில்

விநாயகர் படம் போடுவது..அட்டைப்படத்திற்கான

கவிதையாக நான் விநாயகர் குறித்து

ஒரு கவிதை எழுதுவது...

தலையங்கத்திற்கு ஒரு இரண்டு பக்கம்/

கதைக்கு ஆறு பக்கம்/கட்டுரைக்கு மூன்று பக்கம்/

புத்தக அறிமுகம் அல்லது விமர்ச்சனம்

அதற்கு ஒரு நான்கு பக்கம்/ பின்

படித்தவர்கள் கைப்பிரதி குறித்த கருத்துக்களை

பதிவு செய்ய காலியாக ஐந்து பக்கம் என

திட்டமிட்டு எப்படியும் ஒரு 

கைப்பிரதியின் பக்கஙகள்  இருபத்தைந்தைத்

தாண்டாது பார்த்துக் கொள்வது என்றும்

தீர்மானிக்கப்பட்டது


அதற்குத் தயாரிப்புச் செலவாக ரூபாய்

பதினைந்து ஆகும் என்றும் அதில் எட்டு

ரூபாயை நாங்கள் பகிர்ந்து கொள்வது என்றும்

மீதம் ஏழு ரூபாயை நன்கொடைகள் பெற்று

ஈடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது

(அன்றைய நிலையில்  பதினைந்து ரூபாய் என்பது

அரசு அதிகாரி ஒருவரின்  ஒரு நாள் சம்பளத்திற்கு 

ஈடானது .)


பின் எழுதுபவரிடம் எழுதி வாங்கி கையெழுத்து

நன்றாக உள்ள இருவரிடம் பிரித்துக் கொடுத்து

எழுதி வாங்குவது ஓவியம் வரையக் கொடுத்து

வாங்குவது முதலான அனைத்துப் பணிகளையும்

நான் பார்ப்பது என முடிவானது.


இப்படிப் பேசி முடிவெடுத்து நாளை முதல்

செயல்படுத்தத் துவங்குவோம் என பேசிக்

கலைகிற சமயத்தில் தூரமாக இருந்து

எங்கள் நடவடிக்கைகளை கவனித்துக் 

கொண்டிருந்த எங்களூரின் கம்னியூஸ்ட்

கட்சியில் முழு நேர ஊழியராகப் பணியாற்றிக்

கொண்டிருந்த வாசு என்கிற தோழர்

எங்களை நெருங்கி வந்தார்..


அவர் வரவும் பேச்சும் நாங்கள் ஏற்கெனவே

புத்தகத் தயாரிப்புக்கென வகுத்திருந்த

உள்ளடக்கங்களை அப்படியே தலைகீழாக

மாற்றும் என நாங்கள் 

அப்போது உணர்ந்திருக்க வில்லை


(தொடரும் ) 

Wednesday, May 26, 2021

முதல் பிரசவம் ( 3 / --)

 கவிதையை நான் எழுதவேண்டும் எனச்

சொன்னதும் நான் மிரண்டதன் காரணம்

கவிதை குறித்தோ இலக்கணம் குறித்தோ

புரிதலோ அடிப்படை விதிகள் தெரியாததோ

காரணமில்லை


ஏனெனில் அப்போது எங்கள் தமிழ்

பாடத்திட்டத்தில் வெண்பா வரை இலக்கணம்

கற்றுக் கொள்ளும் வாய்ப்பிருந்தது


பள்ளியில் காலை இறை வணக்கம்

மேடையில் சொல்லுவது பெரும்பாலாக

நானாகத்தான் இருப்பேன்

.

என்னை அப்படித் தேர்ந்தெடுப்பதற்குக்

காரணம் நான் மோனைக்குக் கொடுக்கும்

அழுத்தமும் எதுகையை தூக்கலாகத்

தெரியும்படி சொல்லுவதும் எனத்

தமிழாசிரியர் சொல்வார்


ஆய்வுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வரும் பொழுதுகளில் கூட மனப்பாடப்பாடல்

சொல்ல நேரும் போது எனக்கே அதிக

வாய்ப்புக் கிடைக்கும்..


நூலகத்தில் எதிர்பாராமல் படிக்கக் கிடைத்த

கி.வா.ஜ.அவர்களின் கவி பாடலாம் என்கிற

இளம் கவிஞர்களுக்கான எளிமையான

அருமையான நூலையும் படித்து

கவிதை எழுதுவற்கான சில அடிப்படையான

விஷயங்களையும் கொஞ்சம் தெரிந்து

வைத்திருந்தேன்.


எனவே மிரண்டதற்குக் காரணம் அதுவல்ல.

அதைவிட மிகப் பெரிய காரணம் 

ஒன்று இருந்தது..


