Friday, June 30, 2017

கணினி உலகம்

உலகைச் சுற்றி
உலகை அறிந்து கொள்வதை விட
"மௌசைத் "தட்டி
அறிந்து கொள்ளுதல்
எளிதாகவும்
விரைவாகவும்
முடிவதை நினைக்க

ஞானப் பழம் பெற
உலகைச் சுற்றிய முருகனும்
தாய் தந்தையரைச் சுற்றி
ஞானப் பழம் பெற்ற
"மூஸிக "வாகனனும்
நினைவில் வந்து போவதைத்
தவிர்க்க இயலவில்லை

உடன்
கணிப்பொறி இல்லையெனில்
உலகின் இயக்கமே
இல்லையென்றாகிப் போன
இன்றைய சூழலில்

அம்மையப்பன் தான் உலகம்
உலகம்தான் அம்மையப்பன்
என அருளிய
அம்மையப்பனின் அருளுரையும்...

Tuesday, June 27, 2017

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

காலம் சிரித்தபடி எப்போதும்போல்
நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
பயனற்றதாகிப் போனது
அந்தக் குறிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

ஒரு பார்வையற்றவனின்
உன்னத இசையில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாம் நானே என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனமாயிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள் சுமைதாங்கிகள்
அளவீடுகளின் எல்லையினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழத்தெரிந்தவானாகிப்போக
அதை அறியாதவனே  அற்பனாகிப்போகிறான்

Monday, June 26, 2017

முகமற்று ஏன் முக நூலில்...

பார்வைக் குறையுடன்
பிறந்த குழ்ந்தைக்கு
கண்ணாயிரம் எனப் பெயர் வைத்த
பெற்றோரின் மன நிலையைப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

வீராச்சாமி எனப்
பெயரிடப்பட்டவன்
எதற்கும் எப்போதும்
பயந்தவனாய் உலவுவதைப்
புரிந்து கொள்ளமுடியவில்லை

மாண்பு மிகு என
அது கொஞ்சம் குறைவானவர்கள்
போட்டுக் கொள்வதனைக் கூட
மனச்சாட்சி உறுத்தல் எனப்
புரிந்து கொள்ள முடிகிற எனக்கு

முக நூலில்
தங்கள் முகம் மறைத்து
காரசாரமாய்
பிரச்சனைக்குரிய பதிவுகளாய்
பதிவிடுபவர்களை ஏனோ
புரிந்து கொள்ளமுடியவில்லை

பெண்கள் யுவதிகள்
என்றால் கூட
அதற்குப் போதிய காரணங்களிருக்கின்றன
ஆண்கள் பதுங்கிட
அப்படி என்ன அவசியமிருக்கிறது

குற்றாலம் போய்
குளிரடிக்கிறது என
குளியலறையில் சுடு நீரில்
குளிப்பதைக் கூடச்
சகித்துக் கொள்ளமுடிகிற எனக்கு

அருவியில்
குளிருக்கு அடக்கமாய் இருக்கட்டுமென 
போர்வையினைப் போர்த்திக் குளிப்பவரை
காணச் சகிக்கவில்லை
சிரிப்புத்தான் வருகிறது

ஆம் முகம் மறைத்து
முக நூலில்
உலவுவோர் நிலையினைப் போலவும்...

Sunday, June 25, 2017

முக நூலும் வலைத்தளமும்

திருமண வரவேற்பில்
கூடுதல் அந்தஸ்துக்காக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்த கச்சேரியை
கண்டும் காணாது பலரும் கடக்கிறார்கள்

விருந்துண்ண
இடம் கிடைக்காதோர்
அல்லது உண்ட அலுப்புத் தீர
சிறிது அமர்வோர் மட்டும்
இரசித்துக் கேட்கிறார்ப்  போல
கொஞ்சம் பார்க்கிறார்கள்

அது மனவருத்தம் தருவதுபோல்
இருந்தாலும்
தன்னை அறிமுகம் செய்து கொள்ள
அதுவும் பாடகனுக்குத்
தேவையாகத்தான் இருக்கிறது

சங்கீத சபாக்களில்
ரசிப்பதற்கென்றே
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
அந்தக் கச்சேரியை
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே
கேட்டு இரசிக்கிறார்கள்

எண்ணிக்கை சிறிதாயினும்
மிகச் சரியாய்
உணர்ந்து இரசிப்போராய்
அவர்கள் இருப்பதால்
பாடகனின் வளர்ச்சிக்கு
அதுதான்  அவசியமாகப்படுகிறது

(முக நூலில் தொடர்பவர்கள் நான்காயிரமாய்
உயர்ந்திருக்கிறார்கள்  .சும்மா ஒரு .  தகவலுக்காக  )

Saturday, June 24, 2017

புத்தம் புது காலை ..


