Saturday, January 31, 2015

எறும்பூற

"முயலாமைக் கதையில் "
ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே
யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   கூட
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க
சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே 

முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு
மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
முயன்றே  அடைந்து உயர்வோம்

Friday, January 30, 2015

புதிய பாதை

என்னுடல்
என் மனம்
என் சுகம்
இதைக் கடந்து

சமையலறை
படுக்கையறை
வாசல்படி
இதைக் கடந்து

என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்து

எனது தெரு
எனது ஊர்
என் நாடு கடந்து

என்பணி
என் சகா
என் வர்க்கம் கடந்து..

இப்படி

எல்லாவற்றியும் கடந்து கடந்து
அனைத்தையும்
மிகச் சரியாகக்
கடந்துவிட்டதாக எண்ணி
மகிழ்ந்து அமர்கையில்
எதிரே

"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை

குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது

Thursday, January 29, 2015

நேர் மற்றும் எதிர்மறை

" எங்கும் இல்லை
 எதிலும் இல்லை
 எப்போதும் இல்லை
 எனவே
 நம்பிக்கைக் கொள்ளல்
 மடத்தனம் " என்றான் இவன்

"சரி " என்றேன் நான்

" எங்கும் இருக்கிறது
  எதிலும் இருக்கிறது
  எப்போதும் இருக்கிறது
  எனவே
  நம்பிக்கை கொள்வதே
  அறிவுடமை" என்றான் இவன்

"அதுவும் சரி " என்றேன் நான்

 உடன்
 முரண் கருத்துக் கொண்ட
 இருவரும் ஒன்றாகி
 என்னுடன் முரண்படத் துவங்கினர்

" இரண்டும் சரியாய் இருக்க
 எப்படிச் சாத்தியம்  ?
 ஒன்று மட்டுமே
 நிச்சயம் சாத்தியம்
 அது எது ? " என
 இருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்

 இது எதிர்பார்த்ததுதான்
 எனவே நான் சங்கடப்படவில்லை

 இருவரையும் இமை மூடச் சொல்லி
 "இப்போது என்ன தெரிகிறது " என்றேன்

 முன்னவன்
 மெல்லச் சிரித்தபடி
 "எதுவும் இல்லை " என்றான்

 பின்னவன்
 "இருள் தெரிகிறது " என்றான்

 இப்போது
 நான் மெல்லச் சிரித்தேன்

 இருவர் முகத்திலும்
 தெளிவு படரத் துவங்கியது

கீறல் ...

திசை மாறாது
பொழுது மாறாது
மிக இயல்பாய்
இருளுண்டு
அனைத்தையும்
விளங்கக் காட்டிப் போகும்
அனைத்தையும்
இயங்கவைத்துப் போகும்
அந்தக் கதிரவனினும்

திசைக் கணக்கின்றி
பொழுதுக் கணக்கின்றி
தாறுமாறாய்
இருள் கூட்டிக் காட்டி
அனைத்தையும்
மிரளவைத்துப் போகும்
அந்த ஒரு நொடி மின்னலே

மனம் கீறிப் போகிறது
அந்த நொடியினை
மறக்காது செய்து போகிறது

புரியாதே
பம்மாத்துக் காட்டும்
சில அற்புத
வசன கவிதைகள் போலவும்...

Wednesday, January 28, 2015

வரமா சாபமா ?

அளவு பொருத்து
மருந்தாகவும்
விஷமாகவும்
மாற்றம் கொள்ளும் அமுதாய்

சூழல் பொருத்தே
வரமாகவும்
சாபமாகவும்
மாற்றம் கொள்கிறது தனிமையும்..

தன்னுள்
ஆழம்போகத் தெரிந்தவனுக்கு
அற்புத முத்தெடுத்துத் தரும்
அந்த அதி அற்புதத் தனிமையே

தன் உள்
குப்பையைக் கிளறுவோனுக்கு
நாற்றத்தையும் சிதைவினையும்
தானமாகத் தந்து போகிறது

கூட்டத்திலும்
தனித்தும் விழித்தும்
இருக்கத் தெரிந்தோனுக்கு
தலைமையையை பரிசளிக்கும் தனிமையே

தனிமையிலும்
பரபரக்கும் மனத்தோனுக்கு
பதட்டத்தையும் வெறுமையையும்
சொத்தாக்கிச் சிதைத்துப் போகிறது

நிறமற்று
நிலம் வீழும் மழை நீர்
நிலம் பொருத்து
நிறம்பெறும் தன்மை போல்

தனிமைக்கும்
தனித்த குணமில்லை
மனம் பொருத்தே
தன்முகம் காட்டிப் போகிறது

ஆம்
தனிமை
வரமும் இல்லை
சாபமும் இல்லை

ஆம்
தனிமை
வரமும்தான்
சாபமும் தான்

Monday, January 26, 2015

குடியரசு தினம் ( 2 )














































இந்த 66 வது குடியரசு தினத்தை
வித்தியாசமாக ஒரு  தினமாக  சிறிய கிராமத்தில்
கொண்டாடுவது என முடிவு
செய்திருந்தோம்

அதன் படி திருப்பரங்குன்றம் ஊராட்சி
ஒன்றியத்தைச்சேர்ந்த வலயப்பட்டி என்னும்
கிராமத்தைத் தேர்ந்தெடுத்து
அங்கு ஒரு ஆரம்பப்பள்ளியில் கொடியேற்றவும்
அப்படியே வாசன் கண் மருத்துவமணையுடன்
இணைந்துஅந்தப் பள்ளி மாணவர்களுக்கு
இலவச கண்பரிசோதனைமுகாமும் நடத்துவதாக
முடிவு செய்து அதைச் சிறப்பாகச்
செய்து முடித்தோம்

தற்போது அந்தப் பகுதியில் காய்ச்சல் பரவும்
அறிகுறித் தெரிவதாகத் தகவல் அறிய நிலவேம்புக்
கசாயம் வழங்கவும் முடிவு செய்து அதைக்
அக்கிராமத்தில் அனைவருக்கும்
அதைக் காய்ச்சி வழங்கினோம்

மக்களிடம் அதற்கு அமோக வரவேற்பு இருந்தது
எங்களுக்கும் அது அதிக மன நிறைவு தந்தது

அனைவருக்கும் இனிய
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


குடியரசுதினச் சிந்தனைகள்

நிராயுதபாணியான மிக மோசமான எதிரியையும்
இன்று போய் நாளை வா எனச் சொல்லிய
அவதாரப் புருஷர்களும்...

பகைவனுக்கருள்வாய் என ஆண்டவனை வேண்டும்
பரந்து விரிந்த மனம் படைத்த கவிஞர்களும்...

தன் நாட்டினுள் நுழைய விஸா வழங்க மறுத்த
அந்த நாட்டின் ஜனாதிபதியையே குடியரசு தின
விழாவினுக்கு விருந்தினராய் அழைக்கும்
மேன்மையும்...

நமது நாட்டில்தான் சாத்தியம் எனும்
பெருமிதத்தோடு...

அனைவருக்கும் இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்கள்

(இன்னும் நமக்கேயான பெருமிதங்களைப்
பின்னூட்டத்தில் தொடரலாமே )