அதற்கு எங்கள் கிராமத்தில் நாங்கள்

வளர்ந்த விதம் எனச் சொன்னால்

அது மிகை இல்லை....


எந்த விஷயம் என்றாலும் ஒரு குறிப்பிட்ட

எல்லை தாண்டாது இருக்கும்படியாகவே

வளர்க்கப் பட்டதால் படிப்பது என்றால்

படிப்பது அதை தாண்டி எழுதுவது என்பதனை

யோசித்துப் பார்க்கமுடியாத அளவு

எங்கள் மனம் கட்டமைக்கப்பட்டிருந்தது


இன்னும் தெளிவான உதாரணம் மூலம்

சொல்லவேண்டுமானல் இந்த உதாரணத்தைச்

சொன்னால் உங்களாலும் இதைச் சரியாகப்

புரிந்து கொள்ளமுடியும்..


நானும் என் நண்பர்களும் எம்.ஜி.ஆர்

அவர்களின்தீவீர இரசிகர்கள்.

.புதுப் படம் நகரில் ரிலீஸ் ஆனவுடன் 

முதல் ஒரு வாரத்தில்

பார்க்கவில்லையென்றால் எங்களுக்குச்

சாப்பாடு இறங்காது.. தூக்கம் வராது..


எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு வழி

பஸ்கட்டணத்திற்கும்/ இடைவேளை முறுக்குக்கும்/

ஒரு ரூபாய் எண்பது பைசா டிக்கெட்டுக்கும் என

ஆளுக்கு ஐந்து ரூபாய் தயார் செய்து 

கிளம்பிவிடுவோம்...


மதுரையில் எப்போதுமே எம்.ஜி.ஆர்

அவர்களின் படத்திற்கு முதல் இரண்டு மூன்று

வாரங்களுக்கு அதிகக் கூட்டம் இருக்கும்

பாதி டிக்கெட்டை கவுண்டரில் கொடுத்துவிட்டு

மீதியை வெளியே பிளாக்கில் விற்கத்

துவங்கிவிடுவார்கள்.


நாங்கள் கவுண்டரில் முட்டி மோதி

டிக்கெட் எடுக்க முயல்வோம்.எப்போதும்

அதில் தோற்றுத்தான் போவோம்.

பின் வழக்கம்போல எண்பது பைசா டிக்கெட்டை

இரண்டு மடங்கு விலைக்கு வாங்கி

படம் பார்க்க உள்ளே ஓடுவோம்


இதில் விஷேசம் என்னவெனில் பால்கனிக்கான

ஒரு ரூபா பத்து பைசா டிக்கெட்டுக்கான

கவுண்டர் காலியாகத்தான் இருக்கும்

எங்களுக்கு ஏனோ அந்த டிக்கெட் எடுத்து

மாடியில் அம்ர்ந்து படம் பார்க்க ஒப்பாது

கூட பணம் கொடுத்தும் கொஞ்சம் வசதிக்

குறைவான் இருக்கைகளாக இருந்தாலும்

இங்கிருந்து பார்ப்பதுதான் பிடிக்கும்


மாலையில் நடைபயிற்சிக்குச் சென்றாலும்

இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்

ஒரு கல்பாலம் இருக்கும்.

அதைத் தாண்ட மாட்டோம்


இப்படி நிறையச் சொல்லலாம்.

இந்த நிலையில் படிப்பது மட்டுமே

நம் வேலை எழுதுவது நமக்கானது இல்லை

என்கிற மனோபாவம் இருந்ததால்

அவர் சொன்னதும் மிரண்டுதான் போனேன்


ஆயினும் அவர் அழுத்தம் திருத்தமாக 

"கவிதையை நீதான் எழுதுகிறாய். மாற்றம் இல்லை

அதற்கு முன் உனக்கு  இதுவரை யாரும்

வைத்துக் கொள்ளாத /உனக்கு மட்டுமே ஆன/

உச்சரிப்பதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும்

எளிதாக இருக்கும்படியாக ஒரு புனைப்பெயரை

தேர்ந்தெடுத்துக் கொள்..

பிற்காலத்தில் நீ அதிகமான கவிதைகள் கூட

எழுத முடியும்.ஆனால் புனைப் பெயரில்

எழுதத் துவங்கி விட்டால் எழுதும் காலம் வரை

அதை மட்டுமே மாறாமல் வைத்திருக்க வேண்டும் 

அப்போதுதான் உன் பெயர் என்றும் நிலைக்கும்

." என புனைப்பெயருக்கு ஒரு பிரசங்கமே.

செய்து விட்டார்...


ஆம் ஒருவகையில் புனைப்பெயருக்கே

அதிகம் யோசிக்கும்படியாக ஒரு

அச்சுறுத்தலையும் ஏற்படுத்திவிட்டார்..


