Friday, June 9, 2017

நடுவிலிருப்பவனே என்றென்றும் ...

நடுவிலிருப்பவனே
அனைத்திற்கும்
காரணமாய் இருக்கிறான்

கீழிருப்பவனின் அறியாமையையும்'
மேலிருப்பவனின் பேராசையையும்
மிகத் தெளிவாய்ப்
புரிந்துவைத்திருக்கும்...   (நடுவிலி )

கீழிருப்பவனுக்கு மேலிருப்பவன் மேல்
அதிகக் கோபமூட்டி
அந்தக் கோபத்தைக் காட்டியே
மேலிருப்பவனுக்கு அச்சமூட்டி...
                                     (நடுவிலி)
கீழிருப்பவனுக்கு எனச் சொல்லி
கிடைத்ததில் பாதி ஒதுக்கிக்
கீழிருப்பவன் பரம்பரையாய்
கீழேயே இருப்பதற்கு          (நடுவிலி)

மேலேறவும் திறனில்லாது
கீழிறங்கவும் மனம் இல்லாது
மூன்று இரண்டாகிவிடவோ
ஒன்றென மாறிவிடவோ  விடாது
                                    (நடுவிலி)
நடுவிலிருப்போனின் நயவஞ்சகத்தை
மேலிருப்போனும் கீழிருப்போனும்
உணர்ந்து தெளியாதவரையில்
அவனை ஒதுக்கி வைக்காதவரையில்

இன்னும் எத்தனைக் காலமாயினும்
இன்னும் எவர் எவர் வழிகாட்டினும்
அத்தனையையும் மடைமாற்றி
வழக்கம்போல் திசைமாற்றி

நடுவிலிருப்பவனே என்றென்றும்
காரியவாதியாக இருப்பான்
தொடரும் அவலங்கள் தொடர்ந்து நிலைக்க
அவனே காரணமாகவும் இருப்பான்

17 comments:

G.M Balasubramaniam said...

ஒரு சமூகத்தில் ஒரு பேச்சுக்கு மேலிருப்பவர்கள் 20 சதம் என்றும் கீழிருப்பவர்கள் 20 சதம் என்றும் எடுத்துக் கொண்டால் மீதி 60 சதவீதம் நடுவிலிருப்போரே

KILLERGEE Devakottai said...

எல்லாம் நிர்ணயிப்பது நடுவிலிருப்பவனே
த.ம.2

சீராளன்.வீ said...

காலம் பதில் சொல்லும் கவிஞரே
நன்றி

தம +1

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தக் கவிதைக்கும் + கவிதைப்படைப்பாளிக்கும்

’நடுவிலிருப்பவனே, வாசகனான நானோ’ என்ற நடுக்கம் ஏற்படுகிறது.

யோசிக்க வைக்கும் அருமையான ஆக்கம் !

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தனித்தனியாகச் சொன்னால்
நிறையச் சொல்லனும் எனச் சொல்லவில்லை
சொல்லவில்லை

மற்றபடி இதனை "இதனை இதனால்
இவன் முடிக்கும்...என திருவள்ளுவர்
சொல்வாரே அதைப்போல
விரிந்த பொருளாக எதனுடனும்
ஒப்பிட்டுக் கொள்ளலாம்

உதாரணமாக
மந்திரிகளுக்கும் மக்களுக்கும்
இடையில் உள்ள அல்லக்கைகள் போல

சாமிக்கும் பக்தனுக்கும் இடையில் உள்ள
பூசாரியைப் போல

முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும்
இடையில் உள்ள "அவர்கள்" போல

விளைவிப்போனுக்கும் நுகர்வோனுக்கும்
இடையில் இருக்கும் வியாபாரி போல

இன்னும்மழுத்தமாகச் சொன்னால்
முற்படுத்தப்பட்டவர்களுக்கும்
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் இருக்கும்
பிற்படுத்தப்பட்டவர்களைப் போல

இன்னும்...இன்னும்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான விளக்கங்கள்.

சொல்லியதை விட சொல்லாதவை ஏராளம் போலிருக்குது.

சொல்லாத சொல்லுக்கு .... விலையேதும் இல்லை ... விலையேதும் இல்லை ....

புரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி, ஸார்.

Unknown said...

நடுவிலியை அறிவிலி என்பதா ,அறிவாளி என்பதா :)

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA //

பிழைக்கத் தெரிந்தவன் எனச் சொல்லலாம்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

உடன் வரவுக்கும் சிந்திக்க வைக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //

புரிதலுடன் கூடிய பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

சீராளன்.வீ //

பாலையில் நீரூற்றாய்
நமபிக்கையூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//
மிகவும் அருமையான விளக்கங்கள்.

சொல்லியதை விட சொல்லாதவை ஏராளம் போலிருக்குது.
சொல்லாத சொல்லுக்கு .... விலையேதும் இல்லை ... விலையேதும் இல்லை

உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Angel said...

ஆக மொத்தம் பெரும் பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமே இந்த குட்டை கலக்கிகள் நடுவிலிகள்தான்

Rajeevan Ramalingam said...

மிக அருமையான சிந்தனை ஐயா..! மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, நடுவிலிகளின் உண்மை முகத்தை எழுதியுள்ளீர்கள்.

கோமதி அரசு said...

இடையில் உள்ளோரே பிழைக்க தெரிந்தவர்கள் என்பார்கள்.நடுவிலிகள்பற்றி அருமையான கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

சரி... மிகச் சரி...

சென்னை பித்தன் said...

பிழைக்கத் தெரிந்தவன்!
அருமை

Post a Comment