Thursday, August 2, 2018

காதலும் கவிதையும்

"காதலர்கள் காதலில் தோற்று
தற்கொலை செய்துகொள்வது
தொடர்ந்து நடக்கிற போதும்...

கவிதைகள் என்கிற பெயரில்
குப்பை கூளங்கள்
தொடர்ந்துப் பெருகிடும் போதும்...

காதலும் கவிதையும் மட்டும்
எப்படி நித்தமும் புத்தம் புதிதாய்த்
தழைத்தபடியே இருக்கிறது

பதினாறு வயது மார்க்கண்டேயனாய்
எப்படி இளமைத் துடிப்புடன்
நிலைத்தபடியே இருக்கிறது " என்றான்
புதிதாய்க் காதல்வலையில் சிக்கிய நண்பன்

" எல்லாம்
அசட்டுத் துணிச்சலும்
குருட்டு நம்பிக்கையும்
 தரும் பலத்தால் தான் "என்றேன் சிரித்தபடி

"இது காதலை அறியாதவனின்
பொறாமைப் புலம்பல் " என்றான் எரிச்சலுடன்

"அரசியல் செய்யவில்லை என்றால்
அரசியல் தெரியாது என்று அர்த்தமில்லை
அப்படித்தான்
காதலிக்கவில்லை என்றால்
காதல் புரியாது என்றும் அர்த்தமில்லை" என்றேன்

"எனக்குத் தேவை
 புத்திசாலித்தனப் புலம்பல் இல்லை
ஏற்றுக் கொள்ளும்படியான
தெளிவான விளக்கம் " என்றான்

"பகைவனின் கோட்டைக்குள்
காதலி இருக்கிறாள் எனில்..

கிடைக்கும் நூலேணி பிடித்தோ
ஒட்டடை நூல் பிடித்தோ
ஏறும் அசட்டுச் துணிச்சலையும்...

ஒரு சந்தம் கிடைத்ததென்றால்
ஒரு சொல் கவர்ந்ததென்றால்...

அதைக் கொண்டே
ஒரு காவியம் இயற்றிவிடலாம் எனும்
குருட்டு நம்பிக்கையையும்

நிச்சயம்
காதல் உணர்வும்
கவிதை மனமும் மட்டுமே தரும்.

அதனால்தான்
காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காதும்..

குப்பைகள் நிறைந்தபோதும்
கவிதையும் வீரியம் குறையாதும்

தொடர்ந்து கொண்டிருக்கிறது "என்றேன்

இதனை ஒப்புக் கொண்டானா
எனத் தெரியவில்லை
ஆனால் பதில் கேள்வி எழுப்பவில்லை

7 comments:

K. ASOKAN said...

யதார்த்தமான வரிகள் பாராட்டுகள்

ஸ்ரீராம். said...

அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காதும்..//

காதலிக்கும் போது ஏற்பட்ட சில பசுமையான இனிய சம்பவங்கள் மனதைவிட்டு என்றுமே மறக்க முடியாமல் இருப்பதால் மட்டுமே, ’காதல் என்றும் தோற்காது’ என தோற்றுப்போன காதலர்கள் நினைத்து மனதளவில் சற்றே ஆறுதல் அடைந்து வருகிறார்கள்.

காதலில் வெற்றி பெற்றவர்களுக்குத் தெரியும் ..... உண்மையில் தோற்றுப்போனது நாம் மட்டுமே என்று.

//குப்பைகள் நிறைந்தபோதும்
கவிதையும் வீரியம் குறையாதும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது//

குப்பைகள் நிறையும் போது வீர்யம் குறையாது என்பது உண்மையே. மூக்கைப் பிடித்தபடி குப்பைத் தொட்டியை வெகு வேகமாகக் கடப்பவர்களுக்கு மட்டும் தான் அதன் தாக்கம் தெரியக்கூடும். குப்பையைக் கொட்டிச் சென்றவர்களுக்கு தெரிய நியாயம் இல்லைதான்.

-=-=-=-

எது எப்படியோ ...... ‘காதலும் கவிதையும்’ என்ற தலைப்பும், தங்களின் இந்த ஆக்கமும், ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து, ஏதேதோ எடுத்துரைக்க முடியாத எண்ணங்களை எனக்குள் நினைக்க வைக்கிறது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன்.

நெல்லைத்தமிழன் said...

//காதலர்கள் தோற்றபோதும்
காதல் என்றும் தோற்காது.//
புதுசு புதுசா இளைஞர்கள் வந்துகொண்டிருப்பதால் அவங்களும் இதுல இறங்கி வெற்றிபெற்று தோல்வி பெறுவதாலோ இல்லை தோல்வி பெற்று வெற்றி பெறுவதாலோ, இந்தக் கதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள், தாங்கள் அந்தச் சமயத்தில் செய்த முயற்சிகளை எண்ணி மகிழ்ச்சி கொள்வார்களா, அல்லது இதுக்கா இத்தனை களேபரம் என்று நினைப்பார்களா இல்லை எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று எண்ணுவார்களா?

Post a Comment