Showing posts with label சிறுகதை கதையாகவே கொள்வோம். Show all posts
Showing posts with label சிறுகதை கதையாகவே கொள்வோம். Show all posts

Friday, July 4, 2014

துரோகம் ( 2 )

நான் முதன் முதலாக ராகவனைச் சந்தித்தது
இன்றிலிருந்து ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு
மேல் ஆகி இருந்தாலும் கூட அந்த நேரமும்
நிகழ்வும் இன்னும் என்னுள் பசுமையாகத்தான்
இருக்கிறது

அப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும்
பள்ளி இறுதி வகுப்பு அப்போதுதான் கல்லூரியில்
புதுமுக வகுப்பு சேர்ந்திருந்த நேரம்
வேட்டிக்கு மாறி வேட்டியும் மிகச் சரியாக
மனதளவில் ஒட்டாது டிராயரையும் முழுவதும்
விட்டு விடாது மிகச் சரியாகச் சொன்னால்
விடலையாய் அனைத்து விஷயத்திலும்
இருந்த காலம் அது

மதுரையை ஒட்டி இருந்த ஜாதிவாரியாக
தெருப்பெயரைக் கொண்டிருந்த அந்த ஊரில்
கல்லூரிப் படிப்புப் படிப்பவர்கள் மொத்தமே
பத்து பதினைந்து பேர்தான் இருப்போம்
அப்போது கல்லூரியில் படிப்பவர்கள் என்பதால்
ஊரில் எங்களுக்கு இருந்த  மதிப்பு தனி

அந்த ஒன்பது மணி டவுன் பஸ்ஸில்
பின் நெட்டுச் சீட்டில் எங்களைத் தவிர
யாருமே உட்கார மாட்டார்கள்.பஸ் ஊரை விட்டுக்
கிளம்பி கிரைம்பிராஞ்ச் போகிற வரை
நாங்கள் செய்யும் அலப்பறையை இப்போது
நினைத்தாலும் மனம் இளமைத் துள்ளல்
போடத்தான் செய்கிறது

இந்த இளமைத் துள்ளலாட்டம் எல்லாம்
வெளியில் மட்டுமே.வீட்டிற்கு வந்து வேட்டியைக்
கழற்றி டிராயரை மாட்டியதும் மீண்டும் பள்ளிச்
சிறுவனைப் போலாகி விடுவேன்

இது என்னுடைய இயல்பாய் இருந்ததா அல்லது
வீட்டில் என்னை வளர்ந்தவனாக அங்கீகரிக்காததாலா
என்கிற மனக்குழப்பம் இன்றுவரை  இருக்கத்தான்
செய்கிறது.

அதனாலேயே மாலை கல்லூரிவிட்டு வந்து வந்ததும்
கிணற்றடியில் முகம் கைகால் கழுவி விபூதி தரித்து
சாமியறையில் சொல்லவேண்டிய சுலோகங்களைச்
சொல்லிமுடித்து திண்ணைக்கு வருகையில் அம்மா
எனக்குத் தின்பதற்கு எதையாவது வைத்திருப்பாள்
அனேகமாக கூடுமான வரையில் வறுத்தகடலையாகவோ
அல்லது ஏதாவது சுண்டலாகவோ இருக்கும்

அதைக் கொறித்தபடி அம்மாவின் மடியில்
படுத்தபடி "அப்புறம்,,,"என்றால் போதும்
அம்மா எனக்கு ஆயிரம் ஊர் விஷயம் வைத்திருப்பாள்
அல்லது நான் கல்லூரி விஷயம் ஏதாவது
சுவாரஸ்யமாக வைத்திருப்பேன்.அந்தப் பொழுது
எத்தனை சுவாரஸ்யமானது சுகமானது என்பது
அனுபவித்துப்பார்த்தவர்களுக்குத்தான் புரியும்

அன்று அம்மாவிடம் சொல்வதற்கு என்னிடம்
விஷயம் எதுவும் இல்லை.ஆனால் அம்மாவிடம்
ஏதோ ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது
என்பதை அவளுடைய பரபரப்பான அசைவுகளில்
இருந்தும் அவள் அடிக்கடி தெருவின்
வடக்குக் கோடியைப் பார்ப்பதிலிருந்தும்
புரிந்து கொண்டேன்

மெல்ல மெல்லமாலை மறைந்து இருள் சூழத் துவங்க
தோப்புபோல் இருந்த எதிர்ச்சந்து மரங்களில்
காகங்கள் கரைந்தபடி அடையத் துவங்கியது

மூணாவது வீட்டு சுப்புப் பாட்டி தனது தலை
முக்காட்டைச் சரிசெய்தபடி அவசரம் அவசரமாக
எங்கள் வீட்டு கீழ் திண்ணையில் அமர்ந்தபடி
"அதோ வந்துட்டாங்க போல இருக்கே  "என்றாள்

நானும் யார் என ஆவலுடன் திரும்பிப் பார்க்க
வடக்குக் கோடியில் ஒரு இரட்டை மாட்டு வண்டியும்
ஒரு கூட்டு வண்டியும் எங்கள் தெருவில் நிதானமாக
நுழைந்து கொண்டிருந்தது ஒரு நிழற்படம்போல் தெரிந்தது

(தொடரும் )

Friday, March 28, 2014

மூடுபனி ( 5 )

நம்பிக்கை இல்லாதவற்றில் சில ஊசலாட்ட
சிந்தனையின் காரணமாக நம்பிக்கை
வந்து விடக்கூடாதுஎன்பதற்காகவும்
,சிலர் சில விஷயங்களைக்
கூடுதலாகத் தெரிந்து நம்மை குழப்பிவிடக்கூடாது
என்பதற்காகவும் நம்பிக்கையற்ற விசயங்களில்
கொஞ்சம் கூடுதல் விவரங்களைத்
தெரிந்து வைத்திருப்பேன் எப்போதும்.

அந்த வகையில் என் ஜாதக விஷயத்திலும்
நான் தேவையான சில கூடுதல் தகவல்களைத்
தெரிந்து வைத்திருந்தேன்

அதன்படி எனக்கு என் நட்சத்திரம்,ராசி,லக்னம்
மற்றும் மற்ற கிரங்கள் இருப்பு எல்லாம்
எனக்கு எப்போதும் அத்துப்படி

மிகச் சரியாக பிறந்த ஊர் பிறந்த தேதி,நேரம்
முதலாவைகள் இல்லாமல் லக்னம்,நட்சத்திரம்
முதலானவைகளை கண்டு பிடிக்க முடியாது
என்பதுவும் எனக்குத் தெரியும்

இந்த நிலையில் என்னையே சிறிது நேரம்
ஆழமாகப் பார்த்த சோமு அவர்கள்
"நீங்கள் புனர்பூச நட்சத்திரமாக,மிதுன ராசியாக
ரிஷப லக்னமாக இருக்கக் கூடும் " எனச்
சொன்னது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது

இப்படி சிறிது நேர உற்றுப் பார்த்தல் மூலம்
சட்டென இப்படி ஜாதக விவரங்களை மிகச் சரியாகச்
சொல்கிறார் என்றால் இவரிடம் ஏதோ ஒரு வித்தை
அல்லது ஒரு சூட்சும அறிவு இருக்கவேண்டும் என
எனக்கு நிச்சயமாகப் பட்டது என்றாலும்...

 ஹிப்னாடிசத் தூக்கத்தில்
என்னை இருக்க வைத்த சமயத்தில் என்னிடமிருந்தே
இந்தத் தகவலைத் தெரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது
என பகுத்தறிவும் ஒரு எச்சரிக்கை செய்து போக
நான் அதிகமாக என ஆச்சரியத்தை வெளிப்படுத்திக்
கொள்ளாது "ஆம் நீங்கள்  சொல்வது சரிதான் "
என மட்டும் சொல்லிவைத்தேன்

அவர் மிக லேசாகச் சிரித்தபடி " இது மட்டும் இல்லை
நீங்கள் ஒரு பகுத்தறிவு வாதி போல வெளியே
காட்டிக் கொள்வது கூட வெறும்
 நடிப்புத்தான் மாப்பிள்ளை
உண்மையில் நீங்கள் அப்படி இல்லை
உங்கள் ஜாதக அமைப்பு அப்படி "என்றார்

இந்த சமயத்தில் டிரைவர் அறைக்குள் வந்து சேர
எங்கள் உரையாடல் தடைபட்டுப் போனது

நாங்கள் அவர் அவர்களுக்கான உடமைகளை
எடுத்துக் கொண்டு திருமண மண்டபம் வந்து சேரவும்
"கெட்டிமேளம்...கெட்டிமேளம் " என
திருமண மேடையில் இருந்தவர்கள் குரல் கொடுக்க
அட்சதையையும் பூக்களையும் கைகளில் ஏந்தியபடி
அனைவரும் மேடை நோக்கி நகரவும் மிகச் சரியாக
இருந்தது

சோமு அந்தக் கூட்டத்தோடு மேடை நோக்கி நகர
நான் காலியாக இருந்த ஒரு இருக்கையில்
அமர்ந்து கொண்டேன்

"நீங்கள் உண்மையில்  பகுத்தறிவு வாதி இல்லை
உங்கள் ஜாதக அமைப்பு அப்படி "என்கிற வார்த்தை
மட்டும் மீண்டும் மீண்டும் என்னுள் ஒரு பெரிய
தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது

காரணம்--
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால்
ஏறக்குறைய இதே வார்த்தையை  தீர்மானமாக
வேறு விதமாகச் சொன்ன எனது பெரியப்பாவின்
மறக்க முடியாத நினைவுகளும்,,,,
அந்த நிகழ்வுகளும்தான்

(தொடரும் )

Tuesday, March 25, 2014

மூடுபனி ( 4 )

முன்பதிவிற்கு
 http://yaathoramani.blogspot.in/2014/03/3.html

இந்த  ஒரு இரவுப் பொழுதுதான்.
எப்படியோச் சமாளித்து இவரிடம் இருந்து
தப்பப் பார்க்கவேண்டும் அதுவரை
மௌனம் காப்பதே சாலச் சிறந்தது
என முடிவெடுத்து
"சரி எனக்கு தூக்கம் வருகிறது
காலையில் சந்திப்போம் "எனச்  சொல்லிவிட்டு
எனக்கென இருந்த மற்றொரு அறையில்
போய்ப்படுத்துக் கொண்டேன்

இரவெல்லாம் பாதாள பைரவி முதல் எத்தனை
மந்திரவாதிப் படங்கள் உண்டோ அத்தனையும்
கனவில் வந்து பயமுறுத்திப் போனது

ராஜ நளாவுக்குப் பதில் சோமுவே அத்தனையிலும்
மந்திரவாதியாக வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார்
பயந்து முழிக்கவும் பின் அலுப்பில் என்னையறியாது
தூங்கவும் என மாறி மாறி எப்படியோ அந்த இரவு
ஒருவழியாகக் கடந்து தொலைந்தது

மறு நாள் காலையில் அலுப்பில் தூங்கிக்
 கொண்டிருந்த என்னை சோமுதான்
 தட்டி எழுப்பினார்

நான் விழித்துப் பார்க்கையில் நேற்றைப் போலவே
குளித்து முடித்து திருநீறு காவி வேட்டி அணிந்து
சிவப்பழமாக்த் தெரிந்தார்.

எதிரே நேற்றைப் போலவே பெட்டித்
 திறக்கப்பட்டு பூஜை சாமான்கள்
முன்னர் பரப்பிவைக்கப்பட்டிருந்தன

அந்தப் பெட்டியின் உள்புறம் மேல்பகுதியில்
காவி உடையணிந்து சோமுவைப்பொலவே
முடிவளர்த்து நெற்றி நிறைய திருநூறு
அணிந்திருந்தபடி தியான நிலையில்
ஒருவரின் திரு உருவப்படம் இருந்தது

சாயலில் வட நாட்டவரைப் போல இருந்த அவரின்
முகத்தில் தெரிந்த ஆழந்த அமைதியும்
அருளொளியும் சட்டென என்னுள் பரவி என்னை
என்னவோ செய்வது போலிருந்தது

இந்தப் படத்தை எப்படி நேற்றுப் பார்க்காமல் போனேன் ?
பார்த்திருந்தால் மந்திரவாதிக் கனவுகள் வந்து
தொலைந்திருக்காதோ ?எனக்கும் தேவையில்லாத
பயமும் வந்திருக்காதோ என நான் நினைத்துக்
கொண்டிருக்கையில் "மாப்பிள்ளை சீக்கிரம்
குளித்து  முடித்து வாருங்கள்  மணி ஐந்தரையாகிறது
ஆறரை முதல்  எட்டுக்குள் முகூர்த்தம்.
அதற்குள் போகவேண்டும்.இல்லையெனில் நாம்
வந்தது பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்
நான் அதற்குள் பூஜையை முடித்துவிடுகிறேன் "
எனச் சொன்னபடி பெட்டியின் முன் அமர்ந்து
மந்திர உச்சாடனம் செய்யத் துவங்க்கிவிட்டார்

விடிந்ததாலா அல்லது அந்தத் திருவுருவப்படம்
 என்னுள் ஏற்படுத்திய நம்பிக்கையாலா
எனத் தெரியவில்லை
நேற்று இருந்த பயம் கொஞ்சம் குறைந்து
குழப்பம் மட்டும்மிஞ்சி இருப்பது போலப் பட்டது

குளித்து முடித்து வரவும் அவர் பூஜை முடிக்கவும்
மிகச் சரியாக இருந்தது

குளித்து ஈரத்துண்டுடன் வந்த என்னை அப்படியே
அந்த ஹாலில் தொட்டு நிறுத்தி
"மாப்பிள்ளை நீங்க தீவீர பகுத்தறிவு வாதி
தொழிற்சங்கத் தலைவர் என எல்லாம் உங்கள்
மனைவி சொல்லி உங்கள் மாமியார் மூலம்
நானும் தெரிந்து கொண்டேன்.
அது எல்லாம் அப்படியே இருக்கட்டும்
இப்போது இந்தத் திரு நீறைப் பூசிக் கொண்டு
சாமிகளைக் கும்பிட்டுக் கொள்ளுங்கள் "என்றார்

வெளியே வெளிச்சம் பரவத் துவங்கிருந்தது
எனக்குள்ளும் மெல்ல மெல்ல இவர் இனி எப்படிக்
கட்டுப்படுத்தமுடியும் என்கிற தைரியமும்
வளர்ந்திருந்தது

சட்டென கொஞ்சம் கோபம் தொனிக்கிற தொனியில்
"நீங்கள் என்னை எப்படி நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்என எனக்குத் தெரியவில்லை.
அது எனக்கு  அவசியமும் இல்லை
எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக
நம்பிக்கைக் கிடையாது
என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம் " எனச்
சொல்லியபடி என் பெட்டியைத் திறந்து எனது
உடுப்புகளை அணிந்து கிளம்பத் தயாரானேன்

அவரும் அதற்கு மேல் என்னைத் தொந்தரவு
செய்யவில்லை,அவரும் பெட்டியை
மூடி வைத்துவிட்டு வெளியில் இருந்த
துண்டு முதலானவைகளை
கைப்பையில் வைத்தபடி "அதுவும் சரிதான்
நம்பிக்கையில்லாதவர்களை தொந்திரவு
செய்யக் கூடாதுதான் " என லேசாக முனகியபடி
என்னைப்பார்த்தவர் திடுமென
ஏதோ ஞாபகம் வந்தவர்போல
"ஆமாம் மாப்பிள்ளை நேற்று பேசிக் கொண்டிருந்தபோது
பேச்சுவாக்கில் ஜாதகம் கூட பொருத்தம் பார்க்கத்
தரவில்லை எனச் சொன்னீர்கள் இல்லையா "என்றார்

