Friday, January 14, 2022

பொங்கல் நல்வாழ்த்துகள்.

 


வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி.

காளைக்கு கஷ்டம் தெரியக் கூடாதென்பதற்காக

அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.


மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத் தொழில்ல நீதான் முன்னாடி. நான் பின்னாடிதான்.

முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.


அடடா.. இந்த மனித ஜாதிதான் எவ்வளவு மேலானது

என்று நினைத்து சிலிர்த்துப் போனது காளை.


விவசாயி தொடர்ந்தார்.

நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.


அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.


காளைக்கு தலைச் சுற்றியது. எவ்வளவு நேர்மை..!

பாதிக்குப் பாதி பங்கு தர யாருக்கு மனசுவரும்..!


பாதிப் பாதின்னா எப்படி பங்கு வைக்கலாம்? நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.


முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!

பெருமிதமாய் பார்த்தது காளை.


விதை விதைத்து

நாற்று நட்டு சில காலத்தில் பச்சைப் பசேலென்று மாறியிருந்தது வயல்.

மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.

விவசாயியை பார்த்தது.


முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.

இதுல அப்புறமா ஒன்னு வரும்.

அதுமட்டும் எனக்கு.

சரியென்று தலையாட்டியது காளை.


கொஞ்சநாட்களில் நெற்கதிர்கள் குதிரை வால் போல

விளைந்து தரை பார்த்துக் கிடந்தன.


அறுவடை நாள் வந்தது.

முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.

பின்னர் வந்த நெல் விவசாயிக்கு.


மாடு கோர்ட்டுக்கா போக முடியும்..?

பாகப் பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.

கவலைப்படாதே! நெல்லிலும் பங்கு தர்றேன்.

அதிலும் நமக்கு பாதிப் பாதி.

சோகத்துடன் தலையாட்டியது காளை.


நெல்லை உலர வைத்து

அரைத்துப் புடைத்ததும்

உமியும் தவிடும் முன்னால் வந்தது.

அது காளைக்கு.

பின்னால் வந்த முத்து முத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.

இந்த பங்கீட்டிலும் நியாயமில்லை யென்று கண்ணீர் விட்டது காளை.


அழுவாதே. இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.

.. சரியா? என்றார்

விவசாயி.


அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,

அரிசியை நோக்கிச் சென்றது.


பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.

அடுத்து வருவதுதான் எனக்கு.

சோகத்துடன் தலையாட்டியது காளை.


அரிசியை சோறாக்கி வடித்தபோது

முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு.

அடுத்து வந்த சோறு மனிதனுக்கு.

காளை முரண்டு பிடித்தது.


இந்த முறை,

முன்னால மனிதனுக்கு

பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சியழுதது.


சரியென்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.

பொங்கல் திருவிழா வந்தது.


முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.

அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்.. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!


படித்தேன்.பகிர்ந்தேன்👍👍

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

பாவம் வாயில்லா ஜீவன்கள். இப்போதெல்லாம் தெருக்களில் மேய விட்டு பேப்பர், குப்பைத் தொட்டிகளில் எல்லாம் சாப்பிடுகின்றன. பரிதாபம். ப்ளாஸ்டிக் கூட அதன் வயிற்றில்!

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பாவம்.. இந்த வாயில்லா ஜீவன்களின் ஆசைகளை நிறைவேற்றாத மனிதன் சுயநலவாதிதான். என்ன செய்வது? இந்த சுயநலவாதிகளுடன் வாழ்வதை அதுவும் இறைவனிடம் வரமாக பெற்று வந்திருக்கிறதே என்ற எண்ணமும் வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

மனிதன் என்னும் சுயநலவாதி.... பகிர்வினை ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Post a Comment