இரண்டு நாட்களாக  எந்த வேலையாயினும்

புனைப்பெயர் குறித்த நினைவாகவே

அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்...


தொடரும்...

முதல் பிரசவம் ( தொடர்ச்சி ) 2/---

 ஆம் தமிழ் இலக்கிய மேற்படிப்புப் படித்துக்

கொண்டிருந்த நண்பர்  நாங்கள் ஜெயந்தன்

அவர்களைச் சந்தித்துத்

திரும்பிக் கொண்டிருந்த ஒரு நாளில்..

" பிறர் விளையாடுவதையே இரசித்தபடி இருந்தால்

நாம் என்றுதான் விளையாடுவது " என்றார்


நாங்கள் ஒன்றும் புரியாதபடி அவரைப் பார்த்தோம்


அவர் சிரித்தபடி" ஆம் நாம் பிறர் எழுதுவதையே

படித்தபடி பொழுதைக் கடத்திக் கொண்டிருந்தால்

நாம் என்றுதான் எழுதுவது " என்றார்..


"எழுதலாம்தான் ஆனால் அதை யார் படிப்பது ?"

என்றார் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த

நண்பர்..


" நீ எழுதுவதை நான் படிக்கிறேன். 

நான் எழுதுவதை நீ படி..

நாம் எழுதுவதை நூலகம் வரும் நம்

நண்பர்கள் படிக்கட்டும் பின்

படிப்படியாய் ஊர்க்காரர்களை படிக்க வைப்போம் "

என்றார்...


பின் அவர் வழிகாட்டுதலின் படி ஒரு

கையெழுத்துப் பிரதி வெளியிடுவதென்றும்

ஒரு பிரதியை நூலகத்திலும் மற்றோரு பிரதியை

நண்பர்களின் சுற்றுக்கு விடுவதென்றும்

அதற்கு "புதுப் புனல் " எனப் பெயரிடுவது

எனவும் தீர்மானமாயிற்று...


இலக்கியக் கட்டுரையை பட்டமேற்படிப்புப்

படித்துக் கொண்டிருந்த நண்பர் எழுதுவது

என்று தீர்மானமாயிற்று..


(அவர்தான் பின் நாளில்  (எங்கள் ஊரில் 

முதன் முதலாக) முனைவர் பட்டம்பெற்று

மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆன

முனைவர் திரு. சேதுப் பாண்டியன் அவர்கள் )


சிறுகதையை ஆங்கில இலக்கியத்தில்

பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த நண்பர்

எழுதுவது எனத் தீர்மானம் ஆயிற்று


(இவர்தான் எங்கள் ஊரிலிருந்து கணையாழில்

படைப்புகள்  வரும்படியாக தரமான படைப்புகளை

பின்னாளில் வழங்கிய படைப்பாளி....

கவிஞர்..சிறுகதை எழுத்தாளர். 

திரு. காண்டீபன் அவர்கள்.


.முன்பு கணையாழியில்\

அவ்வாண்டில் வந்த கதைகளில் சிறந்த கதை\

ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கௌரவிப்பார்கள்

அதில் ஒரு வருடம் அவருடைய "ஒன் பீரியட்"

என்கிற தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது

குறிப்பிடத் தக்கது )


எங்களுடன் என்னைப் போல உயர்கல்வி

முடித்திருந்த நண்பரும் இணைந்து கொண்டார்

அவர்  நீங்கள் எதை எழுத வாய்ப்புத்

தருகிறீர்களோ அதை

எழுதுகிறேன் என அடக்கமாய்ச் சொல்லி

நிறுத்திக் கொண்டார்..அவர் நிறைகுடம்

என்பது போகப் போக எங்களுக்கு

மட்டுமல்ல எங்கள் ஊருக்கே புரிந்தது

ஆம் அவர்தான் எங்கள் ஊரில் முதன்முதலாக

ஐ.ஏ..எஸ் என்னும் உச்சம் தொட்ட

திரு.அழகர்சாமி அவர்கள்...


இப்படியாக பின்னாளில் ஊருக்குப் பெருமை

சேர்க்க இருந்த ஜாம்பவான்கள் இடையில் நானும்

இருந்தேன்..


எல்லோருக்கும் எல்லாம் ஒதுக்கீடு செய்தபின்

மீதம் இருந்தது அட்டைக்கு ஓவியம்

வரைவதும் கவிதையும் தான் பாக்கி

இருந்தது....


"ஓவியத்திற்கு நம் பள்ளி ஓவிய ஆசிரியரை

அணுகி நன்றாக வரையக் கூடிய  மாணவர்

ஒருவரை ஏற்பாடு செய்யலாம்.

கவிதையை நீயே எழுதிவிடு " எனச்

சொன்னதும் நான் மிரண்டு போனேன் ...


(தொடரும் )