"ஆமாம், அதற்கென்ன இப்போ " என்றேன் எரிச்சலுடன்

"அதற்கொன்றுமில்லை, தராவிட்டால் பரவாயில்லை
உங்களுக்காவது உங்கள் நட்சத்திரம்
லக்னம் தெரியுமா ?"என்றார்

"தெரியும் அதற்கென்ன இப்போ " என்றேன்

"கோபித்துக் கொள்ளவேண்டாம் .கார்
ஆறரைக்குத்தான் வரும் அதுவரை பொழுது போக
 எதையாவது பேசிக் கொண்டிருக்கலாமே
எனத்தான் கேட்டேன் "என்றார்

"அப்படியானால் சரி.பேசிக் கொண்டிருக்கலாம்
எனக்குப் பிரச்சனையில்லை.இப்படி லேசாக
நச்சத்திரம் திதி எதையாவது கேட்டு பலன் எதுவும்
சொல்லிக் குழப்பிவிடுவார்கள் எனச் சொல்லித்தான்
எனக்கு பன்னிரண்டு கட்டங்கள் முழுவதுமாக
மனப்பாடமாகத் தெரிந்தும் கூட ,என் மனைவி
எப்படி எப்படித் துருவிக் கேட்டும் கூட
 நான் சொன்னதில்லை
ஏனெனில் எனக்கு அதில் முழுவதுமாக
நம்பிக்கையில்லை"என்றேன் அழுத்தமாக

"அப்படியானால் ரொம்ப நல்லது. நீங்கள் அப்படியே
கொஞ்ச நேரம் அப்படியே  சோபாவில் அமருங்கள் "
எனச் சொல்லி எதிரே இருந்த ஈஸி சேரில் சாய்ந்தபடி
என்னை முன்போல தலை முதல் கால்வரை
உற்றுப்பார்த்தபடி மட மட வென அவர்
சொல்லிப்போன விஷயம் என்னை மீண்டும்
நிலை குலையச் செய்துவிட்டது

(தொடரும் )

Monday, March 24, 2014

மூடுபனி ( 3 )

மூடுபனி  ( 2 )
http://yaathoramani.blogspot.in/2014/03/2.html

நினைவிழந்து எவ்வளவு நேரம் கிடந்தேன்
எனத் தெரியவில்லை

நான் விழித்தபோது ஹாலின் மேற்குச் சுவற்றோரம்
இருந்த சோபாவில் படுக்கவைக்கப் பட்டிருந்தேன்
நெற்றியிலும் முன் தலை முடியிலும் தட்டுப்பட்ட ஈரம்
என் முகத்தில் நீர் தெளித்து சோமு விழிக்கச்
செய்திருக்கிறார் எனப் புரிந்து கொள்ளச் செய்தது

எதிர் சுவற்றில் இருந்த கடிகாரம் மணி
பன்னிரண்டெனக் காட்டியது

மெல்ல மெல்ல எனக்கு பழைய நினைவுகள்
திரும்பத் துவங்கியது

நான் மெல்ல சோபாவைவிட்டு எழுந்திருக்க
முயலுகையில்உள் அறையில் இருந்து
வெளிப்பட்ட சோமு
"கொஞ்சம் அப்படியே படுத்துக் கொள்ளுங்கள்
இப்போது எழவேண்டாம் ,நான் சொன்னதும்
எழுந்தால் போதும் " என்று சொல்லியபடி
என் அருகில் இருந்த ஒரு சாய்வு நாற்காலியில்
அமர்ந்து கொண்டு என்னையே வெறிக்கப் பார்த்தார்.

எனக்கு உதறலெடுக்கத் துவங்கியது

நான் பேசாமல் கொசுக்கடியுடனேயே மண்டபத்தில்
படுத்திருக்கலாமோ ? இவர் என்னை வைத்து
என்னவோ பரிட்ஷித்துப் பார்க்கிறாரோ ?
நான் பலிகடா ஆகிப் போனேனோ ?
அது சரி அவர் என்னை எதற்கு இதற்குத் தேர்ந்தெடுத்தார் ?
நானும் இனி இவர் சொல்லிகிறபடிச் செய்கிற
பொம்மையாகிப் போவேனோ ?
விபரீத கற்பனைகளில் என் மனது தவிக்கத் துவங்கியது

தலையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு என்னை
 வெறிக்கப்பார்த்தபடி சோமு பேசத் துவங்கினார்

"மாப்பிள்ளை என்னிடம் இதுவரை யாரிடமும்
சொல்லாத ரகசியம் ஒன்று இருக்கிறது
அதை யாரிடமாவது சொல்லிப் போகவேண்டிய
காலமும் வந்து விட்டது

நான் உங்களை மூன்று மாதங்களுக்கு முன்னால்
இதே போல்  ஒரு சாத்தூரில் ஒரு திருமணத்தில்
பார்த்தபோதே உங்களிடம்  சொல்லவேண்டும் என
நினைத்தேன்.அப்போது ஏனோ சரியாக அமையவில்லை
இன்றுதான் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறது
அதுதான் தெய்வ சித்தம் "என்றார்

சரி இவரை இனிமேல் இவர் போக்கிலே விட்டால்
நமக்கு எதாவது விபரீதம் நேர்ந்து போகும்
இனி சங்கடப்படாமல் முரண் படவேண்டும்
அதுதான் சரி என முடிவெடுத்து மெல்ல எழுந்து அமர்ந்தேன்

"கோவித்துக் கொள்ளாதீர்கள்.எனக்கு இந்த சாமி பூசாரி
தெய்வ சித்தம் இதிலெல்லாம் எனக்கு துளியும்
நம்பிக்கையில்லை.நான் உங்கள் சொந்தத்தில்
பெண்ணெடுக்கும் போது கூட ஜாதகம் தரவில்லை
அது உங்களுக்கும் தெரியும் தானே
தயவு செய்து உங்கள் உங்கள் ரகசியத்தை
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
அல்லது வேறு யாரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
என்னை ஆளை விடுங்கள்நான் தூங்க வேண்டும்.
நாளை எனக்கு ஊரில்மிக முக்கியமான வேலைகள் இருக்கிறது
இப்போது படுத்தால்தான் சரியாக வரும் "எனச் சொல்லி
நான் எழத் துவங்கினேன்

அதுவரை இயல்பாக இருந்தவரின் முகம்
சட்டென இறுகத் துவங்கியது போல் பட்டது

சட்டென கனத்த குரலில் பார்த்தபடி
"இது நீங்களும் நானும் முடிவு
செய்கிற விஷயமில்லை.முடிவெடுக்கப்பட்டதை
செய்பவர்கள் மட்டும்தான் நாம்
நாளை நீங்கள் ஊருக்குப் போகவில்லை
என்னுடன் வேம்பார் கோவிலுக்கு வருகிறீர்கள்
இரவு அங்கு  தங்குகிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதை
அங்குவைத்துச்சொல்கிறேன்.சரியா ? " எனக்
கட்டளையிட்டது போலச் சொல்லிவிட்டு
அவர் என்னை வெறிக்கப் பார்த்தார்

அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது
என என் உள் மனம் உறுதிபடுத்தத் துவங்கியது

(தொடரும் )

Tuesday, March 18, 2014

மூடுபனி ( 2 )

முதல்  பதிவிற்கு
http://yaathoramani.blogspot.in/2014/03/blog-post_16.html

விருதுநகரில் இப்படிப்பட்ட நட்சத்திர அந்தஸ்துள்ள
ஹோட்டல் இருப்பது  குறித்த ஆச்சரியமா (அப்போது )
அல்லது சோமுவுக்கு எப்படி இவ்வளவு
செல்வாக்கு வந்ததுஎன்பதனால் வந்தக் குழப்பமா
எனத் தெரியவில்லை
என்னால் வெகு நேரம் எதுவும் பேச முடியவில்லை

சோமு இயல்பாக  இருந்தார்.தனது சூட்கேஸில் இருந்து
காவி வேட்டியை எடுத்துஅணிந்தபடி டிரைவரிடம்
"எனக்கு காலையில் ஆறு மணிக்கு மண்டபம் போக
வண்டி வந்தால் போதும்.முதலாளியிடம் சொல்லி விடு
வேறு எதுவும் வேண்டுமென்றால் போன் செய்கிறேன்
நீ போகலாம் : என்றார்

டிரைவர் மீண்டும் ஒருமுறை அவருக்கு பௌவ்யமாக
வணக்கம் செலுத்திவிட்டு போனால் போகிறதென்று
எனக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்

எனக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை
இருந்தாலும் ஆனது ஆகட்டும் என "இந்த
டிரைவரையும் காரையும் பார்க்க மிகப் பெரிய
முதலாளியுடையது எனப் புரிகிறது
அவர் யார் ? உங்களுக்கு எப்படி இவர் பழக்கம் "
என பொதுவான ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன்

இதுபோன்ற ஆழம் பார்க்க கேட்கிற கேள்விகளை
அதிகம் கேட்டு பழகியதாலா அல்லது நான் நிச்சயம்
இப்படிக் கேட்பேன் என எதிர்பார்த்ததாலா
எனத் தெரியவில்லை
சோமு என் கேள்வியைக் கேட்டதாகவே
 காட்டிக் கொள்ளாது
"மாப்பிள்ளை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க
நான் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து விடுகிறேன்"
எனச் சொன்னபடிஒரு காவித் துண்டை எடுத்து
தோளில் போட்டபடி குளியறை நோக்கி
 நடக்கத் துவங்கினார்

நானும் என்னுடைய உடைகளை மாற்றிக் கொண்டு
முகம் கைகால் கால் கழுவி என்னை
ஆசுவாஸப் படுத்திக் கொண்டு கொஞ்சம்
ஓய்வெடுக்கலாம்எனப் படுக்கையில் சாய்கையில்
சோமு குளித்து முடித்து உடலெங்கும்
 திருநீர் தரித்தபடிசிவப்பழமாய் வந்தார்

அவரது கலைந்த நீண்ட முடி ,தாடி கழுத்தில் மின்னிய
அந்த ஸ்படிக மாலை காவி வேட்டி இடுப்பில் கட்டிய
காவித்துண்டு,அந்தச் சூழலை வித்தியாசமானதாக
மாற்றிக் கொண்டிருந்தது

ஷெல்பில் இருந்த ஸூட்கேசை மிகப் பௌயமாக
கீழே சுவரோரம் வைத்துத் திறந்து அதன் முன்
சம்மணமிட்டபடி அமர்ந்து உள்ளிருந்து ஒவ்வொரு
பூசை சாமான்களாக வெளியிலெடுத்து வைத்து
மந்திர உச்சாடனாம் செய்ய ஆரம்பித்தார்

நேரம் நேரம் ஆக ஆக கூடிய மந்திரச் சப்தமும்
அவர் குரலில் இருந்த கம்பீரமும்.
முறுக்கேறிய அவர் உடல் முன் பின்னாக
ஆடத் துவங்கிய ஆட்டமும் என்னை மிக லேசாக
பயம் கொள்ளச் செய்தது

நான் என்னையறியாது கட்டிலைவிட்டு இறங்கி
சம்மணமிட்டு தரையில் அமர்ந்து கொண்டேன்

அந்த ஏ ஸி அறை,இரவு மணி பதினொன்று
இதுவரை பார்த்திராத முறையில் வித்தியாசமாக
எனது உறவினர் சோமு, மணிச் சத்தம்
மந்திரச் சப்தம், தூக்கக் கலக்கம் என்னை
என்னவோ செய்து கொண்டிருந்தது

ஒரு மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்ட
பலியாட்டின் நினைவு என்னுள் மிக லேசாகப் பரவ
உடல் மிக லேசாக நடுங்கத் துவங்கியது

இடது கையில் வேகமாக மணியாட்டியபடி
வலது கையில் பெட்டிக்கு சூடம் காட்டியபடி
மிகச் சப்தமாக மந்திரம்  சொல்லிக்கொண்டிருந்தவர்
சட்டென என் பக்கம் திரும்பி என்னை
தலைமுதல் கால் வரை ஒருமுறை பார்த்துவிட்டு
சட்டென  என் கண்களை உற்றுப் பார்த்தார்

அந்த விரிந்த கண்களிருந்து ஏதோ ஒன்று
என் கண் வழியே என்னுள் வேகமாக இறங்க்குவதைப்
போலத் தெரிய மெல்ல மெல்ல நான்
என் நினைவுகளை இழக்கத் துவங்கினேன்

(தொடரும் )

Thursday, July 11, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி ( 20 )

நேரம் ஆக ஆக நாங்கள் அமர்ந்திருந்த பெஞ்சில்
வெய்யில் ஆக்கிரமிக்கத் துவங்க,
இனியும் காலதாமதமாகக் கிளம்பினால்
சாப்பாட்டிற்குள் வீடு வந்து சேருவது கடினம் என
கணேசனிடம் வற்புறுத்திச் சொல்லி என் வண்டியில்
ஏற்றிக் கொண்டு நாகமலை நோக்கிக் கிளம்பினேன்

எங்கள் வரவை எதிர்பார்த்து கணேசனின் நண்பர்
வாசல் திண்ணையிலேயே காத்திருந்தார்.

