Wednesday, April 23, 2014

ஐந்தாண்டுத் தவம் தந்த வரம்

யானை மட்டும் தானா தலையில்
தானே மண்ணைப் போட்டுக் கொள்ளும்-தேர்தல்
நாளில் தவறாய் முடிவு எடுத்தால்
நாமும் போட்டக் கதைதான் அறிவோம்-மூடக்

குரங்கு மட்டும் தானா தானே
ஆப்பை அசைத்து மாட்டித் தவிக்கும்-தேர்தல்
நடக்கும் நாளில் காசைப் பார்த்தால்
நாமும் மாட்டிப் பின்னால் தவிப்போம்-திருட்டுப்

பூனை மட்டும் தானா கண்ணை
மூடிப் பாலைக் குடித்து மாட்டும்-நடக்கும்
தீமை கண்டும் ஊமையாய் இருந்தால்
நாமும் மாட்டிப் பின்னால் துடிப்போம்-செக்கு

மாடு மட்டும் தானா தினமும்
நடந்த வழியே நடந்துச் சாகும்-நாமும்
கூறு கெட்டு இந்த முறையும்
தவறைச் செய்தால் நசிந்துப் போவோம்-நீண்ட

தவமாய் ஐந்து ஆண்டு இருக்க
கிடைக்கும் வரமே நமது வாக்கு-இதை
மறந்து இருக்க வேண்டாம் என்றே
எழுதி வைத்தேன் இந்தப் பாட்டு 

20 comments:

பால கணேஷ் said...

வாக்காளர்கள் அனைவரும் மனதில் கொள்ள நன்
நோக்கோடு நீங்கள் எழுதிய இந்தக் கவிதை வெகு அருமை ஐயா.

ராஜி said...

பொருத்தமான நேரத்தில் வெளி வந்திருக்கும் யோசிக்க வேண்டிய கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

தவம் தருவது ..
வரமா..சாபமா..??

திண்டுக்கல் தனபாலன் said...

நல்முறையில் பயன்படுத்த வேண்டும்...

ananthako said...

தவம் செய்து பலன் கேக்கும் போது

நா தவறினால் சாபமாகும்.-அவ்வாறே

வாக்களிப்போருக்கு சாபமாகக் கூடாது என்பதற்கே ரமணியின் இந்தப் பாட்டு.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! தகுதி அறிந்து தரம் அறிந்து வாக்கிட வேண்டும்! தரம் இறங்கி காசுக்கு விற்க கூடாது! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

Anonymous said...

வணக்கம்
ஐயா.

காலத்துக்கு ஏற்ப கவிதை அருமை வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அம்பாளடியாள் said...

தக்க தருணத்தில் சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு.
http://rupika-rupika.blogspot.com/2014/04/blog-post_21.html

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமையா எழுதி வச்சீங்க பாட்டு
அனைவரும் புரிந்து போடணும் ஓட்டு
த.ம.+1

தி.தமிழ் இளங்கோ said...

மாறாதய்யா மாறாது! மணமும் குணமும் மாறாது!
த.ம - 6

விமல் ராஜ் said...

சரியான நேரத்தில், சரியான பதிவு!!! அனைவரும் படித்து சிந்திக்க வேண்டியது !

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!!

தமிழ்மணம் 7

வாக்கு வரமாகும்! வாய்த்த பெருந்துயரைப்
போக்கும் மருந்தாகும் போற்று!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

அருணா செல்வம் said...

யாருமே நல்லவங்களாகத் தெரியாத போது என்ன செய்வது...?

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் said...//
யாருமே நல்லவங்களாகத் தெரியாத போது என்ன செய்வது...?

மோசமானவர்களில்
சுமார் மோசமானவரைத்
தேர்ந்தெடுப்பதைத் தவிர
வேறு வழியில்லை

மகிழ்நிறை said...

காலத்திற்கு பொருத்தமான கவிதை !
நல்ல முயற்சி அய்யா!

Unknown said...

ஒட்டு வாங்கி ஜெயித்தவன் மக்களை மாக்களாய் தான் பார்க்கிறான் !
த ம 9

கவியாழி said...

தங்களின் யோசனையை வரேற்கிறேன்

G.M Balasubramaniam said...

வாக்களிப்பவர் தவறு செய்கிறோம் என்று தெரிந்தா வாக்களிக்கிறார்கள்.வாக்களிப்பது என்பது ஒரு விநாடிச் செயல். ஆனால் அந்த ஜனநாயகப் பணியைச் செய்யும் முன் விருப்பு வெறுப்பின்றி எத்தனை பேர் துலாக்கோல் கொண்டு பார்க்கிறார்கள். எல்லாமே ஏதோ ஒரு perception-ல் தான் நடக்கிறது.

கோமதி அரசு said...

தேர்தல் நேரத்திற்கு பொருத்தமான கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

தேர்தல் நேரத்தில் சிறப்பான அறிவுரை....

Post a Comment