கிழக்கு வெளுக்கத் துவங்கியது 
தேவாலயம் கிளம்பிய அந்தோணி  
நாட்காட்டியைப் பார்த்தார் 
                                                       அது  2017 ஜூன் 25  என்றது

மசூதிக்கு
தொழக்கிளம்பிய ராவுத்தர்
நாட்காட்டியைப்  பார்க்க
அது ஷவ்வால் ரம்ஜான் 29 என்றது

                                              கோவிலுக்கு
                                             கும்பிடக் கிளம்பிய ஏகாம்பரம்
                                             அதனைப் பார்க்க
                                             ஹேவிளம்பி ஆனி 11 என்றது

நாட்காட்டி அறியாதப்
பறவைகள் எல்லாம்
என்றும்போல
இந்தப் புத்தம்  புது காலையை
நன்னாளை
வரவேற்கும் விதமாய்
உற்சாகமாய்
பாடியபடிச் சிறகு விரித்தன

                                               நாளுக்கே காரணமானவன்
                                               ஏதும் அறியாதவன் போல்
                                               என்றும் போல்
                                               ஒளியாய்
                                              சிரிக்கத் துவங்குகிறான்

உலகம் மெல்ல மெல்ல
அழுக்கு உதிர்த்து
வெளுக்கத் துவங்குகிறது 



  

Thursday, June 22, 2017

. இது குறையாது இருக்கிற இடம் ...

நாங்கள் சன்னதியின் வாசலில் இருந்தோம்

 "இது முட்டாள்களின் சரணாலயம் "
எனச் சொல்லிப்போனார் 
ஒரு கருஞ்சட்டைக் காரர் 

"எல்லாம அவன் கொடுத்தது
அவனிடம் எப்படிக்  கணக்குப் பார்ப்பது "
மொத்தமாக உண்டியலில்
பணத்தை கொட்டிக்கொண்டிருந்தார்
ஒரு தொந்தி பெருத்தக் " கன "வான்

"உனக்கு எப்ப மனம் வருகிறதோ
அப்போது செய்
நான் விடாது வந்துகொண்டுதான் இருப்பேன்
நீயா நானா பார்த்துவிடுவோம் "
தானாகபுலம்பிக் கொண்டிருந்தார்
ஒரு கூன் விழுந்தபெரியவர்

"மூன்றும்  மாறுபட்ட  நிலையாய் இருக்கிறதே
 இதில் எது சரி
மூன்றும்  சரியாய் இருக்கவோ
மூன்றும்  தவறாய் இருக்க   வாய்ப்பில்லையே "
குழப்பத்தில் இருந்தான நண்பன்

" இங்கு நம்பிக்கையின்றி வருபவர்கள்
எதையும் எடுத்துச் செல்ல வழியில்லை

வெறுங் கையுடன் வருபவர்கள்
கையளவே  கொண்டு போகிறார்கள்

அண்டாவுடன் வருபவர்கள்
அள்ளிக் கொண்டு போகிறார்கள்
.
இது என்றும் குறையாது
எல்லாம்இருக்கிற இடம்
ஆயினும்  கொடுக்கிற இடமில்லை

அவரவர் சக்திக்கு ஏற்றார்போல
எடுத்துச்  செல்கிற இடம் " என்றேன்

நண்பன் கீழ் மேலாய்  தலையாட்டினான்
அது ஏற்றுக் கொண்டது போலவும் இருந்தது
ஏற்றுக் கொள்ளாதது போலவும் இருந்தது

Wednesday, June 21, 2017

சின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலங்  கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்டக்  கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவால்  ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டித்  திமிராய் நிற்கும்
மலையே ஆயினும்
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே