Thursday, January 9, 2020

யானைக் கொரு காலம் வந்தா..

நான் மதுரை வாசி.பிறந்து வளர்ந்ததெல்லாம்
மதுரையை ஒட்டிய பழைமையில் ஊறிய
ஒரு சிறு கிராமத்தில்தான்.

பச்சைப் பசேலென வயல்வெளி. நீர் நிறைந்த குளம்
காலையும் மாலையும் ஒலிபெருக்கியை விட அதிகச்
சப்தமெழுப்பி விடியலுக்கும் மாலைக்கும்
கட்டியம் கூறும் பறவைகள்..
திண்ணையுள்ள எப்போதும் திற்ந்தே
இருக்கும் வீட்டு வாசல்கள்.
சாப்பாட்டு வேளையில் எங்கிருக்கிறோமே அங்கேயே
உணவு அருந்தித்தான் ஆகவேண்டும் எனக்
கட்டாயப் படுத்தும் உறவுகள்....

இப்படி இப்படியென சொல்லிச் சொல்லிப்
பெருமைப் பட்டுக் கொள்ளும்படியாக நிறைய
இருந்தாலும்.....

சினிமா விஷயத்தில் ஒரு பெரும் குறை உண்டு
ஊருக்கு வெளியே வயல் நடுவே
ஒரே ஒரு டூரிங் டாக்கிஸ் மட்டும் உண்டு.
அந்த டூரிங் டாக்கீஸ் ஓனரும் உள்ளூர் காரர்
என்பதால் சமூகத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு
தனக்கும் உண்டு எனக் காட்டிக் கொள்ளவோ
என்னவோ அதிகமாகப் புராணப் படங்களையும்
அதிகப் பட்சம் குலுங்கிக் குலுங்கி அழும்படியான
படங்களையோ தான அதிகம் போடுவார்.
அதுமாதியான படங்கள்தான் எங்கள் ஊரிலும்
அதிகப் பட்சமாக நானகு நாட்கள் ஓடும்.

அதிலும் எங்கள் வீட்டுப் பெரியவர்கள்
ரொம்ப ரொம்பச் சுதாரிப்பானவர்கள்..
அந்த நாலு நாளில் படத்தைப் பார்த்தவர்கள்
கதை நல்லா இருக்கு கட் எதுவும் இல்லை என
சான்றிதழ் எல்லாம் கொடுத்தால் தான்
படம் போவது குறித்து யோசிப்பார்கள்.
அப்படி அவர்கள் விசாரித்து விசாரித்து
மாதம் ஒரு படம் போனாலும் படிக்கிற பையன்
அடிக்கடி படம் பார்க்கக் கூடாது எனச் சொல்லி
கால் பரிட்ச்சை அரைப்பரிட்ச்சை லீவில் ஒரு படமும்
கொஞ்சம் மனசு வந்தால் முழுப்பரிட்சை லீவில்
இரண்டு படமும் பார்க்க அனுப்புவார்கள்

எங்களுக்கு அதுவே போதும் எனத்தான் படும்
ஆனால் எங்கள் தெருவிலேயே ஊரில்
எட்டாம் வகுப்புக்கு மேல் இல்லாததால்
டவுனில் சென்று படிக்கும் பையன்கள்
வீட்டுக்குத் தெரியாமல் எப்படியோ
பணம் புரட்டி புதுப் படம் பார்த்து எங்களை
நாலு நாள் கெஞ்சவிட்டு இரண்டு மணி நேரப்
படத்தை நாளோன்றுக்கு ஒரு மணி நேரம்
என மூன்று நாள் சொல்லுகையில் தான்
வெறுத்துப் போவோம்

கதை கேட்கிற ஆர்வம் அதிகம் இருக்கிற
அதே வேளையில்
அவர்கள் மீதான பொறாமையும் என்று நாமும்
இப்படி ஒரு நாள் டவுனில் போய்
பக்கா தியேட்டரில் புதுப்படம் பார்ப்போம் என்கிற
ஏக்கமும் ஆதங்கமும் அதிகமாகவே பெருகும்

இப்படிப் பட்டச் சூழலில் ஒருநாள்....
எங்கள் நெருங்கிய  உறவினர் வீட்டில்
ஒரு அசுப காரியம் காரணமாக வெளியூர்
செல்ல நேர்ந்ததால் ஒரு நூறு ரூபாய்க்குக்
குறையாதபடி அறிவுரைகள் சொல்லி எதற்கும்
இதைக்கைக்காவலுக்கு வைத்துக் கொள் எனச் சொல்லி
ஒரு ரூபாயும் கொடுத்துப் போனார்கள்.

எப்போதுதான் விடியும் என பையில் இருந்த
அந்த ஒரு ரூபாயை ஆசையாய் தடவிப் பார்த்தபடி
இருந்த நான் விடிந்ததும் அந்த டவுனில் படிக்கும்
பையனைச் சந்தித்து என ஆசையைச் சொல்ல...
அவனும் "இன்று வெள்ளிக் கிழமை நான்கு காட்சிகள்
நிச்சயம் இருக்கும்.படம் வந்து முப்பது நாளும்
ஆகிப் போச்சு எனவே எழுபது பைசா டிக்கெட்
உறுதியாய் கிடைக்கும்.. போகையில் பஸ்ஸில்
போனாக் கூட வரும்போது கண்மாக்கரை
சுருக்கு வழியில் வந்து விடலாம் "எனச் சொல்லி
அழைத்து போனான்.

இவ்வளவு விளக்கமாக என கதையைச் சொல்லியபின்
என் ஆர்வம் குறித்து விரிவாக ஒரு பத்தி எழுத
வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

பஸ்சை விட்டு இறங்கும் முன்பாகவே வெளியே
எட்டிப் பார்க்க கூட்டம் இல்லாமல் இருந்ததும்
வாட்ச்மென் மட்டும் ஒற்றைக் கதவை மட்டும்
திறந்து வைத்து உட்கார்ந்திருந்ததும்
நிச்சயம் ஷோவும் இருக்கும் டிக்கெட்டும் கிடைக்கும்
என்கிற நம்பிக்கை வர குஷியாகிப் போனேன்

இருவரும் பஸ்ஸை விட்டு இறங்கி டிக்கெட்
கவுண்டர் அருகில் போய் நின்றோம்
கவுண்டர் இன்னும் திறக்கவில்லை நேரம்
இருக்கிறது போல நினைத்துக் கொண்டிருக்க
எங்களை பார்த்த வாட்ச்மென் " தம்பிங்களா
இன்னைக்கு காலைக் காட்சி இல்லை
மதியக் காட்சிதான் உண்டு அப்ப வாங்க "
எனச் சொல்லிக் கொண்டிருக்குக் போதே
நான்கு கார்கள் வாசல் பக்கம் வர வாட்ச்மென்
அவசரம் அவசரமாக ஓடி முழுக் கதவையும்
திறக்கத் துவங்கினார்.

அந்த நான்கு கார்களிலும் பெரியவர்களும்
சிறியவர்களும்  பெண்களும் இருந்தார்கள்.
அவர்கள் ஆடை அலங்காரங்களைப் பார்க்க
சினிமாவுக்கு வந்தவர்களைப் போலத்தான்
எனக்குப் பட்டது..

நான் மெல்ல வாட்ச்மெனை நெருங்கி
"படம் இல்லைன்னு சொல்றீங்க..
இவங்களைப் பார்த்தா சினிமாவுக்கு வந்தது
போலத் தானே தெரியுது " எனக் கேட்டே விட்டேன்

அவர் என்ன நினைத்தாரோ எங்களை
"இந்தப் பக்கம் வாங்க "என கிழக்குச் சுவரோரம்
கூட்டிப் போய் " தம்பிங்களா இவங்க முதலாளிக்குச்
சொந்தக் காரங்க.. ஊரில இருந்து வந்திருக்காங்க
இவங்களுக்காக மட்டும்தான் இன்னைக்கு
காலை ஷோ..வெள்ளிக் கிழமை நாலு ஷோவை
போனவாரமே எடுத்தாச்சு " என்றார்.

எனக்கு ஷோ இல்லாதது கூடப் பெரிதாகப்
படவில்லை. ஒரு இருபது பேருக்காக
ஒரு படத்தை ஓட்டுவதென்றால் எவ்வளவு செலவு
அவ்வளவு செலவு செய்கிற அளவுக்கு இவர்களுக்கு
அப்படியென்ன வசதி வாய்ப்பு என எண்ணி
மலைத்துப்ம்போனேன்

பின் வெகு நாட்களுக்கு ஒரு தியேட்டரில்
எத்தனை சீட்  இருக்கும் அதில் 40 பைசா
எவ்வளவு 70 பைசா 80 பைசா எவ்வளவு
மாடியில் ஒரு ரூபா சீட் எவ்வளவு
ஒரு ரூபா ஐம்பது பைசா எவ்வளவு
என எல்லாம் பெருக்கிப் பார்த்து நிச்சயம்
ஒரு நாள் நாமும் இப்படி முழு ஷோவையும்
நம் ஒரு குடும்பத்திற்கு என மட்டும் என
ஒதுக்கிப் பார்க்கவேண்டும் என தீர்மானிக்கத்
துவங்கிவிட்டேன்....

இந்தத் தீர்மானம் எத்தனை நாள் இருந்தது
கால வெள்ளத்தில் எப்படிக் கரைந்து போனது\
என்பது எல்லாம் என் நினைவில்
நேற்று வரை இல்லை.

நேற்று நண்பர்களுடன் டவுனில் இருக்கையில்
மாலையில் மீண்டும் டவுனில் வேலை இருப்பதால்
வீடு போய் திரும்புவது வெட்டி அலைச்சல்
அதற்குப் பதில் இங்கு பக்கம் உள்ள ஏ.சி தியேட்டரில்
ஏதாவது படம் பார்க்கலாம்.படம் எவ்வளவு
டப்பாவாக இருந்தாலும் பரவாயில்லை.
தியேட்டர் மட்டும் நல்லதாகப் பார்த்துப்
போவோம்..என முடிவெடுத்து ஒரு நல்ல தியேட்டர்
பார்த்துப் போனோம்..

நாங்கள் போவதற்குள் படம் போட்டிருந்தார்கள்
தட்டுத் தடுமாறி ஐந்து பேரும் சீட்டைத் தேடி
உட்கார்ந்துவிட்டோம்.படத்தையும் ஒருவழியாய்
இரசிக்கவும் துவங்கிவிட்டோம்.

இடைவேளைக்கு லைட்டைப் போட்டார்கள்
நான் மகிழ்ச்சியில் ஆஹா...ஹா என சப்தமாகக்
சிரிக்கத் துவங்கிவிட்டேன்
இவ்வளவு பெரிய சப்தம் என்னை
அறியாமல் வந்தது என எனக்கே ஆச்சரியமாக
இருந்தது..

வெளியில் ஸ்னாக்ஸ் விற்றுக் கொண்டிருந்த
பையன் கூட என்னவோ ஏதோ என
எட்டிப் பார்த்துப் போனான்.

அவனுக்கு எப்படித் தெரியும்
என ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய கனவு
மிக மிக எளிதாய் இப்படி எதிர்பாராத விதமாய்
நிறைவேறி இருக்கிறது என்று....

"என்ன விஷயம் இப்படித் திரும்பத் திரும்ப
இப்படி லூசுப் போல தொடர்ந்து
சிரிக்கிறாய் " என எரிச்சல்படத் துவங்கினர் நண்பர்கள்

"வாருங்கள்  காஃபி சாப்பிட்டபடிச் சொல்கிறேன்..
என அவர்கள் ஐவரையும் தியேட்டரை விட்டு
கேண்டீன் அழைத்து வந்தேன்

மொத்த தியேட்டரும் இப்போது காலியாக இருந்தது

10 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல சுவாரஸ்யமான அனுபவம். எதிர்பாராத தருணத்தில் நாம் இதுநாள் வரை எதிர்பார்த்திருந்த ஒன்று கிடைத்து விட்ட சந்தோஷத்தை முடிவில் அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள். தங்கள் அனுபவ கட்டுரை நன்றாக உள்ளது. ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி..

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகளுடன் நல்லதொரு அனுபவம் ஐயா...

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவும் வாழ்த்தும் அதிக மகிழ்வளிக்கிறது.மிக்க நன்றி...

G.M Balasubramaniam said...

ஆரம்பகால சினிமா அனுபவங்கள் நினைக்கநினைக்க இனிக்கும்

Yaathoramani.blogspot.com said...

ஆம் நாற்பதாண்டு காலமானாலும் அன்றைய சினிமாவுடனான நமது நெருக்கம் புரிந்து கொள்ளமுடிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

வெகு ஸ்வாரஸ்யமான அனுபவம். ஐந்து பேருக்காக ஒரு ஷோ...

நானும் தில்லி நண்பர் பத்மபநாபனும் மட்டும் - இரண்டு பேர் மட்டுமே - தில்லியில் ஒரு படம் பார்த்தோம். என் வலைப்பூவில் அது பற்றி எழுதி இருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது - உங்கள் பதிவு பார்த்து!

Yaathoramani.blogspot.com said...

ஆம் சட்டென இடைவேளைக்கான லைட் போட்டதும்தான் ஐந்து பேருக்காக படம் ஓடிக் கொண்டிருக்கிறது என அறிய ஒரு ஆனந்த அதிர்ச்சி...அந்தப் படம் கூட அந்தத் தியேட்டரில் எடுத்ததுதான்...வாழ்
த்துக்களுடன்...

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான அனுபவம்.

இந்த மாதிரி தனியாய் படம் பார்க்கும் காட்சி ஒன்று தம்பிக்கு எந்த ஊரு படத்திலும் வரும்! அது நினைவுக்கு வருகிறது.  

Yaathoramani.blogspot.com said...

ஆமாம்..என்க்கும் அந்த நினைவு வந்தது..வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Post a Comment