நாங்கள் சென்றவுடன் எங்களை நல்லவிதமாக
வரவேற்றுகுடும்ப உறுப்பினர்களை அறிமுகம்
செய்துவைத்து பின்அவர் புதிதாகக்
கட்டிக் கொண்டுள்ள வீட்டையும் சுற்றிக்
காட்டி அவர் எழுதிவைத்திருந்த கடன் பத்திரத்தை
படிக்கக் காட்டி நாங்கள் சம்மதம் எனச்
சொன்னவுடன்கையொப்பமிட்டும் கொடுத்தார்

கணேசனின் நண்பர் பேச்சுவாக்கில்
 தனது மூத்தவன்ஒன்பதாவது  படிப்பதாகவும்
 பெண் ஏழாவது படிப்பதாகவும்
இப்போது வீடு கட்டினால்தான் பையனின் படிப்பு
 மற்றும்பெண்ணின் திருமணத்திற்கு திட்டமிட
வசதியாக இருக்கும்என சொன்ன விஷயம் அவர் எல்லா விஷயங்களையும்திட்டமிட்டு மிகச் சரியாகச்
செய்பவராகப் பட்டது

நாங்கள் வீட்டிற்குத் திரும்புகிற வழியில் கணேசன்
இந்த விஷயத்தையே குறிப்பிட்டுச் சொல்லி
"நானும் இதே ஐடியாவிலதான் மிகச் சரியாகத்
திட்டமிட்டு அடுத்த வருடம் வீடு கட்டலாம என
முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகள்
விரும்பிக் கேட்ட சின்ன சின்ன ஆசைகளைக் கூட
செஞ்சு தராம இடமும் வாங்கி ஆரம்பச்
செலவுகளுக்காக இரண்டு லட்சமும் சேர்த்தேன்.
இப்பப் பாரு எல்லாம் பகல் கனவு மாதிரி ஆகப் போகுது "
என வருத்தப்பட்டுக் கொண்டே வந்தான்

நாங்கள் வீடு வந்த சேர மதியம்
இரண்டரை மணியாகிவிட்டது

எங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்ததைப் போல
நாங்கள் வந்ததும் குழந்தைகள் மற்றும் எங்களுக்கும்
வரிசையாக வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறத்
துவங்கினாள் என் மனைவி

இரண்டு கறி கூட்டு வடை பாயாசம் என ஒரு
விருந்து சாப்பாடே சமைத்திருப்பதைப் பார்த்து
கணேசன் "அக்கா இவ்வளவு எதுக்கு செஞ்சீங்க
நான் என்ன நம்ம வீட்டுக்கு விருந்தாளியா. "என்றான்

எனக்கு கூட  அவன் கேட்பது சரியெனவேப்பட்டது

குனிந்தபடி பரிமாறிக் கொண்டிருந்தபடி மனைவி
மெல்ல நிமிர அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம்
"என்னங்க்க அண்ணே அப்படிச் சொல்லிட்டீங்க
தலைக்கு வந்த சனியன் தலைப்போகையோடு
போனதுன்னு நாங்க எல்லாம் எவ்வளவு
சந்தோஷப்பட்டோம் தெரியுமா /
நீங்க  ஆம்பளைங்க எல்லாம் சந்தோஷம்னா
உடனே ஃபிரண்ட்ஸ்களோட வெளியே
 கொண்டாடுறதைப்பத்தி யோசிப்பீங்க
பொம்பளைங்களுக்கு தெரிஞ்சது எல்லாம்
தன்னை அழகு படித்திக்கறதும்
இப்படி வகை வகையா சமைச்சுப் சாப்பிடவைச்சு
ரசிக்கிறதுதானே "என்றாள்

அவள் சொல்வது எனக்கு நறுக்கெனச் சுட்டது
நான் குனிந்தபடி கணேசனைப் பார்க்க
அவன் கண்கள்கலங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது

சாப்பிட்டு முடித்து சிறிது ஓய்வெடுக்கலாம் என
எனது அறையில் கணேசனை சோஃபாவில்
அமரவைத்து நான் அருகில் சேரில் அமர்ந்து கொள்ள
சிறிது நேரம் மௌனமாக இருந்த அவன்
"அப்பா அம்மா குழந்தைகள் விஷயத்தில்
மிகச் சரியாக நடந்து கொள்கிற மிகச் சரியாக
அவர்களைப் புரிந்து கொள்கிற பெரும்பாலான
ஆண்கள் மனைவி விஷயத்தில் தான்
சரியாக நடந்து கொள்வதும் இல்லை
அவர்களை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதுமில்லை"
என்றான்  அழுத்தம் திருத்தமாக

கணேசன் அவன் அவன் மனைவி சம்பத்தப்பட்டே
இது குறித்து விரிவாகச் சொன்னாலும் அது
என் சம்பத்தப் பட்டதுமட்டுமல்ல நம் அனைவரின்
சம்பத்தப்பட்டது போலவே பட்டது எனக்கு

(தொடரும் )

Monday, July 8, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவோடி ( 19 )

வாழ்வில் சில சமயங்களில் நாம் எதிர்கொள்கின்ற
கேள்விகள் பதில்களை எதிர்பார்க்காதவைகளே
அதனுள்ளேயே மிகச் சரியான
பதில்களைக் கொண்டவைகளே

கணேசனின் கேள்வியும் அத்தகையதுதான்
என்பதால் நான் பதிலேதும் சொல்லவில்லை
அவனே தொடர்ந்தான்

"டாக்டர்கள் எவ்வளவுதான் மறைச்சும்
நம்பிக்கையூட்டும்படியாகப் பேசினாலும்
அவங்க என்னோட நோயின் தீவிர பாதிப்பை
மிகச் சரியாகக் கணித்துவிட்டார்கள் என்பதுல
எனக்கு சந்தேகமில்லடா.

முட்டாள்தனமான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு
பின் அவதிப்படுவதற்குப் பதிலா அவநம்பிக்கையில்
முழுமையான நம்பிக்கை வைச்சு அதைத் தொடர்ந்து
செய்ய வேண்டியவைகளை மிகச் சரியாகச்
செய்றதாக முடிவெடுத்துவிட்டேன்

எனக்கே நான் மூன்று மாசத்தை டெட் லைனாக
வைச்சுக்கிட்டு எதை எதை அதுக்குள்ளே
நான்  இருந்து அவசியம் செய்ய வேண்டுமோ
அதையெல்லாம் தாமதம் செய்யாமல்
இன்று புதிதாய்ப் பிறந்தஉற்சாகத்தோடு மட்டுமில்லாம
இன்றே போய்ச்சேரப் போகிற மனோபாவத்தோடும்
செய்றதாக தீமானிச்சுட்டேன்

இப்படி ச் செய்யறதாலே
மூன்று மாசங்களுக்குப் பின்னால் நான் இருந்தா
எனக்கு நஷ்டம் ஏதும் இல்லை.லாபம்தான்
நான் இல்லையானா நிச்சயம் அதனால
இருக்கிறவங்களுக்கு லாபம்தான் "என்றான்

இப்படி அனைத்திலும் ஒரு தீர்மானமான முடிவுடன்
இருப்பவனிடன் நான் என்ன பேசுவது ?
கேட்டுக் கொண்டிருப்பதைவிட வேறு வழி எனக்குத்
தெரியவில்லை

சிறிது மௌனத்திற்குப் பின் அவனே தொடர்ந்தான்

"முதல் வேலையா டாக்டர்கிட்டே மூணு மாசத்துக்கு
மெடிகல் சர்டிஃபிகேட் வாங்கினேன். அதை ஆபீஸில்
கொடுத்துவிட்டு அப்படியே என்னுடய
 ரிட்டெயர்மெண்ட்டெத் பெனிஃபிட் நாமினேசனை
அப்பா பேரில் இருந்து மனைவி பேருக்கு மாத்திட்டு
 செர்விஸ் ரெஜிஸ்டரை தரோவா செக் பண்ணினேன்.
ரெண்டுசர்விஸ் வெரிஃபிகேசன் விட்டு இருந்தது
அ தைச்  சரி பண்ணினேன்

எதுக்கும் இருக்கட்டும்னும் ஜி பி எஃப் யில் ஒரு
முக்கால் சதவீத லோனுக்கு அப்பளை பண்ணினேன்
ஆபீஸைப் பொருத்தமட்டில் ஓரளவு எல்லாம் ஓ கே

அடுத்து வெளியே ஃபைனான்ஸ் விஷயம்
நான் அஞ்சும் பத்துமா வெளியே தர
வேண்டியவங்களுக்குஎல்லாம் தந்து முடிச்சிட்டேன்,
இனி எனக்கு வரவேண்டியதை
சரி செய்ய வேண்டியதுதான் பாக்கி.
சின்னத் தொகையைப்பத்திப் பிரச்சனையில்லை
.மூணு மாசத்திலே வாங்கிக்கலாம்
பெரிய தொகை ஒண்ணு என் நண்பன் கிட்டே இருக்கு
அவன் வீடு கட்டிக்கிட்டு இருக்கான்,அதுக்காக
 கைமாத்தாவட்டியில்லா கடனா வாங்கினான்
,நான் அடுத்த வருடம்வீடு கட்டும்போது
 டபுளா அவன் கடன் தருவதாப் பேச்சு
இப்பத்தான் இப்படி ஆகிப்போச்சே

ஆகையினாலே கிரஹப் பிரவேசம் முடிந்ததும்
கடன் கொடுத்த தொகையை உன்கிட்டே
கொடுக்கும்படியும்நான் இப்போது அவசரம்
என்பதால் உங்கிட்டே வாங்கிட்டதாகவும் சொல்லி
 உன் பேருக்கு ஒருபத்து ரூபா பத்திரத்திலே
எழுதிக் கொடுக்கும்படியா சொல்லி இருக்கேன்
.அவனும் சரின்னு சொல்லி இருக்கான்
இப்போ அதை வாங்கத் தான் போறோம் "என்றான்

நான் மௌனமாய் தலையாட்டினேன்

"ஆபீஸிலே கல்யாணம் ஆன உடனே நாமினேஷனை
மாத்தி இருக்கணும்,அப்ப அப்ப வருஷா வருஷம்
சர்விஸ் ரெஜிஸ்டெரை  செக் பண்ணி இருக்கணும்
எல்லாம் பாத்துக்கிரு வோம்ன்னுதா ன்பதினைந்து
வருஷமா எவ்வளவு அசால்ட்டா  இருந்திருக்கேன்

ஆபீஸில் கூடத் தேவலாம்டா இரண்டு நாளில்
சரி செய்துட்டேன், குடும்ப விஷயத்தில தான்
நிறைய விஷயங்களைச் செய்யாமல் விட்டு
எல்லோரையும் போல எவ்வளவோ
குழப்பி வைச்சுருக்கேன்.அதை இரண்டு மாசத்திலே
நோய் கடுமையாகறதுக்குள்ளேசரிப்படுத்தணும்டா
அதையும் ஆபீஸ் விஷயத்தைப்போல சரிபண்ணிட்டா
எனக்குப்  நிச்சயம் சாவுப்பயம்  இல்லாம போயிரும்டா

நானும் தைரியமா எமனோட விளையாட உறவாட
முடிஞ்சா மார்க்கண்டன் மாதிரி மல்லுக்கட்டக் கூட
தயாராயிருவேண்டா " என்றான்தைரியமாக

எனக்குத்தான்   உதறல்  கூட ஆரம்பித்தது

(தொடரும் )

Saturday, July 6, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (18 )

கணேசன் வெளியே கிளம்பலாம் எனச் சொன்னதும்
நானும் உடனடியாக கிளம்ப ரெடியாகிவிட்டேன்.
அவன் வெளியில் சாப்பிடமாட்டான் ஆகையால்
இருவருமே சாப்பிடும்படியாக மதியம் சாப்பாடு
தயார்செய்யும்படி மனைவியிடம் சொல்லிவிட்டு
அவன் வண்டி ஓட்டி சிரமப் படவேண்டாம் என
எனது வண்டியிலேயே பின் சீட்டில்
அவனை ஏற்றிக் கொண்டு"எந்தப் பக்கம் போகணும்"
என்றேன்

"டேய் நாம நாகமலைப்புதுக்கோட்டைவரை
ஒருஅலுவலக நண்பரைப் பார்க்கப் போகணும்,
அதற்கு முன்னால்உன்னிடம் கொஞ்சம் பேசணும்
.போகிற வழியில்ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள
பூங்காவில் கொஞ்சம் நிறுத்து,
பேசிவிட்டுப் பின் போகலாம் :என்றான்

மதுரை  டி வி எஸ் நகரில் உள்ள அந்தப் பூங்கா
மதுரை முக்கியப் பிரமுகர் சிபாரிசில்
அமைக்கப்பட்டதோடுஅல்லாமல் அந்த நகர்
குடியிருப்பு வாசிகளும்கொஞ்சம் சமூக சிந்தனை
உள்ள மனிதர்களாக இருப்பவர்கள் ஆதலால்
அந்தப் பூங்கா கொஞ்சம் நல்லவிதமாகவே இருக்கும்
,
யார்  தொந்தரவும் இல்லாமல் மனம் திறந்து பேச
அந்தப் பூங்கா மிகச் சரியான இடம்தான்

வண்டியை பார்க் ஓரம் பார்க்செய்து விட்டு
வெய்யில் வர வாய்ப்பு இல்லாத ஒரு பெஞ்சில்
இருவரும் அமர்ந்து கொண்டோம்

வழக்கம்போல சிறிது மௌனம்  காத்து பின்
பேசத் துவங்கினான்.

"உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நானே
நாம் வந்த மறு நாளே இங்கே டாக்டரைப் பார்த்தேன்
அவரும் ரிபோர்ட்டையெல்லாம் படித்துவிட்டு
கொஞ்சம் சீரியஸான நிலைதான்,ஒரு மூன்று
மாதத்திற்கான மருந்துகளை டாக்டர்
கொடுத்திருப்பதாகவும் அதைச் சாப்பிட வேண்டிய
அளவும் முறையும் சொன்னார்.

சாப்பிடுகையில் உடல் ரீதியாக மோசனில்
அல்லது முழுங்குவதில் அல்லது வாந்தி ஏதும்வந்தால்
உடன் அவரைச் சந்திக்கும்படியும் சொன்னார்

நான் டாக்டரிடம் ஓபனாகவே கேட்டுவிட்டேன்
சார் சென்னை டாக்டர் சொன்னதைவைத்தே நான்
மரணத்தைச் சந்திக்கத் தயாரகிவிட்டேன்
அதனால்தான் வேறு அசுர டிரீட்மெண்ட் எல்லாம்
வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.ஆகையால்
தயவு செய்து எனக்குள்ள கிரேஸ் டைம்
எவ்வளவுன்னுமட்டும் சொல்லுங்கள் டாக்டர்"
என்றேன்

அவருக்கு சட்டென கோபம் வந்துவிட்டது
ஆனாலும் என் மேல் இரக்கப்பட்டோ என்னவோ
கொஞ்சம் பொறுமையாக "தம்பி டாக்டர்கள்
எல்லாம் கடவுள்கள் இல்லை
நாங்கள் சொல்வதெல்லாம் வேத வாக்கும் இல்லை
கடைசி நொடி வரை நாங்கள் நோயாளியைக் காக்கப்
போராடவும் கடைசி மூச்சுவரை நோயாளிக்கு
நம்பிக்கையூட்டவும்தான் படித்துவந்திருக்கிறோம்
எனவே இப்படியெல்லாம கேள்வி கேட்காமல்
ஒழுங்காக மருந்து சாப்பிட்டு சொல்கிறபடி
டயட்டில் இரு.

கூடுமானவரையில் குடலுக்கு
சிரமம் தர வேண்டாம்.

மஞ்சள் காமாலை அல்லது
விடாத வயிற்றுப்போக்கு வரும்படியாக ஆனால்
கொஞ்சம் சிரமம்தான் என்றார் "எனச் சொல்லி
நிறுத்தினான்

"சரி அதைவிடு இப்போ போற வேலைக்குக்
கிளம்பலாமா ? அங்கே எதுக்குப் போறோம்னு
முதலில் சொல்லு "என்றேன்

அவன் சிரித்தபடி "அதற்குள் அவசரப்பட்டால் எப்படி ?
நீயும் கிரிக்கெட் பிளேயர்தானே நான் சொல்வதற்கு
மட்டும் பதில் சொல்லு.
கடைசி ஒரு பால் மட்டும் இருக்கு
ஜெயிக்க ஆறு ரன் வேண்டியிருக்கு
தடுத்து ஆடுவது புத்திசாலித்தனமா ?
அல்லது ஆனது ஆகட்டும் என அடித்து ஆடுதல்
புத்திசாலித்தனமா ?" என்றான்

இந்தக் கேள்விக்கு பதில் நிச்சயம் ஒன்றுதான்
என்பதால் அவன் முடிவும் எப்படிப்பட்டதாக இருக்கும்
என யூகிக்க முடிந்ததால் எனக்குள் பயம்
விஸ்வரூபம் எடுக்கத் துவங்கிவிட்டது

(தொடரும் )

Thursday, July 4, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (17 )

இரவு நான் வீடு வந்து சேர வெகு நேரம்
ஆகிவிட்டபடியால் மனைவி அதிகமாக எதுவும்
கேட்டுக் கொள்ளவில்லை

.காலையில் காபி குடிக்கும் வேளையில் கணேசன்
தன் மனைவியிடம் சொன்னதைப்போலவே
நல்லவிதமாகவும் நம்பிக்கையூட்டும்விதமாகவும்
பட்டும்படாமலும் சென்னை சென்று வந்த
விஷயம் குறித்து சொல்லிவைத்தேன்.

அவள் நம்பிய மாதிரியும் தெரியவில்லை
நம்பாதது மாதிரியும் தெரியவில்லை.

கடந்த ஒரு வாரமாக கணேசன் விஷயமாகவே
நினைத்துக் கொண்டிருந்ததாலும் அவன் சம்பந்தப்பட்ட
காரியங்களையே செய்து கொண்டிருந்ததாலும்
என் வீட்டிற்குரிய எந்தக்கடமையையும் செய்யாததன்
பாதிப்பு எனக்கே நன்றாகத் தெரிந்தது

நீர் ஊற்றாத பூச்செடிகள் ,மார்கெட் போகாததால்
காலியாகிக் கிடந்த பிரிட்ஜ்,இரண்டு வேளையும்
பஸ்ஸில் போய் வந்ததால் குழந்தைகள் முகத்தில்
கண்ட வாட்டம்,தனியாக அவ்வளவாக
இருந்து பழகாததால் மனைவி கொண்டிருந்த
மனவருத்தம் காட்டும் முகம் எல்லாம் என்னை
கொஞ்சம் சங்கடப்படுத்தியது

இந்த வாரத்தில் அனைத்தையும் சரிப்படுத்திவிடுவது
என்கிற முடிவுடன் அலுவலகம்  புறப்பட்டேன்

அலுவலகம் வந்ததும்தான் என் உயரதிகாரி அவர்
பென்ஷன் விசயமாக சென்னை அலுவலகத்தில்
விசாரித்து வரச் சொன்ன ஞாபகமே வந்தது
சட்டென என்ன பொய் சொல்வதெனத் தெரியவில்லை
அந்த செக்சன் கிளார்க் லீவு எனச் சொல்வதுதான்
சரியாக இருக்கும் என எண்ணிக் கொண்டு
நான் அவர் அறைக்குள் நுழைந்ததும்
அவரே சந்தோஷமாக
"ரொம்ப நன்றி ரமணிசார்.ஹெட் ஆபீஸில் இருந்து
ஃபார்மல் சேங்ஸன் லெட்டர் வந்துவிட்டது
அவ்வளவு வேலையிலும் இதையும் பார்த்து
வந்ததற்கு மிக்க நன்றி "என்றார்

எனக்கு என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை
"உங்கள் வேலையும் முக்கியமான வேலைதானே சார்"
என சமாளித்து என் அறைக்கு வந்தேன்

இதைப்போலவே கணேசன் நோயும் சரியாகிப்
போய்விடாதா தமிழ் சினிமாவில் சினிமா
முடிகிற வேலையில் ஏதோ ஒரு எஃஸ்ரே படத்தைத்
தூக்கிப்பிடித்து " ஓ மை காட் வாட் எ
மெடிகல் மிரேக்கிள்"
எனச் சொல்லி எல்லா நோயும் காணாமல்
போய்விட்டதைப்போல  சொல்வார்களே அதைப்போல
கணேசன் விஷயத்திலும் ஏதேனும் நடந்து விடாதா
எனக் கூட எனக்குள் ஒரு பேராசைகூட வந்தது

அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் அவனை
வீட்டில் சந்தித்துப் பேசிப்போகலாம் என நான்
நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவன்
மூன்று நாள் தனக்கு முக்கியமான வேலை
இருப்பதாகவும் நானும் கொஞ்சம் ஃபிரீயாக
வீட்டு வேலை களையும் அலுவலக வேலை களையும்
பார்க்கும்படியும் அவனே போன் செய்தான்

வெள்ளிவரை அவனைப் பார்க்கவில்லையாயினும்
எனது அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும்
அவன் நினைவே வந்து கொண்டிருந்தது
இரவு தூக்கத்தில் கனவில் கூட ஏதோ ஒரு
விதத்தில் அவன் வந்து போய்க் கொண்டே இருந்தான்
வந்த விதம் எதுவும் மகிழ்வூட்டுவதாக
இல்லை என்றாலும் அவன் வருவது மட்டும்
தொடர்ந்து கொண்டுதான் இருந்தது

அவன் சனிக்கிழமை காலை போன் செய்தபடி
காலையிலேயே  வீட்டிற்கு வந்து விட்டான்.
முடிவெட்டி சேவிங் செய்து புது மாப்பிள்ளை போல
அருமையாக டிரஸ் செய்து வந்ததைப் பார்க்க
போன வாரம் பார்த்த கணேசனா என என்னாலேயே
நம்ப முடியவில்லை.நான்தான் சீக்காளியைப்
போலிருப்பதாக எனக்கே பட்டது

கொஞ்ச நேரம் என் மனைவியிடமும்
குழந்தைகளிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு
என்னைப் பார்த்து  " கிளம்புடா  வெளியே
கொஞ்சம் அவசர வேலை இருக்கு " என்றான்

(தொடரும்

Tuesday, July 2, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (16 )

நாங்கள் எப்போது சென்னையில் இருந்து
திரும்ப வேண்டியிருக்கும் எனபது எங்களுக்கே
திட்டவட்டமாகத் தெரியாதாகையால் ஊர் திரும்ப
முன்பதிவு ஏதும் செய்யவில்லை.அது கூட
ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று

திருச்சிவரை டிக்கெட் எடுத்து ஸ்ரீரங்கம்
திருவானைக்காவல் கோவில்கள் போய் விட்டு
பின் மதுரை பஸ் பிடித்தோம்

முன்பெல்லாம இது போல் கோவில் குளங்கள்
போவதென்றால் அவ்வளவு விரும்பமாட்டான்
இப்போது அவனாகப் போகவேண்டும் என
விரும்புவது மட்டுமல்லாது
ஒவ்வொரு இடத்தையும்இதுதான் கடைசி முறையாகப்
பார்ப்பது போலப் பார்ப்பதையும்
பழகுபவர்கள் பேசுபவர்கள் எல்லோரிடத்தும்
இனிமேல் பார்க்கப் போவதில்லை பேசப்போவதில்லை
இதுதான் கடைசி என்பதுபோல் பேசுவதும்தான்
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

இரவு பத்து மணி அளவில் வீடு வந்து சேர்ந்ததும்
குழந்தைகள் இருவரும் ஓடிவந்து அப்பாவை
வாசலிலேயே கட்டி அணைத்துக்  கொண்டார்கள்
அவனுடைய மனைவி இருவரின் பையையும்
வாங்கி உள்ளே வைத்து நாங்கள் சேரில்
அமர்ந்ததும் எங்கள் கீழ் நாங்களாக என்ன என்ன
நடந்தது எனச் சொல்லட்டும் என்பது போல
அருகில் அமர்ந்து கொண்டார்.

ஏற்கெனவே தொலைபேசியில்
பயப்படும்படியாக ஏதும் இல்லை ஆரம்ப நிலைதான்
என்பதால் சுலபமாக குணப்படுத்துவிடமுடியும் என
டாக்டர் சொல்லியதாகச் சொல்லி இருந்ததால்
அவர் மனைவியிடம் அவ்வளவு பதட்டமில்லை

நானாக ஆரம்பித்தால் எதுவும் உளறிவிட
சந்தர்ப்பமுண்டு என்வே அவன்முதலில்
ஆரம்பிக்கட்டும்அவன் சொல்வதற்கு ஏற்றபடி
பேசிவிடலாம் என நானும்காத்திருந்தேன்.

அவனுக்கும் சட்டென மனைவியின் குழந்தைகளின்
முகத்தைப் பார்த்ததும் எப்படி ஆரம்பிப்பது என
குழப்பமைடைந்தானோ என்னவோ
"நல்லவேளை உடனே சென்னை போனது
நல்லதாகப் போயிற்று,இன்னும் இரண்டு மூன்று
மாதம் தாமதித்துப் போயிருந்தால் கொஞ்சம்
கஷ்டப்படவேண்டியிருக்கும்,
அதைப்பற்றியெல்லாம் காலையில் விரிவாகப்
 பேசிக் கொள்ளலாம்முதலில் அந்த சூட்கேஸை எடு "
எனச் சொல்லிஅதனுள் இருந்த மனைவிக்கு
வாங்கிய சேலையும் குழந்தைகளுக்கு  வாங்கிய
 டிரஸ்ஸையும்வெளியே எடுத்தான்

அதனைக் கண்ட அவனது மனைவியும்
குழந்தைகளும்ஏதோ காணாத அதிசயத்தைக்
கண்டதைப்போலஆச்சரியப்பட்டு
முழு வாயைத் திறந்து" வாவ் "எனக் குரல் எழுப்ப
அது எனக்கு மிகுந்த ஆச்சரியமாகஇருந்தது.

மேலும் அவர் மனைவி
 "உங்களுக்கு என்னங்க ஆச்சு"\எனக் கேட்டது
என் ஆச்சரியத்தைஇன்னும் அதிகப்படுத்தியது

"என்னடா ஒரு டிரஸ்ஸுக்கு இப்படி அதிகமா
 பில்டப்தர்றாங்க.நீ எங்கேயும் போனா எதுவும்
வாங்கி வரமாட்டாயா"என்றேன்
 பொறுக்கமாட்டாமல்

அவன் பதிலேதும் பேசாது இருக்க அவர் மனைவியே
தொடர்ந்தார்

"என்னங்க  அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே
இருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா "
என்றார்

எனக்கு எதற்கு இப்படி கேட்கிறார் எனப் புரியவில்லை

பின் அவரே தொடர்ந்தார்."நான் சிறுவயதில் இருந்து
அம்மனுக்கு விரதம் இருந்து தீச்சட்டியெல்லாம்
 எடுப்பேன்எனக்கு அந்த சிவப்பு பாவாடை
 சட்டை தாவணி சேலைஎன்றால் ரொம்ப இஷ்டம்
.கல்யாணம் ஆகி இரண்டுசேலை கூட கொண்டு வந்தேன்.
ஒரு ஆடி வெள்ளிக் கிழமை அந்த சேலையைக் கட்டி
இவரோடு அம்மன் கோவிலுக்கு நான் கிளம்ப இவருக்கு
வந்ததே கோபம்,ஏதோ ராக்கம்மா மூக்கம்மா மாதிரி
பட்டிக்காட்டுக்காரி மாதிரி இருக்குன்ன்னு ஒரே கத்தல்
எங்க அப்பா கூட பயந்து போய் அந்த ரெண்டு
சேலையைக் கூட ஊருக்கே தூக்கிட்டுப்போயிட்டாரு
இப்ப என்னன்னா அவரே அந்த சேலையை வாங்கி
வந்திருந்தா ஆச்சரியமா இருக்காதா ?

இந்தப் பையனும் மூணு தீபாவளிக்கு ஜீன்ஸ் கேட்டு
அலுத்துப் போனான்,அதெல்லாம் காலேஜ் போறப்ப
பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு

பொண்ணுக்கும் அப்படித்தான் இந்த மாடர்ன்
 டிரஸ்செல்லாம்இப்பவே வேண்டாம் பழகிட்டா
அப்படியே போயிரும்அவளுக்கு வாய்க்கிறவன்
 அதையெல்லாம் விரும்பாதவனா
இருந்தா அதுவே பிரச்சனையாயிடும்னு சொல்லி
இதுவரை வாங்கித் தரவே இல்லை

இப்ப என்னடான்னா அப்படியே தலைகிழா
 மாறினவராட்டம்இப்படி வாங்கிவந்தால்
ஆச்சரியமா இருக்காதா
நீங்களே சொல்லுங்கள் "என்றார்

ஒரு சோகமான சூழலாக  இல்லாமல்
சட்டென இந்த டிரஸ் விஷயத்தால் ஒருசுமுகமான
சூழல் உருவானதால்  நானும் இயல்பு நிலைக்கு வர
ஏதுவாக இருந்தது

நாளை பார்ப்போம் எனச் சொல்லி அவர்களிடம்
விடைபெற்றுக் கொண்டு எனது
வீட்டிற்குப் புறப்பட்டேன்

டிரஸ் விஷயத்தில் மட்டுமல்ல
 அனைத்து விஷயத்திலும்
அவன் தீர்மானமான முடிவோடு இருப்பது
போகப் போகத்தான் புரிந்தது

(தொடரும் )

Sunday, June 30, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (15

இரவு வெகு நேரம் கடற்கரை மணலிலேயே
பேசியபடி படுத்திருந்து பின் ஆஸ்பத்திரி திரும்பினோம்

மறு நாள் காலை குளித்து முடித்து ஊருக்குத் திரும்ப
எங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு மிகச் சரியாக
ஒன்பது மணிக்கு டாக்டர் அறைக்கு வந்து சேர்ந்தோம்

டாக்டரும் முதல் நபராக எங்களை அழைத்து
மருத்துவ அறிக்கை மற்றும் மருந்து மாத்திரைகள்
மற்றும் மதுரை டாக்டருக்கென தனியாக ஒரு
கடிதம் எனக் கொடுத்து சீக்கிரம் குணமடைய
"வாழ்த்துக்கள் "எனக் கூறி "வேறு ஏதேனும்
கேட்கவேண்டியிருக்கிறதா "என்றார்

கணேசன் ஒன்றுமில்லையென தலையசைக்க
நான்தான் புற்று நோய் குறித்து சில தகவல்கள்
தெரிந்து கொண்டால் நல்லது என்கிற
அடிப்படையில்சில கேள்விகள் கேட்டுவைத்தேன்.

அவரது பதிலில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்

புற்று நோயை உண்டாக்கவும் முடியாது
தடுக்கவும் முடியாது

புற்று நோய் என்றால் கட்டாயம் மரணம்தான்
என்பதில்லைஅதனுடன் வாழப் பழகவேண்டும்.
ஒருவன் இறக்கும்போது
புற்று நோயும் அவனுடன் இறந்துவிடும்

புற்று நோய் பரம்பரை நோயுமல்ல
தொற்று நோயும் அல்ல

புகையிலை குட்கா சிகரெட் மற்றும் கண்ட கண்ட
ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட உணவு
மற்றும் அலங்காரப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு
புற்று நோய் வர கூடுதல் வாய்ப்புண்டு

ஆரம்ப அறிகுறியிலேயே கண்டுபிடிக்கப்பட்டால்
புற்று நோயை குணப்படுத்துவது எளிது

இறுதியாக கணேசனின் உண்மையான நோயின்
நிலை குறித்தும் கேட்டேன்

நோயின் தீவீரத்தைக் குறைக்கும்படியான
மருந்துகள் கொடுத்துள்ளதாகவும்
.வலி குறைக்கும்படியான மருந்துகளும்
கொடுத்துள்ளதாகவும் சொன்னார்

உடலில் மருந்தினால் ஏற்படும் மாறுதல் குறித்து
வாரத்திற்கு ஒருமுறை மதுரை டாக்டரிடம் செக்கப்
செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்

குடலில் நோய் முற்றி இருப்பதால்
உணவு விஷயத்தில் கவனமாக இருக்கும்படியும்
தொடர்ந்து வயிற்றுப் போக்கோ மஞ்சள் காமாலையோ
வராமல் கவனமாக இருக்கும்படியும்
பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்

ஏனெனில் மருந்து தோற்று நோய் ஜெயிப்பதற்கான
திட்டவட்டமான அறிகுறி அது என்றார்

இறுதியாக "சீக்கிரம் குணமடைய  வாழ்த்துக்கள்"
என கணேசனின் கைகுலுக்கி வாழ்த்துக்களைச் சொல்ல
நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்

வெளியே வந்ததும் "சிறிது நேரம் அந்த எதிர் பார்க்கில்
உட்கார்ந்து இருந்து போவாமா "என்றான் கணேசன்

அவன் ஏதோ விரிவாகப் பேச விரும்புகிறான் எனப்
புரிந்து கொண்டு நானும் சரியெனச் சொல்லி
உடன் சென்று பூங்காவில் இருந்த பெஞ்சில்
அமர்ந்து கொண்டேன்

அவன் சிறிது நேரம்  பேசவேண்டியதை
மனதுக்குள் சொல்லிப்பார்ப்பதுபோல மௌனமாக
இருந்துவிட்டு பேசத் துவங்கினான்

"நான் ஆறு மாதங்களுக்குப் பின் இருக்கமாட்டேன்
என்கிற உறுதியோடு நினைத்துப்பார்க்கையில்தான்
நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எத்தனை
அர்த்தமற்றது என்றும் எனது கருத்தையும்
நம்பிக்கையையும் எத்தனை வலுக்கட்டாயமாக
குடும்பத்திலும் உறவினர்களிடத்தும் திணித்து
அற்ப சந்தோதோசப்பட்டுள்ளேன் என எனக்கு
இப்போது புரிகிறது.

ஆறு மாதங்களுக்குப் பின் இருந்தால் மிக்க
சந்தோசம்,இல்லையென்றாலும் கவலையில்லை
என்கிற மன உறுதியோடு இனியாவது
ஒரு நல்ல கணவனாக தந்தையாக மகனாக
வாழப் போகிறேன்

தயவு செய்து புற்று நோய் முற்றியுள்ள விவரம்
குறித்து மட்டும் யாரிடமும் தவறியும்
வாய்விட்டு விடாதே " எனச் சொல்லி
என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்

அதற்குப் பின் ஒரு மூன்று மாத காலம்
அவன் எடுத்த முடிவுகள் அவன் செய்த காரியங்கள்
எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க
இப்போது கூட என்னால்அந்தப்
பிரமிப்பில் இருந்து மீளவோ
கண்ணீரை அடக்கவோ நிச்சயமாக முடியவில்லை

(தொடரும் )

Tuesday, June 25, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (14 )

பலகற்று  தெளிந்து ஒருவர் கொள்ளும்
ஞானத்தை விட இழப்பில் விரக்தியில்
தோன்றும் ஞானம் நிச்சயமாக அதிக
பலமுள்ளதாகவும் நீடித்து நிலைப்பதுமாக
இருக்கும் என்பதை பர்த்துஹரி மற்றும்
பட்டினத்தார் அவர்கள் வாழ்வின்
மூலம் மட்டுமல்லஎன் நண்பன் மூலமும்
நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்

நேற்று டாக்டர் விரிவாக அவன் நோய் குறித்துச்
சொல்லும்வரை என் போக்கில் வந்தவன்
முழுவதும் தெரிந்தபின் இப்போது
அவன் போங்கில் போக நானும் எவ்வித மறுப்பும்
இன்றி அவனைத் தொடரத் துவங்கிவிட்டேன்

முதலில் காலையில் கபாலீஸ்வரர் ஆலயமும்
பின் சாயிபாபா கோவிலும் போகவேண்டும்
என்றான்.போனோம் .பின் மதியம் ஒரு
ராஜஸ்தானி வகை சாப்பாடு சாப்பிட வேண்டும்
என்றான்.சாப்பிட்டோம்.
 பின் ரெங்கனாதன் தெருவில்உள்ள ஒரு பிரபலத்
 துணிக்கடைக்குப் போய் ஒரு அடர் சிவப்பில்
மனைவிக்கு சேலையும்
மிகவும் மாடனாக தன் மகளுக்கு ஒரு டிரஸ்ஸும்
மகனுக்கு அதிக  விலையில் ஒரு ஜீன்ஸும்
டி சர்ட் ஒன்றும் எடுத்தான்.பின் மாலையில்
சாந்தோம் கடற்கரை செல்லவேண்டும் என்றான்

அங்கு வெட்ட வெளியில் இருந்த கடையில்
அவனுக்குமாகச் சேர்த்து மிளகாய் பஜ்ஜி
வாங்கச் சொன்னான்,நான் கடந்த வாரம்
 நண்பனிடம்ஏற்பட்ட விவாதம் முதல்
அவனுக்காகவேனும் எனக்குப் பிடித்த பஜ்ஜியை
சாப்பிடாது விட்டுவிடுவதுஎன் முடிவெடுத்திருந்தேன்.

அதைச் சொன்னதும் அவன் சப்தமாகச் சிரித்து
"எனக்காக நீ சாப்பிட வேண்டாம் என முடிவெடுத்தது
தெரியாமல் இனி உனகாக நான் சாப்பிடுவது என
முடிவெடுத்துவிட்டேன்,யார் விட்டுக் கொடுக்கலாம் "
என்றான்

"நானே விட்டுத் தருவதுதான் நியாயம் " என்றேன்

"எதற்கு நான் சில மாதங்களில்
போய்ச் சேர்ந்து விடுவேன் என்றா " என்றான்

நான் பதறி விட்டேன் "என்னடா லூஸ் மாதிரி
 பேசுகிறாய்இப்படியெல்லாம் அப சகுனமாக ப்
பேசுவாய் என்றால் நான் பேச்சைக் குறைத்துக்
கொள்வதைத் தவிர வேறு வழியில்லை "என்றேன்

"விடுறா..நெருப்புன்னா வாய் வெந்தா போயிடும்
என் நோய் குறித்து எல்லோருக்கும் தெரிந்தால்
எல்லோரும் இப்படி விட்டுக் கொடுத்துப்போனால்
எனக்கு இருக்கிற சில நாட்களிலும் வாழ்வில்
சுவாரஸ்யம் இல்லாது போய்விடும்,
நான் இருக்கிறவரை எல்லோரும் இயல்பாக
என்னுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன்
நீ நீங்களாக,,," என்றான்

அவன் ஏதோ முரண்பாடாய் முடிவெடுத்துவிட்டான்
எனப் புரிந்தது. அவன் சிறிது நேரம் பேசவில்லை
அவனாகப் பேசட்டும் என
நானும் மௌனமாயிருந்தேன்

தலைக்கு கையை அண்டக் கொடுத்தபடி
வானத்து நட்சத்திரங்களையே வெறிக்கப்
பார்த்துக் கொண்டிருந்தவன் " என் நோய் குறித்து
நான் என் மனைவி குழந்தைகளிடம் கூட
சொல்லவேண்டாம் என் நினைத்திருக்கிறேன்
நீ உன் மனைவியிடம் கூடச்  சொல்லி
விடவேண்டாம்

மருந்து மாத்திரைகளால் நோய் சரியாய்
போனாலும் சரி அல்லது அது தோத்து
நோய் ஜெயித்தாலும் சரி.இருக்கிறவரை
இயல்பாய் இருந்து போகவேண்டும் என்பதுதான்
என் ஆசை "என்றான்

அப்போது அவன் சொன்னது எனக்கு
அதிர்ச்சியாகவும் ஜீரணிக்கமுடியாததாகவும்
இருந்தாலும்  அந்த முடிவால்தான்
அவன் வாழ்ந்த அந்தக் கடைசிச்
சில  மாதங்களில்அவனைப் பொருத்தவரை
உண்மையாகவும் நிம்மதியாகவும்
அவன் நினைத்தபடி அவனால் வாழமுடிந்தது
என்பது என் சிற்றறிவுக்கு இப்போது புரிகிறது

(தொடரும்

Friday, June 21, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (13 )

இரவு வெகு நேரம் தூங்காததால் காலையில்
ஏழு மணிவரை எழ முடியவில்லை
கணேசன்தான் தட்டி எழுப்பினான்

நான் விழித்துப் பார்க்கையில் அவன் குளித்து
முடித்து டிரஸ் செய்து வெளியில் கிளம்பத்
தயாராய் இருப்பது போல் இருந்தான்"
என்னையும் சீக்கிரம் குளித்து முடித்துக்
கிளம்பும்படி அவசரப்படுத்தினான்

நான் இப்போதெல்லாம அவன் எது சொன்னாலும்
கேள்வி கேட்பதில்லை,அவன் எது சொன்னாலும்
சரியோ தவறோ செய்துவிடவேண்டியது தான்
என்கிற முடிவில் இருந்ததால் நானும்
அவசரம் அவசரமாய் குளித்து முடித்து
டிரஸ் செய்து அவன் முன் ஆஜரானேன்

"வா முதலில் டாக்டரைப் பார்ப்போம் "என்றான்
நான் பின் தொடர்ந்தேன்

டாக்டர் அப்போதுதான் வீட்டை விட்டு வெளியே
வந்து கொண்டிருந்தார்,எங்களைக் கண்டதும்
:வாங்க வாங்க உட்காருங்க என்ன காலையில்
இவ்வளவு சீக்கிரம் தேடி வந்திருக்கிறீர்கள் "
என்றார்

எனக்கு காரணம் ஏதும் தெரியாததால் கணேசன்
முகத்தைப் பார்த்தேன்

அவன் பேசத் துவங்கினான் ,அவன் பேச்சில்
இதுவரை நான் காணாத தெளிச்சியும் உறுதியும்
இருந்தது

"டாக்டர் நான் இரவெல்லாம் நீங்கள் சொன்னதை
எல்லா வகையிலும் யோசித்துப் பார்த்தேன்
நீங்கள் குறிப்பிட்டபடி நிச்சயம் உறுதி சொல்ல
முடியாத அதிக செலவு பிடிக்கிற கதிரியக்கச்
சிகிச்சையை விட மாத்திரை  மருந்தின் மூலம்
சிகிச்சை பெறுதலே சிறந்ததாகப் படுகிறது எனக்கு
அதற்குரிய ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள்
என் குடும்ப சூழலுக்கும் அதுதான் ஒத்து வரும்
ஆனால் தயவு செய்து உண்மை நிலவரத்தை
மிகச் சரியாக சொல்லிவிடுங்கள் டாக்டர்
எதையும் ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கு
நான் வந்து விட்டேன் "என்றான்

டாக்டர் சட்டென நெகிழ்ந்து போய் கணேசனின்
தோள்களைத் தட்டிக் கொடுத்தபடி அருகில் இருந்த
நாற்காலியில் அமரச் செய்தார்

"இவ்வளவு உறுதியான மன நிலை இருக்கிற
பட்சத்தில் நிச்சயம் நீங்கள் இந்த நோயை
வெற்றி கொண்டு விடுவீர்கள்.

நாளை உங்களுக்கு முதல் கோர்ஸ் மாத்திரை
மருந்துகளைக் கொடுத்து விட்டு தொடர்ந்து
சாப்பிட வேண்டிய மருந்துகளின் விவரங்களையும்
குறித்து உங்கள் டாக்டருக்கு ஒரு மெடிகல் ரிபோர்ட்
கொடுத்துவிடுகிறேன்,ஒரு டாக்டரின்
தொடர் கண்காணிப்பில் மருந்து எடுத்துக்
கொள்வதுதான் நல்லது.

நோயின் வளர்ச்சியைத் தடுப்பது படிப்படியாய்
அதன் வீரியத்தைக் குறைப்பது வலியை
கூடுமானவரையில் குறைப்பது என்கிற வகையில்
மருத்துவ செயல்திட்டம் இருக்கும்

விடாமல் டாக்டர் சொல்கிறபடி மருந்தை
தவறாது உட்கொள்வதுடன் அவர் சொல்கிற
உணவுக் கட்டுப்பாட்டையும் அவசியம்
கடைப்பிடிக்கவும்,விரைவில் பூரண குணம்
அடைந்து விடுவீர்கள் வாழ்த்த்துக்கள் "
எனச் சொல்லி இருவரின் கைகளைக் குலுக்கி
விடைபெற்றார்

நாங்கள் மருத்துவ மனையை விட்டு வெளியே
வந்தோம்,

கணேசன் நேற்று இரவு முதலே
சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம்
வந்து விட்டான் என்பது அவனது
ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்
தெளிவாகத் தெரிந்தது

(தொடரும் )

Wednesday, June 19, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடு (12 )

இரவு  மணி எட்டை நெருங்கியது
இப்போது போனால்தான் எதிரிலுள்ள மெஸ்ஸில்
டிபன் ஏதாவது கிடைக்கும்.நான் கடிகாரத்தைப்
பார்ப்பதை டாக்டரும் கவனித்துவிட்டார்

அவர் தன் மனைவியின் பக்கம் திரும்பி
" நீ போய் எடுத்து வை சரியாய் இருக்கும்"என்றார்

பின் டாக்டர் எங்களைப் பார்த்து தொடர்ந்து
பேசத் துவங்கினார்.

"இப்போது இதுவரை நான் பேசியது எல்லாம்
பொதுவானது.மிகச் சரியாக நோயைக் குறித்து
புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகப் பேசியது
இப்போது உங்கள் நிலைபற்றிப் பேசுவோம

நீங்கள் துவக்கத்திலேயே நோயை நிர்ணயம்
செய்யாததால் கொஞ்சம் நோய் முற்றி உள்ளது

இந்நிலையில் அறுவைச் சிகிச்சையோ
கதிரியக்கச் சிகிச்சையோதான் இந்த நிலைக்கு
சரியான தீர்வாக இருக்கும்,அது குறித்து
உங்களிடம் தெளிவாகப் பேசத்தான் நான்
இங்கே உங்களை வரவழைத்தேன்
அதன் சாதக பாதகங்கள் குறித்து மிகத் தெளிவாகப்
புரிந்து கொண்டு நீங்கள்தான் சரியான
முடிவெடுக்க வேண்டும்"என்றார்

இந்த சமயத்தில் "எல்லாம் ரெடி
வாங்க சாப்பிடலாம் "என்றபடி டாக்டரின்
மனைவி வராண்டாவில் இருந்து குரல் கொடுத்தார்

"சரி சார் நாங்கள் வருகிறோம் " காலையில்
திரும்பவும் தங்களைப் பார்க்கிறோம் : என்றபடி
நானும் கணேசனும் எழுந்தோம்

"உங்களுக்கும் சேர்த்துதான் டிபன் ரெடி
செய்துள்ளார்.இன்று நீங்கள் இருவரும் எங்கள்
விருந்தாளி.வாருங்கள் " என எங்களைக்
கைபிடித்துஅழைத்தபடி விட்டினுள்
அழைத்துச் சென்றார்

எங்களால் மறுக்க இயலவில்லை

சாப்பிட்டு முடித்து மீண்டும் தோட்டத்து
நாற்காலியில்வந்து அமர்ந்தோம்

நான் தான் பேச்சைத் துவங்கினேன்
"சரி டாக்டர் அறுவை சிகிச்சையோ கதிரியக்கச்
சிகிச்சையோதான் முடிவென்றால் நோய்
குணமடைய வாய்ப்பிருக்கிறதா ?அதற்கு
உத்தேசமாக எத்தனை மாதமாகும் ?
எவ்வளவு செலவழியும் "என்றேன்

"சரியாகக் கேட்டீர்கள் இதைச் சொல்லத்தான்
நான் சுற்றிவளைத்துப் பேசுகிறேன்
நீங்கள் நேரடியாகக் கேட்டுவிட்டது கூட
நல்லதுதான் "என்றார்

பின் சிறிது நேரம் அமைதியாக எதையோ
யோசிப்பது போல இருந்தவர் பின் வருத்தம்
தோய்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்

"நீங்கள் நான் சொல்கிற எதையும் நெகட்டிவ்வாக
எடுத்துக் கொள்ளக் கூடாது.
எனது பத்தாண்டு கால அனுபவத்தில்
இதே முற்றிய நிலையில் வந்தவர்கள் பலரை
சந்தித்திருக்கிறேன்.சிலருக்கு கதிரியக்கச்
சிகிச்சையும் பலனற்றுப் போய் இருக்கிறது
சிலருக்கு தொடர்ந்து மாத்திரைச் சாப்பிட்டே
கடைசி வரை அதிகத் தொந்தரவு செய்யாமலும்
இருந்திருக்கிறது.

வசதியற்ற ஏழைகள் ஒரே முடிவாக
எங்களுக்கெல்லாம் அவ்வளவு வசதி இல்லை சார்
எல்லாம் ஆண்டவன் விட்ட வழி
மாத்திரை போதும் சார் என சட்டென
முடிவெடுத்துவிடுகிறார்கள்

பணக்காரர்களுக்கும் பிரச்சனையில்லை
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சார்
எந்த சிகிச்சையும் பார்த்துவிடுவோம் என
உடனடியாக முடிவெடுத்துவிடுகிறார்கள்

இடையில் மாட்டிக்கொண்டு முடிவெடுக்க முடியாது
அல்லாடுவதும் தவறான முடிவெடுத்து பின்
அவரது குடும்பத்தையேபொருளாதார ரீதியாக
நிராதரவாக விட்டுவிட்டும் போய் விடுவதும்
பெரும்பாலும் நடுத்தர மக்கள்தான்

நான் நோயின் நிலைகுறித்து ஆராய்வதோடு
மட்டுமல்லாது நோயாளியின் நிலை குறித்தும்
தீர விசாரித்துத் தெரிந்து கொண்டுதான்
வைத்தியதை முடிவு செய்வது என்பதில்
கவனமாக இருக்கிறேன்.அதிலும் குறிப்பாக
நோய் முற்றிவர்களிடத்தும் நடுத்தர மக்களிடத்தும்"
எனச் சொல்லி நிறுத்தினார்

டாக்டருடைய அன்னியோன்யமான அணுகுமுறை
எடுத்தவுடனேயே அதிர்ச்சிதராமல் விரிவாக
நோய் குறித்துப் பேசி பின் கணேசன் நிலை
குறித்துப் பேசியது,இப்போது அதற்காக இருக்கிற
சரியான தீர்வுகளைச் சொல்லி தீர்மானம் செய்யும்
முடிவை எங்களிடமே விட்டது எனக்குப்
பிடித்திருந்தது

கணெசன் அப்செட் ஆகிப் போயிருந்தான்
பரமபத விளையாட்டைப் போல நம்பிக்கையும்
அவ நம்பிக்கையும் மாறி மாறி வர அவன்
குழம்பிக் கிடப்பது அவன் முகத்தில் தெரிந்தது

"உங்களுக்கு நாளை இரவு வரை அட்மிஷன் உள்ளது
நிதானமாக யோசித்து உங்கள் முடிவைச்
சொல்லுங்கள் அவசரமில்லை.
அதற்கேற்றார்போல வைத்தியத்தைத்
துவங்கிவிடலாம் " என டாக்டர் முடிவாகச் சொல்ல
நாங்கள் விடைபெற்றுக் கொண்டு வார்டுக்கு வந்தோம்

இருவருக்கும் இரவு முழுவதும் தூக்கமில்லை
தூங்குவது போல் அவனுக்குத் தெரியட்டும் என நானும்
எனக்குத் தெரியட்டுமென அவனும் காலைவரை
தூங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தோம்

(தொடரும் )

Monday, June 17, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (11)

சென்னை மருத்துவர் புற்று நோய்
மருத்துவத்தில் மட்டுமல்லாது நோயாளிகளுக்கு
கவுன்ஸ்சிலிங் தருவதிலும் அனுபவமிக்கவர் என்பது
நோயைப்பற்றி சொல்லத் துவங்குவதற்கு முன்னால்
தன்னைப்பற்றியும் தன் மனைவி குறித்தும்
சுருக்கமாகச் சொன்னதில் புரிந்து கொள்ள முடிந்தது

புற்று நோயின் காரணமாக தந்தை இறந்ததும்
சராசரிக் குடும்பத்தில் பிறந்ததால் மிகவும்
கஷ்டப்பட்டுப் படித்ததும் ஆசிரியர் தொழிலைப்
போலவே மருத்துவத் துறையும்
சேவைத் துறை என்கிற கருத்தில் ஆணித்தரமாக
தன்னைப்போலவே தன் மனைவியும் இருந்ததால்
காதலித்துத் திருமணம் செய்து கொண்டது குறித்தும்
சொல்லிமுடித்த பின்னே அவர் புற்று நோய் குறித்து
சொல்லத் துவங்கியது எங்களுக்குள் அவர்மேல்
கூடுதல் மதிப்பும் மரியாதையும் உண்டாகியது

அவர் விரிவாகச் சொன்னதின் சாராம்சம் இதுதான்

புற்று நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால்
குணப்படுத்துவது எளிது,அது காட்டும் ஆரம்ப
அறிகுறிகள் ந்ம்மை அதிகம் கஷ்டப்படுத்தாது
இருப்பதால்அதை நாம் மிகச் சிறிய நோய் என
அனுமானித்துஅதற்கு மட்டுமே வைத்தியம் செய்து
 புற்று நோயைஅதிகம் வளரவைத்துவிடுகிறோம்

நாள் பட்ட ஆறாத புண்
இடைவிடாத இருமல்
குரல் மாற்றம்
உணவு விழுங்குவதில் சிரமம்
மச்சத்திலோ கரணையிலோ ஏற்படும் மாற்றம்
நாள்பட்ட மலச்ச்சிக்கல்
உடல் எடையில் மாற்றம்
உணவுப் பழக்கத்திலோ தூக்கத்திலோ மாற்றம்

இப்படி மிகச் சிறிய அறிகுறிகள் கூட
 புற்று நோய்க்கானஅறிகுறிகளாக
 இருந்துவிடுவதுண்டு
.நாற்பத்து ஐந்துக்கு மேற்பட்ட எவரும்
 இதுபோன்றஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
அறிகுறிகள் இருப்பின் முதலிலேயேமருத்துவரிடம்
 பரிசோதனை செய்து கொள்வது நல்லது
மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே
 புற்று நோய்க்கான அறிகுறிகள்தான் என
 திட்டவட்டமாக கூறமுடியாதுஆயினும்சகஜமான
 சிகிச்சையில் இவை குணமடையாவிட்டால்
புற்று நோய்க்கான சாத்தியக் கூறு உண்டு என
அனைவரும்மனதில் கொள்ள வேண்டும் என்றார்.

மாலை மெல்ல மெல்ல மயங்கத் துவங்க
இருள் பரவத் துவங்க டாக்டரின் மனைவி வாசல்
வராண்டா விளக்கை எரியவிட்டு
எங்கள் அனைவருக்கும் ஒரு தட்டில் ஸ்னேக்ஸும்
 காப்பியும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு
அருகில் அமர்ந்து கொள்ளடாக்டர் தொடர்ந்து பேசினார்

"இப்படித்தான் கணேசன் உங்களுக்கு வயிற்றில்
தொடர்ந்து மூன்று வருடங்களாக வலி இருந்தும்
நீங்கள் அதை பரிசோதனை செய்யாது நீங்களாகவே
அது சூட்டுக்கான வலி அது இதுவென்று
நீங்களாகவே வைத்தியம் பார்த்துக் கொண்டு
குடலில் புற்று நோயை முற்றவைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் "எனச் சொல்லி நிறுத்த
நாங்கள் அதிர்ந்து போனோம்

வெளியில் சூழ்ந்த இருளெல்லாம் இப்போது
எங்கள் இருவருக்குள்ளும் சூழ்ந்ததைப் போலிருந்தது

நடுங்கிய குரலில்
"புற்று நோய் சிகிச்சைக்காக அதி நவீன மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். குணப்படுத்துவது
முன்புபோல அத்தனை கடினமில்லை  எனவும்
சொல்கிறார்களே "நான்தான் கேட்டேன்

விரக்தியுடன் சிரித்தபடி டாக்டர் தொடர்ந்தார்

"புற்று நோய்க்கான அதி நவீன மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகளைப் பாவிக்கையில்
அது புற்று நோய் செல்களை மட்டும் அல்லாது
நல்ல செல்களையும் அழிக்கிறது
இதனால் நாளடைவில் இந்த மருந்துகளாலேயே
 நோயாளி வேறு பல இன்னல்களுக்கு
ஆளாகிப் போகிறான்

தலை ரோமம் உதிர்தல்,வாயில் சிறுகுடலில்
ஆறாத புண் தோன்றுதல் இரத்த சோகை முதலான
நோய்கள் பெருக நோயாளி  மிக அவதியுறுகிறான்

கதிரியக்கச் சிகிச்சையும் செய்யலாம்தான்
அது புற்று நோய்க் கிருமிகளை அழிப்பதுடன்
இரத்த உற்பத்திக்கு காரணமான
எலும்பு மஜ்ஜையையும் மிகவும் பாதிக்கிறது "
எனச் சொல்லி நிறுத்த
நாங்கள் பாதி செத்துப்போனோம்

ஏண்டா சென்னை வந்தோம் பேசாமல் இன்னும்
சில நாள் மோரில் வெந்தயத்தைப் போட்டுக்
குடித்துக் கூட பொழுதை ஓட்டிக் கொண்டு
போகிற நேரத்தில் போய்ச் சேர்ந்திருக்கலாமோ
எனக் கூடத் தோன்றியது

கணேசன் தான் பொறுக்கமுடியாமல் கேட்டான்
"அப்போ சாவதைத் தவிர வேறு வழி இல்லையா
டாக்டர் "

"கணேசன் இல்லையெனச் சொல்வதற்கா நாங்கள்
டாக்டருக்குப் படித்திருக்கிறோம்
,நிச்சயமாக இருக்கிறது
பொய்யான நம்பிக்கையை விட உண்மை நிலையை
அறிந்து கொண்டு மனதில்  நிஜநம்பிக்கை கொள்வது
புற்று நோய் சிகிச்சைக்கு மிகவும் அவசியம் "என்றார்

நாங்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம்

ஆயினும் அவர் அடுத்து சொன்ன விஷயங்கள்
இன்னும் எங்களை அதிகம் நிலை குலையச்
செய்துவிட்டது

(தொடரும் )

Saturday, June 15, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (10)

டாக்டர்  சொல்லியிருந்தபடி அவரைச்
சந்திப்பதற்காக மாலை நாலு மணிக்கெல்லாம்
வார்டில் ரெடியாக இருந்தோம்

வார்டு பையனும் மிகச் சரியான
நேரத்துக்கு வந்து எங்களை அவர் குவார்டஸ்சிற்கு
அழைத்துப் போனான்,குவார்டஸ்ர்ஸ் ஆஸ்பத்திரிக்கு
மிக அருகிலேயே இருந்தது,நாங்கள் காம்பௌவுண்ட்
கேட்டைத் திறக்கிற சப்தம் கேட்டதும் வாசல் முன்புற
தோட்டத்தில் அமர்ந்திருந்த டாக்டர் எங்களை
வரவேற்கும் விதமாக எழுந்து "வாங்க வாங்க
உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன் "என்றார்

நாங்கள் அவர் குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்ததும்
வீட்டை நோக்கி "ராஜி அவங்க வந்துட்டாங்க
கொஞ்சம் வந்து போயேன் " என்றார்

சுருக்கமாகச் சொன்னால் லட்சுமிகரமாக
ஆரோக்கியமாக பார்த்தவுடன் எழுந்து வணங்கத்
தக்கவராக அவர் இருந்தார்,

அவர் டாக்டரின் மனைவியாக இருக்கவேண்டும்
அவரும் டாக்டராகத்தான் இருக்கவேண்டும் என
பார்த்தவுடனே தெரிந்தது

நாங்கள் இருவரும் எழுந்து வணக்கம் தெரிவித்து
விட்டு இருக்கையில் அமரவும் " உங்கள் இருவரில்
யார் கணேசன் " எனக் கேட்டபடி டாக்டரின் அருகில்
இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்

நாங்கள் இருவரும் எங்களை அறிமுகம் செய்து
கொண்டு அமர்ந்ததும் டாக்டரும் அவரது மனைவியை
அறிமுகப்படுத்தியதுடன் அவர்களுக்கு பெண்
குழந்தைகள் இருவர் எனவும் அவர்களில் ஒருவர்
டாக்டருக்கும் ஒருவர் எஞ்சினியரிங்கும் ஹாஸ்டலில்
தங்கிப் படிப்பதாகவும் சொல்லி கொஞ்சம்  லேசாக
ரிலாக்ஸ்டாக தன் சாய்வு இருக்கையில் சாய்ந்தபடி
" ஆர் யூ ஃபீல் ரிலாக்ஸ்ட் "என்றார்

சரி டாக்டர் எதுவோ பெரிதாக எங்களைப்
பாதிக்கும்படியாக எதையோ சொல்லப் போகிறார்
எனப் புரிந்து போயிற்று

,நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக
தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன
முழம் என்ன என்கிற மனோ நிலைக்கு ஏறக்குறைய
வந்திருந்ததால் "ஒன்னும் பிரச்சனையில்லை சார்
எதுவானாலும் ஓபனாக சொல்லுங்க சார் "என்றோம்

டாக்டர் வருத்தம் தோய்ந்த குரலில் பேச ஆரம்பித்தார்

"கணேசன் நீங்க மனைவி தம்பி என உறவுக்காரங்க
யாரையும் கூட்டி வராததை வைத்தே  உங்க நண்பரை
மட்டும் கூட்டிவந்துள்ளதை வைத்தே உங்கள் நோய்
குறித்த விவரத்தை உங்கள் வீட்டில் யாருக்கும்
சொல்லவில்லை என அனுமானிக்கிறேன் சரியா ?"
என்றார்

நாங்கள் இருவரும் "ஆம்" என்பதுபோல் தலையாட்டினோம்

"அது கூட ஒருவகையில் நல்லதுதான்.இல்லையெனில்
இப்படி ஓபனாகப் பேசமுடியாது.முதலில் கேன்ஸரைப்பத்தி
ஓரு சின்ன விளக்கம் சொல்லிவிட்டு உங்கள் நிலையச்
சொல்கிறேன்.அப்போதுதான் நீங்கள் எந்த முறையில்
 சிகிச்சை மேற்கொள்வது என நீங்கள் முடிவெடுக்க
வசதியாக இருக்கும்"என்றார்

"கொஞ்சம் பேசிக்கொண்டிருங்கள்,இதோ வந்துவிடுகிறேன்"
என டாக்டரின் மனைவி எழுந்து செல்ல டாக்டர்
புற்று நோயினைக் குறித்து சுருக்கமாகச்
சொல்லத் துவங்க்கினார்

அவர் தொடர்ந்து சொல்லச் சொல்லத்தான் நாம்
எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து கொண்டு
நகத்தோடு கிள்ளி எறிய வேண்டிய புற்று நோயை
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கும்படியாக
முட்டாள்தனத்தைச் செய்து கொண்டு
நாமும் அதிகக் கஸ்டப்பட்டுக் கொண்டு நம்மைச்
சார்ந்தவர்களையும் கஷ்டப் படுத்திக் கொண்டிருக்கிறோம்
எனப் புரியத் துவங்கியது

(தொடரும் )

Friday, June 14, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (9)

சந்தோசமான நிகழ்வெனிலோ அல்லது அதிக
சோகமான நிகழ்வெனிலோ அதை பகிர்ந்து
கொள்வதற்காக நான் அவன் வீட்டிலோ அல்லது
அவன் என் வீட்டிலோ இரவு தங்குவதுண்டு

அது நிச்சமாக எங்கள் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும்
சோகத்தை இல்லாது செய்துவிடும்.

இந்தமுறை அதிகச் சோகத்தைப் பங்கிட்டுக்
கொள்வதற்காகவே அவன் இன்றுஎங்கள் வீட்டிற்கு
இரவு தங்க வந்துள்ளான் என்பதைப் புரிந்து கொண்டு
நானும்அவசரம் அவசரமாக இரவு உணவை
 முடித்துவிட்டு படுக்கையை எடுத்துக் கொண்டு
 மொட்டை மாடிக்கு வந்தபோது வெறும் தரையில்
 படுத்தபடி வானத் தைவெறிக்க
ப்பார்த்துக் கொண்டிருந்தான்

நான் படுக்கையை விரித்து படுத்தபடி
"சரி இப்போது சொல்றா என்ன முடிவு எடுத்திருக்கே
உன மனைவியிடம் விஷயத்தைச் சொல்லியாச்சா
நாளை மறு நாள் சென்னை செல்கிறோம் தானே "
என நானே அவன் பேச அடியெடுத்துக் கொடுத்தேன்

அவன் எழுந்துவந்து என் அருகில் படுத்தபடி
பேச ஆரம்பித்தான்

"தப்பாக நினைக்காதே நான் ரொம்ப யோசித்துத்தான்
இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.என் பிள்ளைகளிடமும்
மனைவியிடமும் கேன்ஸர் எனச் சொல்லப்போவதில்லை
வயிற்றுப்புண் அதிகமாக உள்ளது.
விட்டால் கேன்ஸராக சான்ஸ் இருக்குன்னு
 டாக்டர் சொல்லி இருக்கார்
எதற்கும் சென்னைக்குப் போய் நன்றாக டெஸ்ட் செய்து
விடுங்கள்.இங்கு அவ்வளவு வசதி இல்லை எனச்
சொல்லி இருக்கிறார் எனச் சொல்லப்போறேன்
அவள் நான் எதைச் சொன்னாலும்
நம்பித்தான் தொலைப்பாள்"எனச் சொல்லி நிறுத்தினான்

"டேய் அது தப்பில்லையா.ஊருக்கு உறவுக்குத்
தெரிய வேணாம் மனைவி பிள்ளைகளிடம் எப்படியடா
சொல்லாமல் இருப்பது"என்றேன் பதற்றத்துடன்

"இல்லை நல்லா யோசித்துப் பார்த்துட்டேன்
இது ட்ரீட்மெண்ட்டில் சரியாகிப் போச்சுன்னா சரி
அவங்க அதுவரை மனக் கஷ்டப்படாம இருப்பாங்க
சரியாப் போகாமப்போனாலும் பரவாயில்லைக்
நான் இருக்கும் வரையாவது சகஜமாக இருப்பாங்க.
இப்பக் கூடப் பாரேன் எனக்கு கேன்ஸர்ன்னு
தெரிஞ்சதிலிருந்து நீ சகஜமாயில்லை.
எதுகெடுத்தாலும் விடாப்பிடியாஆர்கு பண்ற நீ கூட
நான் எது சொன்னாலும்சரி சரின்னு போறே
.அது எனக்கு ரொம்ப மனச் சங்கடமாயிருக்கு,
அதே மாதிரி சந்தோஷமா சகஜமா இருக்கிற
பொஞ்சாதி பிள்ளைகளை இருக்கிறவரை
கஷ்டப்படுத்தவேண்டாம்னுநினைக்கிறேண்டா
"என்றான்

அவன் சொல்வது கூட எனக்குச் சரியெனத்தான் பட்டது
 இப்போது கூட முன் போல உரிமையாக
அவனுக்கு எதிராக வாதிடும் நிலையிலும் நான் இல்லை

பின் அவன் வீடு கட்ட வைத்திருக்கும் பணத்தில்
ஒரு ஐம்பதாயிரத்துக் குறையாமல் எடுத்துக் கொண்டு
வருவதாகவும் மாமனாரை ஒரு வாரம் வீட்டில் இருந்து
பார்த்துக் கொள்ளும்படு ஏற்பாடு செய்துவிட்டதாகவும்
நானும் என மனைவியிடம் அவன் சொல்லி
இருப்பதைப்போலவே சொல்லிவிடுமாறும் சொன்னான்
நான் மறுப்பேதும் சொல்லவில்லை.
அவன் சொல்வதற்கெல்லா
ம்" ம் "கொட்டிக் கொண்டிருந்தேன்

பின் வெகு நேரம் பழங்கதைகளைப் பேசிக்
கொண்டிருந்துவிட்டு தூங்கிப்போனோம்

பிறகு எல்லாம் திட்டமிட்டபடியே சரியாக நடந்தது
சென்னை சென்றதும் ஆஸ்பத்திரிக்கு அருகிலேயே
ரூம் எடுத்துத் தங்கிவிட்டு மறு நாள் காலையில்
மதுரை டாக்டர் கொடுத்த மெடிகல் ரிபோர்ட்டுடன்
சிபாரிசுக் கடிதத்துடன் சென்னை டாக்டரைப் பார்த்தோம்

சென்னை டாக்டர் மிக சகஜமாகப் பேசினார்
மதுரை டாக்டரும் அவரும் ஒரே கல்லூரி மாணவர்கள்
மட்டுமல்ல .ஐந்து ஆண்டும் ஒரே அறையில் தங்கி
இருந்தவர்கள் எனச் சொல்லி  நாங்கள் கொண்டு வந்த
ரெபோர்ட்டுகளை எல்லாம் எங்கள் எதிரிலேயே
படித்துவிட்டு இன்னும் சரியாக அனுமானிக்க
 சில டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டும் எனவும்
 நாளைக் காலையில்ரூமைக் காலிசெய்துவிட்டு
இங்கேயே தங்கும்படியாகவந்துவிடும்படியும்
தான் இங்கு அட்மிஷன் போட்டுவிடுவதாகவும்
 சொன்னார்,

டாக்டர் இத்தனை இயல்பாக பேசியதே என் நண்பனுக்கு
பாதி நோய் குணமாகிவிட்டதைப் போல கொஞ்சம்
தெளிவாகத் தெரிந்தான்

மறு நாள் காலையில் என்னை வார்டிலேயே இருக்கச்
சொல்லிவிட்டு அவனை மட்டும் செக்கப்புக்காக
டாக்டர் அழைப்பதாக நர்ஸ் அழைத்துப் போனார்
அவன் திரும்பி வர மாலைக்கு மேல் ஆகிவிட்டது

வந்தவன்" டேய் உங்க டாக்டர் சொன்னது
சரியாகத்தானிருக்கு,இங்க லேபில் அவ்வளவு
மெஷினெரிடா.டாக்டரும் ரொம்ப நல்ல டைப்புடா
ஒரு ரெண்டு டெஸ்ட் ரிஸல்ட் சரியா வரலைன்னு
திரும்ப திரும்ப எடுக்கச் சொல்லிட்டாருடா
இங்க வந்தது நல்லதாப் போச்சுடா
கேன்ஸருக்கு இவங்கதான் அதாரிடி போல
அவ்வளவு நல்லா பாக்குராங்கடா "என்றான்

அவன் நோயின் தீவிரம் மிகச் சரியாகக்
கணிக்கப்பட்டுவிடும் என நம்பியதாலும்
அதனால் நிச்சயம் நோய் குணப்படுத்தப்பட்டுவிடும்
என் நம்பியதாலுமோ என்னவோ
இத்தனை நாள் இல்லாத அளவு மிகவும்
சந்தோஷமாக இருந்தான்.
எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது


ஊருக்குப்போன் போட்டு எல்லாம் நல்லவிதமாகப்
போய்க்க்கொண்டிருக்கிறது,ஒன்றும் பிரச்சனையில்லை
என்பதுமாதிரி மனைவி மற்றும்
குழந்தைகளிடம்  பேசினான்
இரவு இருவரும் நிம்மதியாகத் தூங்கினோம்

மறு நாள் காலையில் கொஞ்சம் தாமதமாக
ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் "ரெபோர்ட் எல்லாம்
வந்துவிட்டது.பார்த்தும் விட்டேன்.நாளை சாயந்திரம்
இருவரும் எங்கள் குவார்டஸ்ஸுக்கு
 வந்து விடுங்களேன் ஒரு காப்பி சாப்பிட்டுவிட்
டு ரிலாக்ஸ்டாக பேசலாம்" என்றார்

எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது
மதுரைக்குப் போனதும் டாக்டரை வீட்டில் சந்தித்து
அவர் சிபாரிசுக் கடிதத்திற்கு இருந்த
 மதிப்பைச் சொல்லி நன்றி சொல்லவேண்டும் என
முடிவெடுத்துக் கொண்டோம்

ஆனால் அந்த டாக்டர் அத்தனை சகஜமாக
அந்நியோன்யமாக இருந்ததற்கான காரணம் இவன்
நோயின் தீவிரத்தினால ஏற்பட்ட இரக்கம்தான் என்பது
மாலையில் அவரைச் சந்தித்துப் பேசிய பின்புதான்
எங்கள் இருவருக்குமே புரிந்தது

(தொடரும் )


Monday, June 10, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (8)

ஆஸ்பத்திரி எனக்கூடப் பாராமல் முன் ஹாலில்
அத்தனைபேர் அமர்ந்திருக்கிருக்கிறார்கள் எனக் கூட
நினைவில் கொள்ளாமல் என் கைகளை அழுத்தப்
பிடித்தபடிகண்கலங்கியபடி என் தோள்களில்
 சாய்ந்தபடி வந்துகொண்டிருந்த கணேசன்,
 வெளியே தன் மனைவிவருவதைப்பார்த்ததும்
 சட்டென நிமிர்ந்து என் பக்கம்திரும்பி
 கண்களையும்  முகத்தையும்அவசரம்அவசரமாகத்
 துடைத்துக் கொண்டான்

பின் என் காதோடு எனக்கு மட்டும் கேட்கும்படியாக
"ரமணி எனக்கு ரொம்பக் குழப்பமாய் இருக்கு
தயவு செய்து டாக்டர் சொன்னதை இப்போ
இவ கிட்டே சொல்லிடாதே என்ன சொல்றது
எப்படிச் சொல்றது என்கிறதைப் பத்தி நான்
யோசிச்சுவைக்கிறேன்.ரிபோர்ட் இன்னமும் வரலை
சாய்ந்திரம் வரச் சொல்லி இருக்கிறார்னு மட்டும்
இப்போது சொல்லிவை.அவ உங்கிட்டேதான் கேட்பா
உன் முகத்தையும் தொடச்சுக்கோ"
என்றான்

அவன் என்னிடம் விஷயத்தைச் சொல்லி முடிக்கவும்
நண்பனின் மனைவி எங்களை நெருங்கவும்
சரியாக இருந்தது

"கோவிலில் அற்புதமான தரிசனம்,எனக்கு அப்போதே
நம்பிக்கை வந்து விட்டது,ஒன்னும் இல்லைதானே
சாதாரண வயிறுவலி தானே "என மடமடவென
அவராகவே எங்களைப் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார்

அவரது கண்களில் தெரிந்தா பயத்துடன் கூடிய
கேள்விக் குறியும் உடலில் தெரிந்த படபடப்பும்
அவர் எந்த ஒரு தீய செய்தியையும் கேட்கிற
நிலையில் இல்லை என்பது  தெளிவாகத் தெரிய
நான் என்ன சொல்வது எப்படிச் சொல்வது என
திணறிப்போனேன்.

என் குழப்பத்தை உணர்ந்த கணேசன் சட்டென
சுதாரித்து "நீ நினைக்கிறபடிதான் இருக்கும் விஜி
டாக்டரும் அப்படித்தான் சொல்றார்
ஆனா ரிபோர்ட் இன்னமும் டாக்டர்கிட்டே வரலை
சாயந்திரம் வரச் சொல்றார். வேகமா நடந்து வந்ததாலே
கொஞ்சம் படப்படப்பா இருக்கே,இப்படி
 கொஞ்சம் உட்கார்"என ஆஸ்பத்திரி வாசலில் இருந்த
 பெஞ்சில்மனைவியை உட்காரவைத்து
 தானும் உட்கார்ந்து கொண்டான்

அவன் என்ன நினைக்கிறான் என்பது தெரியாமல்
நான் எதையாவது உளறிக் கொட்டாமல்
இருக்கவேண்டுமே என்கிற பயம் என்னுள்
 வளர வளரமுதலில் இங்க்கிருந்து கிளம்புவதுதான்
 சரியானமுடிவாகப்பட்டது எனக்கு

"சரி நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட்
எடுத்துட்டு அப்படியே ஆட்டோ பிடித்து வீட்டுக்கு
கிளம்புங்க.நானும் இப்படியே  ஆபீஸ் கிளம்பறேன்
நீ மட்டும் சாயந்திரம் நேரே ஆஸ்பத்திரி வந்துரு
நானும் நேரடியா இங்கே வந்திடரேன் " என
இருவர் முகத்தையும் பட்டும்படாமலும் பார்த்துவிட்டு
உள்ளே ரிசெப்ஸன் பெண்ணிடம் டாக்டர் மெடிகல்
ரிபோர்டுடன் கடிதம் தருவதாகச் சொன்ன
 விஷயத்தைச்சொல்லி மாலையில் வந்து
 பெற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு
 வண்டியை எடுத்து கிளம்புகையில்
வாசலில் கோவில் வீபூதியை கணேசனின்
நெற்றியில் பூசிக்கொண்டிருந்தாள் விஜி

இரண்டு நாள் அலுவலகம் செல்லாததால்
 அலுவலகத்தில்கொஞ்சம் வேலை அதிகம் இருந்தது
,எப்போதும் போலகவனமாக வேலை செய்ய
 இயலாமல் கணேசனின்நினைவும் வர வர
 என்னால் சரியாக எதிலும்
கவனம் செலுத்த இயலவில்லை

மதியம் மூன்று மணி அளவில் போன் செய்த கணேசன்
நாளை மறு நாள் சென்னை செல்வோம் என்றும்
ஒரு வாரம் லீவு சொல்லிவிட்டு வரும்படியும்.
தானும் ஒரு வாரம் லீவு சொல்லிவிட்டதாகவும்
சொல்லிவிட்டு தான் இன்று இரவு என் வீட்டில்
தங்க்கும்படியாக வருவதாகவும் என்னை மட்டும்
அப்படியே ஆஸ்பத்திரியில் ரிபோர்ட் வாஙகிக்கொண்டு
வரும்படியும் சொன்னான்.

அவன் பேசிய விதத்திலிருந்து அவன் குரலில் இருந்த
உறுத்டியைக் கொண்டு அவன் எதையும்
ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கும் இந்த விசயத்தை
எப்படி டீல் செய்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டான்
என்பதை நான் புரிந்து கொண்டேன்

நான் என் உயரதிகாரியிடம் கணேசன் என்பதை மட்டும்
எனது சித்தப்பா என மட்டும் மாற்றிச் சொல்லி
அவசியம் சென்னை செல்லவேண்டியதைச் சொல்லி
ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டேன்
அவரும் இன்னும் ஆறு மாதங்க்களில் ஓய்வு பெற
இருப்பதால் அவருடைய பென்ஷன் சம்பந்தமான
பேப்பர்கள் சென்னை உயர் அலுவலகத்தில் இருந்ததால்
அது குறித்தும் விசாரித்து வரும்படியும் சொல்லி
அவசரமில்லை பத்து நாளானும் இருந்து
நல்லவிதமாக பார்த்துவிட்டு வரச் சொல்லி
அனுமதி கொடுத்தார்

நான் மாலையில் அலுவலகம் முடிந்ததும் நேராக
அஆஸ்பத்திரி சென்று மெடிக்கல் ரிபோர்ட் மற்றும்
சிபாரிசுக் கடிதத்தையும் வாங்கிக் கொண்டு
டாக்டரிடமும் நாளை மறு நாள் சென்னை செல்லுகிற
விஷயத்தையும் தெரிவித்துவிட்டு அவசியமானால்
தொடர்பு கொள்வதாக செல் எண்ணையும்
வாங்கிக் கொண்டு வீடு வருகையில் மணி இரவு
ஒன்பதுக்கு மேலாகிவிட்டது

எனது வரவை எதிர்பார்த்து எங்கள் வீட்டு
உட்புற திண்ணையில் உட்கார்ந்திருந்தான் கணேசன்
நனறாகச் சேவிங் செய்து கலர் சட்டை அணிந்து
விபூதி அணிந்து  அவன் அமர்ந்திருந்ததைப்பார்க்க
காலையில் ஆஸ்பத்திரியில் பார்த்த கணேசனா என
எனக்கே ஆச்சரியமாக இருந்தது

அவன் அன்று அப்போது முதல் நடந்து கொண்ட
முறைகள் அதிசயமானதாகவும் வித்தியாசமாகவுமே
பட்ட எனக்கு அது அணையப் போகிற விளக்கின்
பிரகாசம் தான்  என
ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை

(தொடரும் )


Saturday, June 8, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (7)

 எங்கள்  வீட்டில் எல்லோரும் ஒரு சிறு அசௌகரியம்
 என்றாலும் குடும்ப டாக்டரைப் போலவே
இந்த டாக்டரைத்தான்  பார்ப்போம் என்பதால் இந்த
டாக்டரின் குணாதியங்கள் எங்களுக்கு அத்துப்படி

அமெரிக்காவில் சில வருடங்கள் இருந்ததாலோ
என்னவோ அவரிடம்  முதன் முதலாக வருகிற
பேஸண்டை அனைத்து டெஸ்டுகளும் எடுத்து
வரச்  சொல்லி ஒரு ஃபைல் தயார்செய்து விடுவார்,
பின்னர்தான் வைத்தியத்தைத் துவங்குவார்

அந்த வகையில்தான் கணேசனுக்கும் செய்துள்ளார்
மற்றபடி பெரிதாக எதுவும் இருக்காது எனத் தான்
நானும் எண்ணி மறு நாள் கணேசனையும்
அழைத்துக் கொண்டு முதல் ஆளாக ஆஸ்பத்திரி
வந்திருந்தேன்

வரவேற்பு அறையில் இருந்த பெண்
என்னைக் கண்டதும் "டாக்டர் இன்று எட்டு
 மணிக்கெல்லாம் வந்துவிட்டார்
உங்கள் மெடிகல் ரிபோர்ட்டுகளையெல்லாம்
 அவர்டேபிளில்தான் உள்ளது,கொஞ்சம்
 வெயிட் பண்ணுங்கள்" என்றார்

கணேசனும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி
அதிகப் பட்சம் தனக்கு அல்சர் வேண்டுமானால்
இருக்கலாம்என்கிற அபிப்பிராயத்தில் இருந்ததால்
அவனிடத்தும் அதுபெரிய பரபரப்பில்லை

ஒரு அரை மணி நேரத்தில் டாக்டர் அழைப்பதாக
உள்ளிருந்த நர்ஸ் சொல்ல நாங்கள் இருவரும்
உள்ளே சென்று டாக்டருக்கு எதிராக இருந்த
 இருக்கையில் அமர்ந்தோம்

டாக்டர் சுற்றி வளைக்காமல் நேரடியாகக்
 கணேசனைப் பார்த்து "சொல்வதற்கு மனதிற்கு
 மிகவும்சங்கடமாகத்தான் இருக்கிறது,
கொஞ்சம் மனதைதிடப்படுத்திக் கொள்ளுங்கள் "
என்று சிறிது நிறுத்தி எங்கள் இருவரையும் ஆழமாக
ஊடுருவிப்பார்த்துவிட்டு பின் அவரே  தொடர்ந்தார்

"நேற்று உங்களிடம் விசாரித்து அறிகுறிகளைத்
 தெரிந்து கொண்ட வகையில்
நீங்கள்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்
எனத் தெரிந்து கொண்டேன்.ஆயினும் இத்தனை
கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பீர்கள் என
நினைக்கவில்லை  "எனச் சொல்லி நிறுத்தவும்
நான் அதிர்ந்து போனேன்

கணேசன் பேயறைந்த பாவனையில் உடல் நடுங்க
என்னைப் பார்த்தான்.நான் வலது கையால் அவன்
உள்ளங்கையை அழுத்திப்பிடித்தபடி டாக்டரைப்
பார்த்தேன்

டாக்டர் கொஞ்சம் கவலைத் தோய்ந்த குரலில்
"மூன்று ஆண்டு காலமாக அது சிறிது சிறிதாக
உள்ளே வளர்ந்து வந்திருக்கிறது,லேசான குறிப்பையும்
அவ்வப்போது காட்டியும் வந்திருக்கிறது.
நீங்களே மருத்துவராகி அது இந்த நோய்தான் என
நீங்களாகவே முடிவு செய்து சுயவைத்தியம் பார்த்து .
நோயை முற்ற வைத்திருக்கிறீர்கள்.

வண்டி ஓடாமல்  போனால்தான்
மெகானிக்கிடம் போகிற மாதிரி , உடல் அதிகம்
தாங்கமுடியாமல் போனால்தான் இப்போது மாதிரி
ஆஸ்பத்திரி வருகிறீர்கள்.படிக்காதவர்கள்தான்
அப்படி இருக்கிறார்கள் என்றால் படித்தவர்களும்
அப்படித்தான் இருக்கிறீர்கள் "என்றார் வருத்தத்துடன்

கணேசனின் மொத்த உடலும் நடுங்குவதும்
லேசாக துவங்கிய விசும்பல் ஒலி கொஞ்சம் கூடத்
துவங்கியதும் என் கண்களும் கலங்கத் துவங்கிவிட்டது

நான் துக்கத்தை அடக்கியபடி "டாக்டர்
இவனுக்கு நிச்சயம் வரச் சந்தர்ப்பமில்லை
அனைத்து விஷயங்களிலும் அத்தனை
சரியாக இருப்பான்என்ன செலவானாலும்
 இன்னொருமுறை டெஸ்ட் எடுத்துப்
பார்த்துவிடலாம டாக்டர்."என்றேன்

"நீங்கள் இப்படியெல்லாம் யோசிப்பீர்கள்
பேசுவீர்கள் எனத் தெரிந்துதான்.கொஞ்சம்
அதிர்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லையென
நோயின் வீரியம் உங்களுக்குத் தெரியவேண்டும்
என சுற்றி வளைக்காது பேசினேன்

சுத்தபத்தமாக இருப்பதற்கும் மிகச் சரியாக
வாழ்வதற்கும் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை
அது செல்லுக்கு நேரும்  கிறுக்குத்தனம்
அதனால் வரும் அதிகப்படியான வளர்ச்சி
இந்த நிலையில் அது குறித்து நான் அதிகம்
விளக்குவதும் கஷ்டம்
நீங்கள் புரிந்து கொள்வதும் கஷ்டம்.

இந்த நிலையில் இந்த  நோய்க்கும் நம்மூரில்
வைத்தியம்பார்க்க போதுமான வசதியும் இல்லை
சிறப்பு வைத்தியர்களும் இல்லை.
உடன் தாமதம் செய்யாமல் சென்னை
அடையார் மருத்துவமனைக்குச் செல்லமுயலுங்கள்
சிறப்பு மருத்துவர் என் நண்பர்தான்
அவருக்கு ஒரு சிபாரிசுக் கடிதமும் தருகிறேன்
இந்த ரிபோர்ட்டையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்
கூடுமானவரையில் தாமதம் செய்ய வேண்டாம்
ஏனெனில் இந்த நிலையில் இரண்டாண்டுகளுக்கு
முன்பு  பாதிக்கப்பட்டு அடையார் புற்று நோய்
மருத்துவமனைக்குச் சென்றவர் இப்போதும்
சௌக்கியமாக இருக்கிறார் "என நம்பிக்கையூட்டி
முடித்தார்

இதற்கு மேலும் டாக்டரின் நேரத்தை வீணடிக்க
விரும்பாமல் கணேசனின் கைகளைப் பற்றியபடி
மருத்துவமனைக்கு வெளியே வந்தேன்

தன் கணவனுக்கு பெரிதாக எந்த நோயும்
இருக்கக் கூடாது ஒருசாதாரண வயிற்று வலியாகத்தான்
இருக்கவேண்டும் என வேண்டிக் கொள்வதற்காக
பெருமாள் கோவில் போன நண்பனின் மனைவி
கையில் பிரசாதப் பையுடன் ஆட்டோவை விட்டு
இறங்கி எங்களை நோக்கி
வேகமாக எதிரே வந்து கொண்டிருந்தார்

(தொடரும் )


Wednesday, June 5, 2013

எமனோடுவிளையாடி எமனோடுஉறவாடி /6/

கணேசனுக்கு டாக்டர் பிளட் ,யூரின் ,எம் ஆர்.ஐ
ஸ்கேன் என அனைத்து டெஸ்டும் எடுக்கச் சொல்லி
எழுதி இருந்தாலும் பயாப்ஸி டெஸ்ட் எழுதி
இருந்ததற்காக நான் கலக்கம் கொண்டதற்கு
காரணம் இருந்தது.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்
எனது சித்தப்பா ஒருவர் புற்று நோய் கண்டு
இறந்து போனார்.முதலில் அவருக்கு வயிற்று வலி
என்று பல நாள் வைத்தியம் பார்த்தார்கள்
பின் அது சரியாகவில்லை என்று மதுரை
பெரிய ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்ததில்
வயிற்றில் ஒரு கட்டி இருக்கிறது எனச்
சொல்லி அது ஒரு வேளை புற்று நோயாக
இருக்கலாம் எனச் சொல்லி அதை டயக்னஸ் செய்ய
பயாப்ஸி டெஸ்ட் எடுக்கவேண்டும் எனச்
சொன்னார்கள்.

அப்போது அதற்கான வசதி மதுரையில்
மெஷின் ஆஸ்பத்திரியில் மட்டும்தான் இருந்தது.
அப்போது என்னை அவர் கூட துணைக்கு
இருக்கச் சொன்னதால் பயாப்ஸி டெஸ்ட் என்றால்
புற்று நோய் குறித்து அறிவதற்கான டெஸ்ட்
 எனமட்டும்என் மனதில் பதிந்து போய் இருந்தது.
எனக்குஅரைகுறையாக தெரிந்திருப்பது கூட
மருத்துவமனை விவகாரங்கள் எதுவும் கணேசனுக்குத்
தெரியாததால் என் பயம் கூட அவனிடம் இல்லை.
காசு பிடுங்குவதற்காக எல்லா டெஸ்டும்
எடுக்கச் சொல்கிறார்கள் மற்றபடி அதிகப் பட்சம்
தனக்கு அல்ஸர் இருக்கலாம் என்கிற அபிப்பிராயத்தில்
அவன் இருந்தான்

மறு நாளும் நான் அலுவலக்த்திற்கு லீவு
கொடுத்திருந்ததால் நானே காலையில் ஆறு மணிக்கு
கணேசனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று
மாலை வரை உடன் இருப்பது என்றும்
நண்பனின் மனைவி குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்பும் வேலைகளை முடித்து விட்டு மதியம்
சாப்பாடு இருவருக்கும் சேர்த்து எடுத்துக்
கொண்டுவருவது என்றும் ஏற்பாடு செய்து கொண்டோம்.
கணேசன் அடுத்த வருடம் வீடு கட்டுகிற எண்ணத்தில்
கஷ்டப்பட்டு ஒரு நான்கு லட்சம் ரூபாய்
சேர்த்து வைத்திருந்தபடியால் பணம் குறித்தும்
அவ்வளவாகப் பிரச்சனையில்லை.டெஸ்ட் எல்லாம்
மதியத்திற்குள் முடிந்துவிடும் என நாங்கள்
எதிர்பார்த்ததற்கு மாறாக மாலை வரை நீண்டுவிட்டது

"நாளைக் காலை டெஸ்ட் ரிபோர்ட் எல்லாம்
டாக்டரிடம் சேர்ந்துவிடும்.நாளைக் காலையில்
டாக்டரைச் சந்தியுங்கள் "என லேப் மேனேஜர் சொல்ல
ஆஸ்பத்திரி விட்டு வெளியே வந்தோம்
உண்மையில் ஒரு நாள் உள்ளே இருந்து வந்ததுகூட
ஏதோ பல நாள் நரகத்தில் இருந்து வெளியே வருவது
போலத்தான் இருந்தது

சும்மா இருந்த எனக்கே இவ்வளவு அலுப்பு எனில்
அவனுக்கு அதிகம் இருக்கும் என்பதால் உடன்
எதிரில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு
ஆட்டோ பிடித்து அமரவைத்து

"நாளைக் காலையில் சீக்கிரம்  டாக்டரைப்
பார்க்கும்படியாக டோக்கன் போட்டுவிடுகிறேன்
நீங்கள் இருவரும் நேரடியாக ஆஸ்பத்திரி
வந்து விடுங்கள்.நானும் இருந்து பார்த்துவிட்டு
அப்படியே அலுவலகம் சென்றுவிடுகிறேன்"என்றேன்

நண்பன் சரியெனத் தலையாட்ட நண்பனின்
மனைவியோ "அண்ணே தப்பா நினைச்சுக்காதீங்க
மனசு கொஞ்சம்  சரியில்லை
நாளைக்கு  டாக்டர் இவருக்கு ஒன்னுமில்லை
வெறும் வயித்து வலிதான்னு சொன்னா
திருப்பதி வர்றதாக வேண்டிக்கிட்டு இருக்கேன்
ஆஸ்பத்திரிக்கு  வருவதற்கு முன்னால
எங்க வீட்டுப்பக்கம் உள்ள பெருமாள் கோவிலுக்குப்
போயிட்டுவந்தால் மனசுக்கு கொஞ்சம் தெம்பாயிருக்கும்
ஆகையாலே நாளைக்கும் நீங்களே கூட்டிக்கிட்டு
வந்திருங்க .நான் கோவிலுக்குப் போயிட்டு உங்களுக்கு
முன்னால நான் இங்கே வந்திடறேன் " என்றார்

அவர் சொல்வதும் எனக்கும் சரியெனப்பட்டது
"சரி அப்படியே செய்வோம் " எனச் சொல்லிவிட்டு
நானும் எனது வண்டியில் கிளம்பினேன்

போன ஜென்ம வினையோ அல்லது
இந்த ஜென்மத்தில் அறியாமல் செய்த பெரும்பிழையோ
எது எனத் தெரியவில்லை.

ஆண்டவன் என நண்பனுக்கு எதிராகத்தான் இருந்தான்
என்பது மறு நாள் டாக்டரைப் பார்த்ததும்தான் தெரிந்தது

(தொடரும் )